1 | தீமை செய்வோரைக் கண்டு மனம் புழுங்காதே: பொல்லாங்கு செய்வாரைக் கண்டு பொறாமைப்படாதே: |
2 | ஏனெனில், அவர்கள் புல்லைப் போல் விரைவில் உலர்ந்து போவர்: பசும் பூண்டைப்போல் வாடிப்போவர். |
3 | ஆண்டவரை நம்பு: நலமானதைச் செய்: நாட்டிலேயே குடியிரு: நம்பத் தக்கவராய் வாழ். |
4 | ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்: உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். |
5 | உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு: அவரையே நம்பியிரு: அவரே உன் சார்பில் செயலாற்றுவார். |
6 | உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். |
7 | ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு: தம் வழியில் வெற்றி காண்போரையும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே. |
8 | வெஞ்சினம் கொள்ளாதே: வெகுண்டெழுவதை விட்டுவிடு: எரிச்சலடையாதே: அதனால் தீமைதான் விளையும். |
9 | தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்: ஆண்டவருக்காகக் காத்திருப்போரே நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர். |
10 | இன்னும் சிறிதுகாலம்தான்: பிறகு பொல்லார் இரார்: அவர்கள் இருந்த இடத்தில் நீ அவர்களைத் தேடினால் அவர்கள் அங்கே இரார். |
11 | எளியோர் நிலத்தை உடைமையாகப் பெறுவர்: அவர்கள் வளமிகு வாழ்க்கையில் இன்பம் காண்பர். |
12 | பொல்லார் நேர்மையாளருக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்: அவர்களைப் பார்த்துப் பல்லை நெரிக்கின்றனர். |
13 | என் தலைவர் அவர்களைப் பார்த்து எள்ளி நகைக்கின்றார்: அவர்களது முடிவுகாலம் நெருங்குவதை அவர் காண்கின்றார். |
14 | எளியோரையும் வறியோரையும் வீழ்த்தவும், நேர்மையான வழியில் நடப்போரைக் கொல்லவும் பொல்லார் வாளை உருவுகின்றனர்: வில்லை நாணேற்றுகின்றனர். |
15 | ஆனால், அவர்கள் வாள் அவர்கள் நெஞ்சிலேயே பாயும்: அவர்கள் வில்லும் முறிக்கப்படும். |
16 | பொல்லாரின் திரளான செல்வத்தைவிட நல்லாரின் சிறிதளவு பொருளே சிறந்தது. |
17 | பொல்லாரின் தோள்வலிமை முறிக்கப்படும்: ஆனால் நேர்மையாளரை ஆண்டவர் தாங்கிடுவார். |
18 | சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்: அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும். |
19 | கேடுகாலத்தில் அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை: பஞ்ச காலத்திலும் அவர்கள் நிறைவடைவார்கள். |
20 | ஆனால், பொல்லார் அழிவுக்கு ஆளாவர்: ஆண்டவரின் எதிரிகள் கொழுத்த பலியாடுகளுக்கு ஒப்பாவர். அவர்கள் எரியுண்டு புகையென மறைவர். |
21 | பொல்லார் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்: நேர்மையாளரோ மனமிரங்கிப் பிறருக்குக் கொடுப்பர். |
22 | இறைவனின் ஆசி பெற்றோர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்: அவரால் சபிக்கப்பட்டோர் வேரறுக்கப்படுவர். |
23 | தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார். |
24 | அவர்கள் விழுந்தாலும் வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்: ஆண்டவர் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்துவார். |
25 | இளைஞனாய் இருந்திருக்கிறேன்: இதோ! முதியவன் ஆகிவிட்டேன்: ஆனால், நேர்மையாளர் கைவிடப்பட்டதை நான் கண்டதில்லை: அவர்களுடைய மரபினர் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை. |
26 | நேர்மையாளர் எப்போதும் மனமிரங்கிக் கடன் கொடுப்பர்: அவர்களின் மரபினர் இறையாசி பெற்றவராய் இருப்பர். |
27 | தீமையினின்று விலகு: நல்லது செய்: எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய். |
28 | ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்: தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை: அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர். |
29 | நேர்மையாளர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்: அதிலேயே என்றென்றும் குடியிருப்பர். |
30 | நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்: அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும். |
31 | கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது: அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை. |
32 | பொல்லார் நேர்மையாளரை வேவு பார்த்துக் கொண்டிருப்பர்: அவர்களைக் கொன்றுவிட வழிதேடுவர். |
33 | ஆனால், ஆண்டவர் நேர்மையாளரை அவர்களின் கையில் ஒப்புவிக்கமாட்டார்: நீதி விசாரணையின்போது அவர்களைத் தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளாக்கமாட்டார். |
34 | ஆண்டவருக்காகக் காத்திரு: அவர்தம் வழியைப் பின்பற்று: அப்பொழுது நீ நிலத்தை உடைமையாக்கிக்கொள்ளும்படி அவர் உன்னை உயர்த்துவார். பொல்லார் வேரறுக்கப்படுவதை நீ காண்பாய். |
35 | வளமான நிலத்தில் தழைத்தோங்கும் மரம்போல் கொடிய நெஞ்சங்கொண்ட பொல்லார் செழித்திருக்கக் கண்டேன். |
36 | ஆனால், அவர்கள் மறைந்துவிட்டார்கள்: அந்தோ! அவர்கள் அங்கில்லை: தேடிப் பார்த்தேன்: அவர்களைக் காணவில்லை. |
37 | சான்றோரைப் பார்: நேர்மையானவரைக் கவனி: அமைதியையே நாடும் அம்மனிதருக்கு வழிமரபினர் இருப்பர். |
38 | அநீதியாளர் அனைவரும் ஒன்றாக அழிக்கப்படுவர்: பொல்லாரின் வழிமரபினர் வேரறுக்கப்படுவர். |
39 | நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே. |
40 | ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்: பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்: அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். |