வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 7

                   
புத்தகங்களைக் காட்டு
1என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகந்தேன்: என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.
2இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்: விடுவிப்போர் எவரும் இரார்.
3என் கடவுளாகிய ஆண்டவரே, நான் இவற்றைச் செய்திருந்தால்-என் கை தவறிழைத்திருந்தால்,
4என்னோடு நல்லுறவு கொண்டிருந்தவனுக்கு நான் தீங்கிழைத்திருந்தால், என் பகைவனைக் காரணமின்றிக் காட்டிக்கொடுத்திருந்தால்-
5எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்: என்னைத் தரையில் தள்ளி மிதித்து நசுக்கட்டும்: என் பெருமையைப் புழுதியில் புதைக்கட்டும். (சேலா)
6ஆண்டவரே, சினங்கொண்டு எழுந்தருளும்: என் பகைவரின் சீற்றத்தை அடக்க வாரும்: எனக்காக விழித்தெழும்: ஏனெனில், நீதியை நிலைநாட்டுபவர் நீர் ஒருவரே.
7எல்லா இனத்தாரும் ஒன்றுகூடி உம்மைச் சூழச் செய்யும்: அவர்கள்மீது உயரத்தினின்று ஆட்சி செலுத்தும்.
8ஆண்டவரே, நீரே மக்களினத்தார் அனைவருக்கும் நீதி வழங்குபவர்: ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும்.
9பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்: நல்லாரை நிலைநிறுத்தும்: நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்: நீதி அருளும் கடவுள்.
10கடவுளே என் கேடயம்: நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார்.
11கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி: நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத இறைவன்.
12பொல்லார் மனமாற்றம் அடையாவிடில், அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்: வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார்.
13கொலைக் கருவிகளை ஆயத்தமாக்குவார்: அம்புகளை அனல் பறக்கும்படி எய்வார்:
14ஏனெனில், பொல்லார் கொடுமையைக் கருக்கொள்கின்றனர்: அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி, பொய்ம்மையைப் பெற்றெடுக்கின்றனர்.
15அவர்கள் குழியை வெட்டி ஆழமாகத் தோண்டுகின்றனர்: அவர்களே வெட்டிய விழுகின்றனர்:
16அவர்கள் செய்த கேடு அவர்கள் தலைக்கே திரும்பும். அவர்கள் செய்த கொடுமை அவர்கள் உச்சந்தலையிலேயே விழும்.
17ஆண்டவர் வழங்கிய நீதிக்காக அவருக்கு நன்றி கூறுவேன்: உன்னதரான ஆண்டவரின் பெயரைப் போற்றிப்பாடுவேன்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.