1 | ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! |
2 | நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்: என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். |
3 | நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்: என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. |
4 | ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகு முன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர். |
5 | எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்: உமது கையால் என்னைப் பற்றிப்பிடிக்கின்றீர். |
6 | என்னைப்பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது: அது உன்னதமானது: என் அறிவுக்கு எட்டாதது. |
7 | உமது ஆற்றலைவிட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்? |
8 | நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! |
9 | நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும், |
10 | அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்: உமது வலக்கை என்னைப் பற்றிக் கொள்ளும். |
11 | 'உண்மையில் இருள் என்னை மூடிக்கொள்ளாதோ? ஒளி சூழ்வதென இரவும் என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ?' என்று நான் சொன்னாலும், |
12 | இருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை: இரவும் பகலைப்போல ஒளியாய் இருக்கின்றது: இருளும் உமக்கு ஒளிபோல் இருக்கும். |
13 | ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே! |
14 | அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்: உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். |
15 | என் எலும்பு உமக்கு மறைவானதன்று: மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர். |
16 | உம் கண்கள் கருமுளையில் என் உறுப்புகளைக் கண்டன: நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள நாள்கள் எல்லாம் எனக்கு வாழ்நாள் எதுவுமே இல்லாத காலத்திலேயே உமது நூலில் எழுதப்பட்டுள்ளன. |
17 | இறைவா! உம்முடைய நினைவுகளை நான் அறிந்துகொள்வது எத்துணைக் கடினம்! அவற்றின் எண்ணிக்கை எத்துணைப் பெரிது! |
18 | அவற்றைக் கணக்கிட நான் முற்பட்டால், அவை கடல் மணலிலும் மிகுதியாய் உள்ளன: அவற்றை எண்ணி முடிக்க வேண்டுமானால், நீர் உள்ளளவும் நான் வாழ வேண்டும். |
19 | கடவுளே! நீர் தீயோரைக் கொன்றுவிட்டால், எவ்வளவு நலம்! இரத்தப்பழிகாரர் என்னிடமிருந்து அகன்றால், எத்துணை நன்று! |
20 | ஏனெனில், அவர்கள் தீயமனத்துடன் உமக்கு எதிராய்ப் பேசுகின்றார்கள்: அவர்கள் தலைதூக்கி உமக்கு எதிராய்ச் சதி செய்கின்றார்கள். |
21 | ஆண்டவரே! உம்மை வெறுப்போரை நானும் வெறுக்காதிருப்பேனோ? உம்மை எதிர்க்க எழுவோரை நானும் வெறுக்கின்றேன் அன்றோ? |
22 | நான் அவர்களை அடியோடு வெறுக்கின்றேன்: அவர்கள் எனக்கும் எதிரிகள் ஆனார்கள். |
23 | இறைவா! நீர் என் உள்ளத்தை ஆய்ந்து அறியும்: என் எண்ணங்களை அறியுமாறு என்னைச் சோதித்துப் பாரும். |
24 | உம்மை வருத்தும் வழியில் நான் செல்கின்றேனோ என்று பாரும்: என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும். |