| 1 | அல்லேலூயா! ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில் அவர் நல்லவர்! என்றென்றுமுள்ளது அவரது பேரன்பு! |
| 2 | ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை யாரால் இயம்ப இயலும்? ஆவர்தம் புகழை யாரால் விளம்பக் கூடும்? |
| 3 | நீதிநெறி காப்போர் பேறு பெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபேற்றோர்! |
| 4 | ஆண்டவரே! நீர் உம்மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவு கூரும்! அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணைசெய்யும்! |
| 5 | நீர் தேர்ந்தெடுத்த மக்களின் நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்: உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்! அப்போது, உமது உரிமைச் சொத்தான மக்களோடு உம்மைப் போற்றிட இயலும். |
| 6 | எங்கள் மூதாதையரின் வழிநடந்து, நாங்களும் பாவம் செய்தோம்: குற்றம் புரிந்தோம்: தீமை செய்தோம். |
| 7 | எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர்செய்த வியத்தகு செயல்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை: உமது மாபெரும் பேரன்பை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை: மாறாக உன்னதமானவரை எதிர்த்துச் செங்கடல் ஓரத்தில் கலகம் செய்தனர். |
| 8 | அவரோ பெயரின் பொருட்டு அவர்களை விடுவித்தார்: இவ்வாறு அவர் தமது வலிமையை வெளிப்படுத்தினார். |
| 9 | அவர் செங்கடலை அதட்டினார்: அது உலர்ந்து போயிற்று: பாலை நிலத்தில் நடத்திச் செல்வது போல் அவர்களை ஆழ்கடல் வழியே நடத்திச்சென்றார். |
| 10 | எதிரியின் கையினின்று அவர்களை விடுவித்தார்: பகைவரின் பிடியினின்று அவர்களை மீட்டார். |
| 11 | அவர்களுடைய எதிரிகளைக் கடல்நீர் மூழ்கடித்தது: அவர்களுள் ஒருவர்கூட எஞ்சியிருக்கவில்லை. |
| 12 | அப்பொழுது, அவர்கள் அவருடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்தார்கள்: அவரைப் புகழ்ந்து பாடினார்கள். |
| 13 | ஆயினும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவிலேயே மறந்துவிட்டார்கள்: அவரது அறிவுரைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை. |
| 14 | பாலைநிலத்தில் அவர்கள் பெருவிருப்புக்கு இடங்கொடுத்தார்கள். பாழ்வெளியில் அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள். |
| 15 | அவர்கள் கேட்டதை அவர் அவர்களுக்குச் கொடுத்தார்: அவர்களின் உயிரை அழிக்குமாறு அவர்கள்மீது நோயை அனுப்பினார். |
| 16 | பாளையத்தில் இருக்கும்போது மோசேயின்மீதும், ஆண்டவருக்காகத் திருநிலைபெற்ற ஆரோன்மீதும், அவர்கள் பொறாமை கொண்டார்கள். |
| 17 | நிலம்பிளந்து தாத்தானை விழுங்கியது: அபிராமின் கும்பலை அப்படியே புதைத்து விட்டது. |
| 18 | அக்கும்பலிடையே நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது: தீயோரைத் தீப்பிழம்பு எரித்தது. |
| 19 | அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக் குட்டியைச் செய்துகொண்டனர்: வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்: |
| 20 | தங்கள் “மாட்சி”க்குப் பதிலாக புல்தின்னும் காளையின் உருவத்தைச் செய்து கொண்டனர்: |
| 21 | தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்: எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்: |
| 22 | காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்: செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். |
| 23 | ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்: ஆனால், அவரால் தேர்ந்து கொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர் போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். |
| 24 | அருமையான நாட்டை அவர்கள் இகழ்ந்தார்கள்: அவரது வாக்குறுதியில் நம்பிக்கை கொள்ளவில்லை. |
| 25 | அவர்கள் தங்களின் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்: ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை. |
| 26 | ஆகவே அவர் அவர்களுக்கு எதிராகத் தம் கையை ஓங்கி 'நான் உங்களைப் பாலைநிலத்தில் வீழ்ச்சியுறச் செய்வேன்: |
| 27 | உங்கள் வழிமரபினரை வேற்றினங்களிடையிலும் அன்னிய நாடுகளிலும் சிதறடிப்பேன்' என்றார். |
| 28 | பின்னர் அவர்கள் பாகால்பெயோரைப் பற்றிக் கொண்டார்கள். உயிரற்ற தெய்வங்களுக்குப் பலியிட்டவற்றை உண்டார்கள்: |
| 29 | இவ்வாறு தங்கள் செய்கைகளினால் அவருக்குச் சினமூட்டினார்கள்: ஆகவே, கொள்ளைநோய் அவர்களிடையே பரவிற்று. |
| 30 | பினகாசு கொதித்தெழுந்து தலையிட்டதால் கொள்ளைநோய் நீங்கிற்று. |
| 31 | இதனால், தலைமுறை தலைமுறையாக என்றென்றும், அவரது செயல் நீதியாகக் கருதப்பட்டது. |
| 32 | மெரிபாவின் ஊற்றினருகில் அவருக்குச் சினமூட்டினார்கள். அவர்களின் பொருட்டு மோசேக்கும் தீங்கு நேரிட்டது. |
| 33 | மோசேக்கு அவர்கள் மனக்கசப்பை ஏற்படுத்தியதால் அவர் முன்பின் பாராது பேசினார். |
| 34 | ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, மக்களினங்களை அவர்கள் அழிக்கவில்லை. |
| 35 | வேற்றினத்தாரோடு கலந்துறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர்: |
| 36 | அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்: அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின. |
| 37 | அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர்: |
| 38 | மாசற்ற இரத்தத்தை, தங்கள் புதல்வர் புதல்வியரின் இரத்தத்தைச் சிந்தினர்: கானான் நாட்டுத் தெய்வங்களின் சிலைகளுக்கு அவர்களைப் பலியிட்டார்கள்: அவர்களின் இரத்தத்தால் நாடு தீட்டுப்பட்டது. |
| 39 | அவர்கள் தங்கள் செயல்களால் தங்களைக் கறைப்படுத்திக் கொண்டனர்: தங்கள் செயல்கள் மூலம் வேசித்தனம் செய்தனர். |
| 40 | எனவே, ஆண்டவரின் சினம் அவர்தம் மக்களுக்கெதிராகப் பற்றியெரிந்தது: தமது உரிமைச் சொத்தை அவர் அருவருத்தார். |
| 41 | வேற்றினத்தாரின் கையில் அவர் அவர்களை ஒப்படைத்தார்: அவர்களை வெறுத்தோரே அவர்களை ஆட்சி செய்தனர். |
| 42 | அவர்கள் எதிரிகள் அவர்களை ஒடுக்கினர்: தங்கள் கையின்கீழ் அவர்களைத் தாழ்த்தினர். |
| 43 | பன்முறை அவர் அவர்களை விடுவித்தார்: அவர்களோ திட்டமிட்டே அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்: தங்கள் தீச்செயல்களினால் அவர்கள் தாழ்நிலை அடைந்தனர். |
| 44 | எனினும் அவர் அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து, அவர்களது துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார். |
| 45 | அவர்களுக்கு உதவுமாறு, அவர் தமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்: தமது பேரன்பிற்கேற்பக் கழிவிரக்கம் கொண்டார்: |
| 46 | அவர்களைச் சிறைசெய்த அனைவர் முன்னிலையிலும் அவர்கள் இரக்கம் பெறும்படி செய்தார். |
| 47 | எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! எங்களை விடுவித்தருளும்: வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும்: அப்பொழுது நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்: உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம். |
| 48 | இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக! மக்கள் அனைவரும்”ஆமென்” எனச் சொல்வார்களாக! அல்லேலூயா! |