| 1 | ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். |
| 2 | அவருக்குப் பாடல் பாடுங்கள்: அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! |
| 3 | அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்: ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! |
| 4 | ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! |
| 5 | அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். |
| 6 | அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! |
| 7 | அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. |
| 8 | அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்: ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறதியை நினைவுகூர்கின்றார். |
| 9 | ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். |
| 10 | யாக்கோபுக்கு நியமமாகவும் இஸ்ரயேலுக்கு என்றுமுள உடன்படிக்கையாகவும் அதை அவர் உறுதிப்படுத்தினார். |
| 11 | 'கானான் நாட்டை உங்களுக்கு அளிப்பேன்: அப் பங்கே உங்களுக்கு உரிமைச் சொத்தாய் இருக்கும்' என்றார் அவர். |
| 12 | அப்போது, அவர்கள் மதிப்பிலும் எண்ணிக்கையிலும் குறைந்தவராய் இருந்தார்கள்: அங்கே அவர்கள் அன்னியராய் இருந்தார்கள். |
| 13 | அவர்கள் ஒரு நாட்டினின்று மற்றொரு நாட்டிற்கும் ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும் அலைந்து திரிந்தார்கள். |
| 14 | யாரும் அவர்களை ஒடுக்குமாறு அவர் விட்டு விடவில்லை: அவர்களின் பொருட்டு மன்னர்களை அவர் கண்டித்தார். |
| 15 | 'நான் அருள்பொழிவு செய்தாரைத் தொடாதீர்! என் இறைவாக்கினர்க்குத் தீங்கிழைக்காதீர்' என்றார் அவர். |
| 16 | நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்: உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார். |
| 17 | அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பிவைத்தார்: யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார். |
| 18 | அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர். |
| 19 | காலம் வந்தது: அவர் உரைத்தது நிறைவேறிற்று: ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது. |
| 20 | மன்னர் ஆளனுப்பி அவரை விடுதலை செய்தார்: மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்: |
| 21 | அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்: தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார். |
| 22 | அவர் அரச அலுவலரைப் பயிற்றுவித்தார்: அவருடைய அவைப்பெரியோருக்கு நல்லறிவு புகட்டினார். |
| 23 | பின்னர், இஸ்ரயேல் எகிப்துக்கு வந்தார்: யாக்கோபு காம் நாட்டில் அன்னியராய் வாழ்ந்தார். |
| 24 | ஆண்டவர் தம் மக்களைப் பல்கிப் பெருகச் செய்தார்: அவர்களின் எதிரிகளைவிட அவர்களை வலிமைமிக்கவர்கள் ஆக்கினார். |
| 25 | தம் மக்களை வெறுக்கும்படியும், தம் அடியார்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும்படியும் அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார். |
| 26 | அவர்தம் ஊழியராகிய மோசேயையும், தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார். |
| 27 | அவர்கள் எகிப்தியரிடையே அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்: காம் நாட்டில் வியத்தகு செயல்களைச் செய்து காட்டினர். |
| 28 | அவர் இருளை அனுப்பி நாட்டை இருட்டாக்கினார்: அவருடைய சொற்களை எதிர்ப்பார் இல்லை. |
| 29 | அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார்: அவற்றிலிருந்த மீன்களைச் சாகடித்தார். |
| 30 | அவர்களது நாட்டிற்குள் தவளைகள் ஏறிவந்தன: மன்னர்களின் பள்ளியறைகளுக்குள்ளும் அவை நுழைந்தன. |
| 31 | அவர் கட்டளையிட, அவர்களுடைய நாடு முழுவதிலும் ஈக்களும் கொசுக்களும் திரண்டு வந்தன. |
| 32 | அவர் நீருக்குப் பதிலாகக் கல்லை மழையாகப் பொழிந்தார்: அவர்களது நாடெங்கும் மின்னல் தெறிக்கச் செய்தார். |
| 33 | அவர் அவர்களின் திராட்சைச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார்: அவர்களது நாடெங்குமுள்ள மரங்களை முறித்தார். |
| 34 | அவரது சொல்லால் வெட்டுக் கிளிகளும் எண்ணற்ற வெட்டுப்புழுக்களும் அங்கே தோன்றின. |
| 35 | அவை அவர்களது நாட்டின் பயிர் பச்சைகளைத் தின்றுத்தீர்த்தன: அவர்களது நிலத்தின் விளைச்சல்களை விழுங்கிவிட்டன. |
| 36 | அவர் அவர்களது நாட்டின் தலைப்பேறுகள் அனைத்தையும் தாக்கினார்: அவர்களது ஆண்மையின் முதற்பேறுகள் அனைத்தையும் வீழ்த்தினார். |
| 37 | அவர் இஸ்ரயேலரை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச் செய்தார்: அவர்கள் குலங்களில் எவரும் தளர்ந்து போகவில்லை. |
| 38 | அவர்கள் வெளியேறுகையில் எகிப்தியர் அகமகிழ்ந்தனர்: ஏனெனில், இஸ்ரயேலர் பற்றிய பேரச்சம் அவர்களை ஆட்கொண்டிருந்தது. |
| 39 | அவர் அவர்களைப் பாதுகாக்க மேகத்தைப் பரப்பினார்: இரவில் ஒளிதர நெருப்பைத் தந்தார். |
| 40 | அவர்கள் கேட்டதால் அவர் காடைகளை வரச்செய்தார்: வானினின்று வந்த உணவால் அவர்களை நிறைவுறச் செய்தார். |
| 41 | அவர் கற்பாறையைப் பிளந்தார்: தண்ணீர் பொங்கி வழிந்தது: அது பாலைநிலங்களில் ஆறாய் ஓடிற்று. |
| 42 | ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார். |
| 43 | அவர் தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்: அவர்தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார். |
| 44 | அவர் வேற்றினத்தாரின் நாடுகளை அவர்களுக்கு அளித்தார்: மக்களினங்களது உழைப்பின் பயனை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்தார். |
| 45 | அவர்கள் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், அவருடைய சட்டங்களின்படி ஒழுகவுமே அவர் இவ்வாறு செய்தார். அல்லேலூயா! |