| 1 | என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். |
| 2 | பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்: வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர்: |
| 3 | நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்: கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்: காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றனவர்! |
| 4 | காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்: தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர். |
| 5 | நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்: அது என்றென்றும் அசைவுறாது. |
| 6 | அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது: மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது: |
| 7 | நீவீர் கண்டிக்கவே அது விலகி ஓடியது: நீவீர் இடியென முழங்க, அது திகைப்புற்று ஓடியது: |
| 8 | அது மலைகள்மேல் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, அதற்கெனக் குறித்த இடத்தை அடைந்தது: |
| 9 | அது மீறிச்செல்லாதவாறு அதற்கு எல்லை வகுத்தீர்: பூவுலகை அது மீண்டும் மூடிவிடாதபடி செய்தீர்: |
| 10 | பள்ளத்தாக்குகளில் நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்: அவை மலைகளிடையே பாய்ந்தோடும்: |
| 11 | அவை காட்டு விலங்குகள் அனைத்திற்கும் குடிக்கத் தரும்: காட்டுக் கழுதைகள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்: |
| 12 | நீருற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக்கொள்கின்றன: அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன: |
| 13 | உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்: உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது. |
| 14 | கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்: மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றர்: இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கின்றீர்: |
| 15 | மனித உளத்திற்கு மகிழ்ச்சியூட்டத் திராட்சை இரசமும், முகத்திற்குக் களையூட்ட எண்ணெயும் மனித உள்ளத்திற்குப் புத்துணர்வூட்ட அப்பமும் அளிக்கின்றீர். |
| 16 | ஆண்டவரின் மரங்களுக்கு - லெபனோனில் அவர் நட்ட கேதுரு மரங்களுக்கு -நிறைய நீர் கிடைக்கின்றது. |
| 17 | அங்கே பறவைகள் கூடுகள் கட்டுகின்றன: தேவதாரு மரங்களில் கொக்குகள் குடியிருக்கின்றன. |
| 18 | உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்குத் தங்குமிடமாகும்: கற்பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாகும். |
| 19 | காலங்களைக் கணிக்க நிலவை நீர் அமைத்தீர்: ஆதவன் தான் மறையும் நேரத்தை அறிவான். |
| 20 | இருளை நீர் தோன்றச் செய்யவே, இரவு வருகின்றது: அப்போது, காட்டு விலங்குகள் அனைத்தும் நடமாடும். |
| 21 | இளஞ்சிங்கங்கள் இரைக்காகக் கர்ச்சிக்கின்றன: அவை இறைவனிடமிருந்து தங்கள் உணவைத் தேடுகின்றன. |
| 22 | கதிரவன் எழவே அவை திரும்பிச் சென்று தம் குகைகளுக்குள் படுத்துக்கொள்கின்றன. |
| 23 | அப்பொழுது மானிடர் வேலைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்: அவர்கள் மாலைவரை உழைக்கின்றனர். |
| 24 | ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. |
| 25 | இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்: அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன. |
| 26 | அங்கே கப்பல்கள் செல்கின்றன: அங்கே துள்ளிவிளையாட லிவியத்தானைப் படைத்தீர்! |
| 27 | தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன. |
| 28 | நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன: நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. |
| 29 | நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்: நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். |
| 30 | உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன: மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். |
| 31 | ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! |
| 32 | மண்ணுலகின்மீது அவர் தம் பார்வையைத் திருப்ப, அது நடுங்கும்: மலைகளை அவர் தொட, அவை புகை கக்கும். |
| 33 | நான் வாழும் நாளெல்லாம் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்: என்னுயிர் உள்ளவரையிலும் என் கடவுளுக்குப் புகழ் சாற்றிடுவேன். |
| 34 | என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். |
| 35 | பாவிகள் பூவுலகினின்று ஒழிந்து போவார்களாக! தீயோர்கள் இனி இல்லாது போவார்களாக! என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! அல்லேலூயா! |