| 1 | ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில், அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. |
| 2 | ஆண்டவரால் மீட்படைந்தோர், எதிரியின் கையினின்று அவரால் மீட்கப்பட்டோர், |
| 3 | கிழக்கினின்றும், மேற்கினின்றும் வடக்கினின்றும் தெற்கினின்றும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டோர் சொல்வார்களாக. |
| 4 | பாலைநிலத்தில் பாழ் வெளியில் சிலர் அலைந்து திரிந்தனர்: குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை: |
| 5 | பசியுற்றனர்: தாகமுற்றனர்: மனச்சோர்வுற்றுக் களைத்துப்போயினர். |
| 6 | தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தார். |
| 7 | நேரிய பாதையில் அவர்களை வழிநடத்தினார்: குடியிருக்கும் நகரை அவர்கள் அடையச் செய்தார். |
| 8 | ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! |
| 9 | ஏனெனில், தாகமுற்றோர்க்கு அவர் நிறைவளித்தார்: பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார். |
| 10 | சிலர் காரிருளிலும் சாவின் நிழலிலும் கிடந்தனர்: விலங்கிடப்பட்டுத் துன்பத்தில் உழன்றனர். |
| 11 | ஏனெனில், அவர்கள் இறைவனின் கட்டளைகளை எதிர்த்து நின்றனர்: உன்னதரின் அறிவுரைகளைப் புறக்கணித்தனர். |
| 12 | கடும் வேலையால் அவர் அவர்களின் உள்ளத்தைச் சிறுமைப்படுத்தினார்: அவர்கள் நிலைகுலைந்து போயினர்: அவர்களுக்குத் துணைசெய்வார் எவருமிலர். |
| 13 | அவர்கள் தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர் அவர்களைத் துன்பங்களிலிருந்து விடுவித்தார். |
| 14 | காரிருளிலும் சாவின் நிழலிலும் கிடந்த அவர்களை அவர் வெளிக்கொணர்ந்தார். அவர்களைப் பிணித்திருந்த தளைகளைத் தகர்த்தெறிந்தார். |
| 15 | ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! |
| 16 | ஏனெனில், வெண்கலக் கதவுகளை அவர் தகர்த்துவிட்டார்: இரும்புத் தாழ்ப்பாள்களை உடைத்துவிட்டார். |
| 17 | சிலர் தங்கள் தீயநெறிகளை முன்னிட்டு நோய்களுக்கு உள்ளாயினர்: அவர்களுடைய தீச்செயல்களின் பொருட்டுத் துன்பங்களுக்கு உள்ளாயினர். |
| 18 | எல்லா உணவையும் அவர்களின் மனம் வெறுத்தது: சாவின் வாயில்களை அவர்கள் நெருங்கினார்கள். |
| 19 | அவர்கள் தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர் அவர்களைத் துன்பங்களினின்று விடுவித்தார். |
| 20 | தம் வார்த்தையை அவர் அனுப்பி அவர்களைக் குணப்படுத்தினார்: அழிவினின்று அவர்களை விடுவித்தார். |
| 21 | ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! |
| 22 | நன்றிப் பலிகளை அவர்கள் செலுத்துவார்களாக! அக்களிப்போடு அவர்தம் செயல்களைப் புகழ்ந்தேத்துவார்களாக! |
| 23 | சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்: நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர். |
| 24 | அவர்களும் ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்: ஆழ்கடலில் அவர்தம் வியத்தகு செயல்களைப் பார்த்தனர். |
| 25 | அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல் காற்று எழுந்தது: அது கடலின் அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது. |
| 26 | அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்: பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்: அவர்கள் உள்ளமோ இக்கட்டால் நிலைகுலைந்தது. |
| 27 | குடிவெறியரைப் போல் அவர்கள் தள்ளாடித் தடுமாறினர்: அவர்களின் திறனெல்லாம் பயனற்றுப் போயிற்று. |
| 28 | தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார். |
| 29 | புயல்காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்: கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன. |
| 30 | அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்: அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார். |
| 31 | ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு அவர்கள் அவருக்கு நன்றி செலுத்தவார்களாக! |
| 32 | மக்களின் பேரவையில் அவரைப் புகழ்ந்தேத்துவார்களாக! பெரியோரின் மன்றத்தில் அவரைப் போற்றுவார்களாக! |
| 33 | ஆறுகளை அவர் பாலை நிலமாக்கினார்: நீரோடைகளை அவர் வறண்ட தரையாக்கினார். |
| 34 | செழிப்பான நிலத்தை உவர் நிலமாக்கினார்: அங்குக் குடியிருந்தோரின் தீச்செயலை முன்னிட்டு இப்படிச் செய்தார். |
| 35 | பாலை நிலத்தையோ நீர்த் தடாகமாக மாற்றினார்: வறண்ட நிலத்தை நீருற்றுகளாகச் செய்தார். |
| 36 | பசியுற்றோரை அங்கே குடியேற்றினார்: அவர்கள் அங்கே குடியிருக்க நகரொன்றை அமைத்தனர். |
| 37 | அங்கே அவர்கள் வயலில் விதைத்தனர்: திராட்சைத் தோட்டங்களை அமைத்தனர்: அறுவடைக்கான கனிகளை அவை ஈன்றன. |
| 38 | அவர் ஆசி வழங்கினார்: அவர்கள் மிகுதியாகப் பல்கிப் பெருகினர்: அவர்களின் கால்நடைகளைக் குறைந்துபோக விடவில்லை. |
| 39 | பின்பு, அவர்களின் தொகை குறைந்தது: அவர்கள் ஒடுக்கப்பட்டு, துன்புறுத்துப்பட்டு இகழ்ச்சிக்கு உள்ளாயினர். |
| 40 | தலைவர்கள்மேல் இகழ்ச்சியைக் கொட்டி, அவர்களைப் பாதையற்ற பாழ் வெளியில் அலையச் செய்தார் அவர். |
| 41 | ஆனால், எளியோரை அவர் துன்ப நிலையினின்று தூக்கிவிட்டார், அவர்கள் குடும்பங்களை மந்தை போல் பெருகச் செய்தார். |
| 42 | நேர்மையுள்ளோர் இதைப் பார்த்து மகிழ்கின்றனர்: தீயோர் யாவரும் தங்கள் வாயை மூடிக்கொள்கின்றனர். |
| 43 | ஞானமுள்ளோர் இவற்றைக் கவனத்தில் கொள்ளட்டும்! அவர்கள் ஆண்டவரின் பேரன்பை உணர்ந்து கொள்ளட்டும்! |