1 | ஆபிரகாமின் மகனும் தாவீதின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: |
2 | ஆபிரகாமின் மகன் ஈசாக்கு: ஈசாக்கின் மகன் யாக்கோப்பு: யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். |
3 | யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்: பெரேட்சின் மகன் எட்சரோன்: எட்சரோனின் மகன் இராம். |
4 | இராமின் மகன் அம்மினதாபு: அம்மினதாபின் மகன் நகசோன்: நகசோனின் மகன் சல்மோன். |
5 | சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு: போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது: ஓபெதின் மகன் ஈசாய். |
6 | ஈசாயின் மகன் தாவீது அரசர்: தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். |
7 | சாலமோனின் மகன் ரெகபயாம்: ரெகபயாமின் மகன் அபியாம்: அபியாமின் மகன் ஆசா. |
8 | ஆசாவின் மகன் யோசபாத்து: யோசபாத்தின் மகன் யோராம்: யோராமின் மகன் உசியா. |
9 | உசியாவின் மகன் யோத்தாம்: யோத்தாமின் மகன் ஆகாசு: ஆகாசின் மகன் எசேக்கியா. |
10 | எசேக்கியாவின் மகன் மனாசே: மனாசேயின் மகன் ஆமொன்: ஆமொனின் மகன் யோசியா. |
11 | யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள். |
12 | பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்: செயல்தியேலின் மகன் செருபாபேல். |
13 | செருபாபேலின் மகன் அபியூது: அபியூதின் மகன் எலியாக்கிம்: எலியாக்கிமின் மகன் அசோர். |
14 | அசோரின் மகன் சாதோக்கு: சாதோக்கின் மகன் ஆக்கிம்: ஆக்கிமின் மகன் எலியூது. |
15 | எலியூதின் மகன் எலயாசர்: எலயாசரின் மகன் மாத்தான்: மாத்தானின் மகன் யாக்கோபு. |
16 | யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு. |
17 | ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு: தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு: பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு. |
18 | இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். |
19 | அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். |
20 | அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ““யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். |
21 | அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் ““ என்றார். |
22 | “ இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் “ என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. |
23 | இம்மானுவேல் என்றால் “கடவுள் நம்முடன் இருக்கிறார் “ என்பது பொருள். |
24 | யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். |
25 | மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு உறவு கொள்ளவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார். |