1 | திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். |
2 | அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார். |
3 | “பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்” என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார். |
4 | இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:”பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: “ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்: |
5 | பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்: மலை, குன்றுயாவும் தாழ்த்தப்படும்: கோணலானவை நேராக்கப்படும்: கரடு முரடானவை சமதளமாக்கப்படும். |
6 | மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்'.” |
7 | தம்மிடம் திருமுழுக்குப் பெறப் புறப்பட்டு வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு யோவான், “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? |
8 | மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்: ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உள்ளத்தில் சொல்லத் தொடங்காதீர்கள். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் செல்கிறேன். |
9 | ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தரா மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்” என்றார். |
10 | அப்போது, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். |
11 | அதற்கு அவர் மறுமொழியாக, “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்: உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்” என்றார். |
12 | வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, “போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று அவரிடம் கேட்டனர். |
13 | அவர், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்” என்றார். |
14 | படைவீரரும் அவரை நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அவர், “நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்: யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்: உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்” என்றார். |
15 | அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். |
16 | யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்: ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். |
17 | அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்: பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார். |
18 | மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். |
19 | குறுநில மன்னன் ஏரோது தன் சகோதரன் மனைவியாகிய ஏரோதியாவை வைத்திருந்ததன் பொருட்டும் அவன் இழைத்த மற்ற எல்லாத் தீச்செயல்கள் பொருட்டும் யோவான் அவனைக் கண்டித்தார். |
20 | எனவே அவன் தான் செய்த தீச்செயல்கள் எல்லாம் போதாதென்று அவரைச் சிறையிலும் அடைத்தான். |
21 | மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. |
22 | தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. |
23 | இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது: அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்: |
24 | ஏலி மாத்தாத்தின் மகன்: மாத்தாத்து லேவியின் மகன்: லேவி மெல்கியின் மகன்: மெல்கி யன்னாயின் மகன்: யன்னாய் யோசேப்பின் மகன்: |
25 | யோசேப்பு மத்தத்தியாவின் மகன்: மத்தத்தியா ஆமோசின் மகன்: ஆமோசு நாகூமின் மகன்: நாகூம் எஸ்லியின் மகன்: எஸ்லி நாகாயின் மகன்: |
26 | நாகாய் மாத்தின் மகன்: மாத்து மத்தத்தியாவின் மகன்: மத்தத்தியா செமேயின் மகன்: செமேய் யோசேக்கின் மகன்: யோசேக்கு யோதாவின் மகன்: |
27 | யோதா யோவனானின் மகன்: யோவனான் இரேசாவின் மகன்: இரேசா செருபாபேலின் மகன்: செருபாபேல் செயல்தியேலின் மகன்: |
28 | செயல்தியேல் நேரியின் மகன்: நேரி மெல்கியின் மகன்: மெல்கி அத்தியின் மகன்: அத்தி கோசாமின் மகன்: கோசாம் எல்மதாமின் மகன்: எல்மதாம் ஏரின் மகன்: ஏர் ஏசுவின் மகன்: |
29 | ஏசு எலியேசரின் மகன்: எலியேசர் யோரிமின் மகன்: யோரிம் மாத்தாத்தின் மகன்: மாத்தாத்து லேவியின் மகன்: |
30 | லேவி சிமியோனின் மகன்: சிமியோன் யூதாவின் மகன்: யூதா யோசேப்பின் மகன்: யோசேப்பு யோனாமின் மகன்: யோனாம் எலியாக்கிமின் மகன்: எலியாக்கிம் மெலேயாவின் மகன்: |
31 | மெலேயா மென்னாவின் மகன்: மென்னா மத்தத்தாவின் மகன்: மத்தத்தா நாத்தானின் மகன்: நாத்தான் தாவீதின் மகன்: |
32 | தாவீது ஈசாயின் மகன்: ஈசாய் ஓபேதின் மகன்: ஓபேது போவாசின் மகன்: போவாசு சாலாவின் மகன்: சாலா நகசோனின் மகன்: நகசோன் அம்மினதாபின் மகன்: |
33 | அம்மினதாபு அத்மினின் மகன்: அத்மின் ஆர்னியின் மகன்: ஆர்னி எட்சரோனின் மகன்: எட்சரோன் பெரேட்சின் மகன்: பெரேட்சு யூதாவின் மகன்: யூதா யாக்கோபின் மகன்: |
34 | யாக்கோபு ஈசாக்கின் மகன்: ஈசாக்கு ஆபிரகாமின் மகன்: ஆபிரகாம் தெராகின் மகன்: தெராகு நாகோரின் மகன். |
35 | நாகோர் செரூகின் மகன்: செரூகு இரகுவின் மகன்: இரகு பெலேகின் மகன்: பெலேகு ஏபெரின் மகன்: ஏபேர் சேலாவின் மகன்: |
36 | சேலா காயனாமின் மகன்: காயனாம் அர்பகசாதின் மகன்: அர்பகசாது சேமின் மகன். சேம் நோவாவின் மகன்: நோவா இலாமேக்கின் மகன்: |
37 | இலாமேக்கு மெத்துசேலாவின் மகன்: மெத்துசேலா ஏனோக்கின் மகன்: ஏனோக்கு எரேதின் மகன்: எரேது மகலலேலின் மகன்: மகலலேல் கேனானின் மகன்: கேனான் ஏனோசின் மகன்: |
38 | ஏனோசு சேத்தின் மகன் : சேத்து ஆதாமின் மகன்: ஆதாம் கடவுளால் உண்டானவர். |