1 | லெபனோனே! உன் வாயில்களைத் திறந்துவை: நெருப்பு உன் கேதுரு மரங்களைச் சுட்டெரிக்கட்டும். |
2 | தேவதாரு மரங்களே! புலம்பியழுங்கள்: ஏனெனில், கேதுரு மரங்கள் வீழ்த்தப்பட்டன: ஓங்கி வளர்ந்த மரங்கள் பாழாயின: பாசான் நாட்டுக் கருவாலி மரங்களே! புலம்பியெழுங்கள்: ஏனெனில், அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டது. |
3 | அவர்கள் அலறியழும் குரல் கேட்கின்றது: ஏனெனில் அவர்களின் மேன்மை பாழ்படுத்தப்பட்டது: இளம் சிங்கங்களின் கர்ச்சனை கேட்கின்றது: ஏனெனில், யோர்தானின் காடு அழிக்கப்பட்டது. |
4 | என் கடவுளாகிய ஆண்டவர் கூறியது இதுவே: வெட்டுவதற்கு குறிக்கப்பட்ட ஆடுகளை மேய்ப்பாயாக! |
5 | விலைக்கு வாங்குவோர் அவற்றைக் கொன்றுவிடுவர்: ஆயினும் குற்றப்பழி அவர்கள் மீது சுமத்தப்படாது. அவற்றை விற்பவர்களோ, “ஆண்டவர் போற்றி! போற்றி! எங்களுக்குச் செல்வம் சேர்ந்தது” என்று சொல்கிறார்கள். ஆனால் ஆயர்கள் அவற்றின்மீது இரக்கம் காட்டவில்லை. |
6 | “இனிமேல் நான் உலகில் வாழ்வோர்க்கு இரக்கம் காட்ட மாட்டேன், “ என்கிறார் ஆண்டவர். இதோ! மனிதர் ஒவ்வொருவரையும் அவரவர் அடுத்திருப்பார் கையிலும் அரசர்களின் கையிலும் சிக்கும்படி ஒப்புவிக்கப் போகிறேன். அவர்கள் நாட்டை அழித்தொழிப்பார்கள். அவர்கள் கையிலிருந்து நான் யாரையும் தப்புவிக்கமாட்டேன். |
7 | அவ்வாறே நான் வெட்டுவதற்குக் குறிக்கப்பட்ட ஆடுகளை வணிகருக்காக மேய்க்கின்ற ஆயானானேன்: நான் இரு கோல்களைக் கையிலெடுத்து, ஒன்றிற்கு “இனிமை” என்றும், மற்றதற்கு “ஒன்றிப்பு” என்றும் பெயரிட்டு அம்மந்தையை மேய்த்துவந்தேன். |
8 | ஒரே மாதத்தில் நான் மூன்று ஆயர்களை ஒழித்து விட்டேன்: நான் அவர்களைப் பொறுத்தமட்டில் பொறுமை இழந்து விட்டேன்: அவர்களும் என்னை வெறுத்தார்கள். |
9 | அப்போது, “இனி நான் உங்களை மேய்க்கப்போவதில்லை: சாவது சாகட்டும்: அழிவது அழியட்டும்: மீதியிருப்பவை ஒன்றை ஒன்று கடித்துக் தின்னட்டும்” |
10 | என்று நான் சொன்னேன். “இனிமை” என்ற என் கோலை எடுத்து, மக்களினங்கள் அனைத்தோடும் நான் செய்து கொண்ட உடன்படிக்கை முறியும்படி அதை முறித்துப் போட்டேன். |
11 | அன்றே அந்த உடன்படிக்கை முறிந்து போயிற்று. அவ்வாறெ என்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஆட்டுவணிகரும் அது ஆண்டவரின் வாக்கு என்பதை உணர்ந்து கொண்டனர். |
12 | அப்போது நான் அவர்களை நோக்கி, “உங்களுக்குச் சரி என்று தோன்றினால் என் கூலியைக் கொடுங்கள்: இல்லையேல் கொடுக்க வேண்டாம், விடுங்கள்” என்றேன். அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளைக் கொடுத்தார்கள். |
13 | ஆண்டவர் என்னிடம், “கருவூலத்தை நோக்கி அதைத் தூக்கி எறி: இதுதான் அவர்கள் எனக்கு அளித்த சிறந்த மதிப்பீடு!” என்றார். அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக் காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவரின் இல்லத்திலிருந்த கருவூலத்தில் எறிந்துவிட்டேன். |
14 | யூதாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையே இருந்த சகோதர ஒருமைப்பாடு முறியும்படி “ஒன்றிப்பு” என்ற இரண்டாம் கோலையும் நான் ஒடித்துப் போட்டேன். |
15 | பின்பு ஆண்டவர் என்னை நோக்கி, “அறிவற்ற ஆயன் ஒருவனின் கருவிகளை இன்னொருமுறை எடுத்துக்கொள்” என்றார். |
16 | ஏனெனில் இதோ நாட்டில் ஆயன் ஒருவனை எழுப்புவேன்: அவன் அழிந்து போவதைக் காப்பாற்றமாட்டேன். சிதறிப் போவதைத் தேடித் திரியமாட்டான்: எலும்பு முறிந்ததைக் குணப்படுத்தமாட்டான்: நலமாயிருப்பதற்கு உணவு கொடுக்க மாட்டான்: ஆனால் கொழுத்ததின் இறைச்சியைத் தின்பான்: அவற்றின் குளம்புகளைக்கூட நறுக்கிப் போடுவான். |
17 | ஆடுகளைக் கைவிடுகிற பயனற்ற என் ஆயனுக்கு ஐயோ கேடு! அவனுடைய கைமேலும் வலக்கண் மேலும் வாள் வந்து விழட்டும்: அவனது கை முற்றிலும் சூம்பிப் போகட்டும்: அவனது வலக்கண் இருண்டு முற்றிலும் குருடாகட்டும். |