வேதாகமத்தை வாசி

Click to Subscribe

நாகூம் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1இரத்தக்கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு! அங்கு நிறைந்திருப்பதெல்லாம் பொய்களும் கொள்ளைப் பொருளுமே! சூறையாடலுக்கு முடிவே இல்லை!
2சாட்டையடிகளின் ஓசை! சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி! தாவிப் பாயும் புரவிகள்! உருண்டோடும் தேர்கள்!
3குதிரை வீரர்கள் பாய்ந்து தாக்குகின்றனர்: வாள் மின்னுகின்றது: ஈட்டி பளபளக்கின்றது: வெட்டுண்டவர்கள் கூட்டமாய்க் கிடக்கின்றனர்: பிணங்கள் குவித்து கிடக்கின்றன: செத்தவர்களுக்குக் கணக்கே இல்லை: அந்தப் பிணங்கள் மேல் மனிதர் இடறிவிழுகின்றனர்.
4அழகும் கவர்ச்சியும் நிறைந்தவளாய், தன் வேசித்தனங்களால் மற்ற வேற்றினத்தாரையும் தன் மயக்கும் கவர்ச்சியால் பல இனங்களையும் ஏமாற்றிய அந்த விலைமகளின் எணண்ற்ற வேசித்தனங்களே இதற்குக் காரணம்!
5இதோ! படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: உனக்கெதிராக நான் எழும்புவேன்: நீ உடுத்தியிருக்கும் ஆடையை உன் முகத்துக்கு மேலாகத் தூக்குவேன்: மற்ற வேற்றினத்தார் உன் திறந்த மேனியையும் அரசுகள் உன் அவமானத்தையும் பார்க்கும்படி செய்வேன்.
6அருவருப்பானவற்றை உன்மீது எறிவேன்: உன்னை இகழ்ச்சியுடன் நடத்திப் பகடிப் பொருள் ஆக்குவேன்.
7உன்னை நோக்குவோர் எல்லாரும் உன்னிடமிருந்து பின்வாங்கி, “நினிவே பாழாய்ப் போனது: அவளுக்காகப் புலம்புவோர் யாரேனும் உண்டோ?” என்று சொல்வார்கள். உன்னை தேற்றுவோரை எங்கே தேடுவேன்?
8நைல் நதியின் கரையருகில் நீரால் சூழப்பட்ட, கடலை அரணாகவும் தண்ணீரை மதிலாகவும் கொண்ட தீப்சு நகரைவிட நீ சிறப்புற்று இருந்தாயோ?
9எத்தியோப்பியாவும் எகிப்தும் அந்த நகருக்கு வலிமையாய் இருந்தன: அதன் வலிமைக்கோ எல்லை இல்லை: பூத்தும் லிபியாவும் அதற்குத் துணையாய் இருந்தன.
10இருந்தும், அதன் மக்கள் சிறைப் பிடிக்கப்பட்டு அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர்: அதன் குழந்தைகள் தெருக்கள் தோறும் மோதியடிக்கப்பட்டனர்: அதன் உயர்குடி மக்கள் மேல் சீட்டுப் போடப்பட்டது: அதன் பெரிய மனிதர் அனைவரும் சங்கிலிகளால் இறுகக் கட்டப்பட்டனர்.
11நீயும் குடிவெறியில் மயங்கிக் கிடப்பாய்: நீயும் உன் பகைவரிடமிருந்து தப்புமாறு புகலிடம் தேடி அலைவாய்.
12உன் அரண்கள் யாவும் முதலில் பழுத்த கனிகள் நிறைந்த அத்தி மரங்களுக்கு ஒப்பானவை: அத்தி மரங்களைப் பிடித்து உலுக்கும்போது பழங்கள் தின்பதற்கு வாயில் விழும்.
13உன் போர்வீரர்கள் உன் பெண்களைப் போன்றவர்களே! உன் நாட்டு வாயில்கள் பகைவர்களுக்காகத் திறந்து கிடக்கின்றன: உன் தாழ்ப்பாள்கள் நெருப்புக்கு இரையாயின.
14முற்றுகை நாள்களுக்காகத் தண்ணீர் சேமித்து வை: உன்னுடைய அரண்களை வலிமைப்படுத்து: களிமண்ணைப் பிசைந்து சேறாக்கு: செங்கல் அறுக்கச் சட்டங்களை எடு.
15ஆயினும் நெருப்பு உன்னை விழுங்கும்: வாளால் நீ வெட்டுண்டு மடிவாய்: வெட்டுக்கிளிபோல் அது உன்னை விழுங்கிவிடும்: வெட்டுக்கிளிபோல் நீங்கள் பலுகுங்கள்: பச்சைக்கிளிபோல் நீங்கள் பெருகுங்கள்.
16விண்மீன்களைவிட மிகுதியாக உன் வணிகர்களைப் பெருகச் செய்தாய்: இந்த வெட்டுக்கிளிகள் இறக்கையை விரித்துப் பறந்தோடிவிடும்.
17உன் காவல் வீரர்கள் பச்சைக் கிளிகளுக்கும் உன் அரசு அலுவலர் வெட்டுக்கிளிக் கூட்டத்திற்கும் ஒப்பானவர்: குளிர்ந்த நாளில் அவை வேலிகள் மேல் உட்கார்ந்துள்ளன: கதிரவன் எழுந்ததும் பறந்தோடிவிடுகின்றன: அதன்பின் அவை இருக்குமிடம் யாருக்கும் தெரியாது.
18அசீரிய மன்னனே! உன் ஆயர்கள் துயில் கொண்டனர்: உன் படைத் தலைவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்தனர்: கூட்டிச் சேர்க்க யாருமின்றி உன் மக்கள் மலைகளில் சிதறிப் போயினர்.
19உன் காயத்துக்கு மருந்தில்லை, உன் புண் குணமாகாது: உன்னைப்பற்றிய செய்தி கேட்கும் யாவரும் கைகொட்டுவர்: ஏனெனில், உன் இடைவிடாத கொடுமையால் துன்புறாதவர் ஒருவரும் இல்லை.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.