| 1 | பின்பு யோபு சோப்பாருக்குப் பதிலாக, |
| 2 | “நீங்கள் மட்டுமே ஞானவான் என நீங்கள் எண்ணுகின்றீர்கள் என நான் உறுதியாகக் கருதுகிறேன். நீங்கள் மரிக்கும்போது ஞானமும் உங்களோடு அழிந்துப்போகும். |
| 3 | நானும் உன்னைப் போன்றே புத்திசாலி. உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல. இப்படிப்பட்ட வைகளை அறியாதவர்கள் யார்? |
| 4 | “என் நண்பர்கள் இப்போது என்னைக் கண்டு நகைக்கிறார்கள். அவர்கள், “அவன் தேவனிடம் ஜெபித்தான், அவன் பதிலைப் பெற்றான் என்று சொல்கிறார்கள். “உத்தமனாகிய நீதிமான் பரியாசம் பண்ணப்படுகின்றான். |
| 5 | தொல்லைகளற்றோர் தொல்லையுடையோரைக் கண்டு நகைக்கிறார்கள். அவர்கள் வீழும் மனிதனைத் தாக்குகிறார்கள். |
| 6 | ஆனால் திருடரின் கூடாரங்கள் பாதிக்கப்படவில்லை. தேவனை கோபங்கொள்ளச் செய்வோர் சமாதானமாக வாழ்கிறார்கள். அவர்களின் சொந்த வலிமையே அவர்களது ஒரே தேவன். |
| 7 | “ஆனால் மிருகங்களைக் கேளுங்கள், அவை உங்களுக்குப் போதிக்கும். வானத்துப் பறவைகளைக் கேளுங்கள், அவை உங்களுக்குச் சொல்லும். |
| 8 | அல்லது பூமியிடம் பேசுங்கள், அது உங்களுக்குக் கற்பிக்கும். அல்லது கடலின் மீன்கள் தங்கள் ஞானத்தை உங்களுக்குச் சொல்லட்டும். |
| 9 | கர்த்தருடைய கரம் அவற்றை உண்டாக்கினது என்பதை ஒவ்வொருவரும் அறிகிறோம். |
| 10 | வாழும் ஒவ்வொரு மிருகமும் மூச்சுவிடும் ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய வல்லமைக்குக் கட்டுப்பட்டவர்கள். |
| 11 | நாவு உணவைச் சுவைப்பதுப்போல காதுகள் கேட்கும் சொற்களை ஆராய்ந்து பார்க்கும். |
| 12 | முதிர்ந்தோர் ஞானவான்கள், புரிந்து கொள்ளும் ஆற்றலையுடையவருக்கு நீண்ட ஆயுள் உண்டு. |
| 13 | ஞானமும் ஆற்றலும் தேவனுக்குரியவை. ஆலோசனையும் புரிந்துகொள்ளுதலும் அவருக்குரியவை. |
| 14 | தேவன் எதையேனும் கிழித்து அழித்தால் ஜனங்கள் அதை மீண்டும் உருவாக்க முடியாது. தேவன் ஒருவனைச் சிறைக்குள் அகப்படுத்தினால் ஜனங்கள் அவனை விடுவிக்க முடியாது. |
| 15 | தேவன் மழையைப் பெய்யாதிருக்கச் செய் தால், பூமி உலர்ந்துபோகும். தேவன் மழையைத் தாராளமாகப் பெய்யச் செய்தால், அது பூமியில் வெள்ளப் பெருக்கெடுக்கும். |
| 16 | தேவன் வல்லமையுள்ளவரும் வெற்றி பெறுபவருமாவார். ஏமாந்தவரும் மற்றும் ஏமாற்றுகின்றவரும் அவருக்கு கீழிருக்கிறீர்கள். |
| 17 | தேவன் ஆலோசனைக் கூறுவோரின் ஞானத்தை அகற்றுகிறார், அவர் தலைவர்களை மூடர்களைப்போல் நடக்கும்படி செய்கிறார். |
| 18 | அரசர்கள் ஜனங்களைச் சிறைகளில் அடைக்கக்கூடும், ஆனால் தேவன் அந்த ஜனங்களை விடுவித்து ஆற்றலுள்ளோராக்குகிறார். |
| 19 | தேவன் ஆசாரியர் ஆற்றலை அகற்றுகிறார். அவர் ஆலயப் பணியாட்களை முக்கிமற்றோராக்குகிறார். |
| 20 | நம்பிக்கையுள்ள ஆலோசகர்களை அமைதியாயிருக்கும்படி தேவன் செய்கிறார், முதிர்ந்தோரின் ஞானத்தை அவர் அகற்றிவிடுகிறார். |
| 21 | தேவன் தலைவர்களை முக்கியமற்றோராக்குகிறார், தலைவர்களின் ஆற்றலை அவர் Ԕநீக்கிவிடுகிறார். |
| 22 | இருண்ட இரகசியங்களையும் கூட தேவன் அறிகிறார், மரணம் போன்ற இருளுள்ள இடங்களிலும் அவர் ஒளியைப் பாய்ச்சுகிறார். |
| 23 | தேவன் தேசங்களைப் பெரிதாகவும் வல்லமை மிக்கதாகவும் செய்கிறார். பின்பு அவர் அவற்றை அழிக்கிறார். அவர் தேசங்களைப் பெரிதாக வளரும்படி செய்கிறார், பின்பு அவர் அங்குள்ள ஜனங்களைச் சிதறடிக்கிறார். |
| 24 | தேவன் தலைவர்களை மூடராக்குகிறார், அவர்கள் குறிக்கோளின்றி பாலைவனத்தில் அலையும்படிச் செய்கிறார். |
| 25 | அத்தலைவர்கள் இருளில் தடுமாறி வழி தேடுகின்றவனைப்போல் இருக்கிறார்கள். குடித்து போகும்வழியை அறியாது செல்கிறவனைப்போல் இருக்கிறார்கள்” என்றான். |