1 | நான் என் சொந்த வாழ்க்கையை வெறுக்கிறேன். எனவே நான் தாராளமாக முறையிடுவேன். என் ஆத்துமா கசந்துபோயிற்று, எனவே நான் இப்போது பேசுவேன். |
2 | நான் தேவனிடம், “என்னைக் குற்றம்சாட்டாதேயும்! நான் செய்தவற்றை எனக்குக் கூறும், எனக்கெதிராக உமது காரியம் என்ன?’ என்பேன். |
3 | தேவனே, என்னைத் துன்புறுத்துவது உமக்கு மகிழ்ச்சித் தருகிறதா? நீர் உண்டாக்கினதைக் குறித்து நீர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது தீயோர் செய்த திட்டங்களில் நீர் மகிழ்ச்சிக்கொள்கிறீரா? |
4 | தேவனே, உமக்கு மனிதரின் கண்கள் உண்டா? மனிதர் காண்பதுபோல் நீர் காரியங்களைப் பார்க்கிறீரா? |
5 | எங்களைப்போல உமது வாழ்க்கையும் குறுகியதா? மனிதனின் வாழ்க்கையைப் போல் உமது வாழ்க்கையும் குறுகியதா? இல்லை! எனவே அது எப்படிப்பட்டது என்பதை எவ்வாறு அறிவீர்? |
6 | எனது தவறுகளைப் பார்க்கிறீர், என் பாவங்களைத் தேடுகிறீர். |
7 | நான் களங்கமற்றவன் என்பதை நீர் அறிந்திருந்தும் உமது ஆற்றலிலிருந்து தப்பித்துக்கொள்ள வழியில்லை! |
8 | தேவனே, உமது கைகள் என்னை உண்டாக்கி, என் உடலுக்கு வடிவளித்தன. இப்போது அவை என்னை மூடிக்கொண்டு அழிக்கின்றன. |
9 | தேவனே, என்னைக் களிமண்ணைப் போல உருவாக்கினீர் என நினைத்துப்பாரும் என்னை மீண்டும் களிமண்ணாக மாற்றுவீரா? |
10 | என்னைப் பாலைப்போன்று வெளியே ஊற்றினீர். தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பவனைப் போன்று என்னைக் கடைந்து உருமாற்றினீர். |
11 | எலும்புகளாலும் தசைகளாலும் எனக்கு உருவளித்தீர். பின்னர் தோலாலும் தசையாலும் உடுத்தினீர். |
12 | எனக்கு உயிரளித்தீர், என்னிடம் இரக்கமாயிருந்தீர்.Ԕநீர் என்னை பராமரித்தீர், என் ஆவியைப் பாதுகாத்தீர். |
13 | ஆனால் நீர் இதை உமது இருதயத்தில் மறைத்த வைத்திருக்கிறீர். நீர் இரகசியமாக உமது இருதயத்தில் திட்டமிட்டது இது என்பதை நான் அறிவேன். |
14 | நான் பாவம் செய்தால், நீர் அதைக் கவனித்துக் கொண்டிருந்தீர், எனவே நீர் என் தவறுகளுக்கு என்னைத் தண்டிக்க முடியும். |
15 | நான் பாவம் செய்யும்போது குற்றவாளியாகிறேன், அது எனக்குத் தீமையானது. ஆனால் நான் களங்கமற்றவனாயிருக்கும் போதும், என் தலையை உயர்த்திப்பார்க்க முடியவில்லை! நான் வெட்கப்பட்டு அவமானமடைந்திருக்கிறேன். |
16 | எனக்கு வெற்றி கிடைத்து நான் பெருமைப்பட்டால், ஒருவன் சிங்கத்தை வேட்டையாடுவதைப் போல என்னை வேட்டையாடுகிறீர். எனக்கெதிராக உமது ஆற்றலை மீண்டும் காட்டுகிறீர். |
17 | நான் தவறு செய்தேன் என்று நிறுவ உமக்கு எப்போதும் யாரேனும் கிடைப்பர். பல வழிகளில் உமது கோபத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவீர். அவை எனக்கெதிராக ஒன்றன்பின் ஒன்றாக படைகளை அனுப்புவது போன்றிருக்கும். |
18 | எனவே, தேவனே, ஏன் என்னைப் பிறக்க அனுமதித்தீர்? யாரேனும் என்னைக் காணும் முன்பே நான் மரித்திருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். |
19 | நான் ஒருபோதும் வாழ்ந்திருக்க வேண்டாமென விரும்புகிறேன். தாயின் கருவிலிருந்து நேரே கல்லறைக்கு என்னைச் சுமந்துப் போயிருக்க வேண்டுமென விரும்புகிறேன். |
20 | என் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்துவிட்டது. எனவே என்னைத் தனித்து விடுங்கள்! |
21 | யாரும் திரும்பிவராத, இரளும் மரணமுமுள்ள இடத்திற்கு நான் போகும் முன்பு, மிஞ்சியுள்ள சில காலத்தை நான் சந்தோஷமாய் அனுபவிக்க அனு மதியுங்கள். |
22 | யாரும் பார்க்கமுடியாத, இருளும் நிழல்களும் குழப்பமும் நிரம்பிய இடத்திற்கு நான் போகும் முன்பு, மிஞ்சியுள்ள சிலகாலத்தை நான் மகிழ்ந்திருக்க அனுமதியுங்கள். அங்கு ஒளியும் கூட இருளாகும்” என்றான். |