நீங்கள் தொடர்ந்து தோராவைப் படிப்பீர்களாயின், மோசேயைத் தவிர வேறு எந்த யூதரும் ஒரு மீதியானியப் பெண்ணைத் திருமணம் செய்ய முடியாது என்று தேவன் கூறியிருப்பதைக் காண்பீர்கள். இது முரண்பாடான காரியம் அல்லவா?
இஸ்ரவேலர்கள் எவரும் மீதியானியப் பெண்களை மணக்க முடியாது என்றும், மோசே மட்டுமே திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிற வேதவசனங்களை இந்தப் பெண்ணியவாதி ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. ஏனெனில், எந்த இடத்திலும், பிற்காலத்தில் எழுதப்பட்ட வேதவாக்கியங்களிலும் அவ்வாறு எழுதப்படவில்லை. இது அந்தப் பெண்ணியவாதியின் அறியாமையா அல்லது வேண்டுமென்றே கூறப்பட்ட சதியா என்று எனக்குத் தெரியவில்லை. மோசே ஒரு மீதியானியப் பெண்ணை மணந்தார் என்பது உண்மைதான். ஆனால், இது நியாயப்பிரமாணம் வழங்கப்படுவதற்கு முன்னரே நடந்த காரியம்.
சில குறிப்பிட்ட இன மக்களுடன் இஸ்ரவேலர்கள் சம்பந்தம் கலக்கக்கூடாது (திருமணம் செய்யக்கூடாது) என்று தேவன் சொல்வதற்கான காரணம், அவர்கள் வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அல்ல; மாறாக, அவர்கள் விக்கிரக ஆராதனை செய்கிற மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே ஆகும். கானானியப் பெண்ணான ராகாப், மோவாபியப் பெண்ணான ரூத் ஆகியோர் யூதர்களைத் திருமணம் செய்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய முந்தைய மத வழிபாட்டை விட்டுவிட்டு, மெய்யான தேவனாகிய யெகோவாவைப் பின்பற்றினால், இஸ்ரவேல் வம்சத்தின் ஆண்களைத் திருமணம் செய்ய உரிமை பெற்றிருந்தார்கள். மேலும், இவர்களுடைய பெயர்கள் இயேசுவின் வம்சவரலாற்றுப் பட்டியலிலும் இடம்பெற்றிருப்பதன் மூலமாகத் தேவன் அவர்களைக் கனப்படுத்தியிருக்கிறார்.
"போரில் பிடிபட்ட பெண்கள் பலமுறை கற்பழிக்கப்பட்டு கருவுற வைக்கப்பட்டனர்; ஆயினும் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, மனைவி என்ற அந்தஸ்துகூட அவர்களுக்குத் தரப்படவில்லை" என்று அவர்கள் கூறுகிறார்கள். இது முற்றிலும் ஒரு தவறான குற்றச்சாட்டு என்றே கூற வேண்டும். இது வேண்டுமென்றே தவறான அனுமானத்தின் அடிப்படையில் வைக்கப்படுகிற குற்றச்சாட்டாகும். பெண்கள் மீண்டும் மீண்டும் கற்பழிக்கப்பட்டுக் கருவுற்றனர் என்று கூறுவதற்கு எந்த ஒரு வரலாற்று மேற்கோளையும் இந்தப் பெண்ணியவாதியால் வழங்க முடியாது. ஏனெனில், அப்படியான ஆதாரங்கள் எதுவும் அறவே இல்லை!
ஆயினும், அவர்களுடைய குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதிலளிப்போம். போரில் சிறைபிடிக்கப்பட்ட பெண்களுக்கு என்ன நேரிட்டது? அந்தரத்தில் சிலம்பம் சுற்றுவதைப் போலப் பேசாமல், பிற வேதவசனங்களின் துணையோடு, எவ்வித அனுமானத்திற்கும் இடம் கொடாமல் நேர்மையான முறையில் நாம் பதிலளிக்க முயலுவோம். சிறைபிடிக்கப்பட்ட பெண்களை இஸ்ரவேலர்கள் திருமணம் செய்துகொள்ளத் தேவன் அனுமதி அளித்தார். இதுமட்டுமின்றி, அவர்களை மனைவிகள் என்ற முறையில் கண்ணியத்துடன் நடத்தவும் கட்டளை வழங்கியிருந்தார் (உபாகமம் 21:10-14 -ஐ வாசிக்கவும்). அடிமையாகப் பிடித்து வரப்பட்டப் பெண்கள் திருமணம் செய்யப்படாதவர்களாக இருந்தால், அவர்களை வேலைக்காரிகளாக வைத்திருந்தார்கள். ஆயினும், இத்தகையோரையும் தவறாக நடத்துவதற்கு எதிரான விதிகளே வேதத்தில் இருந்தன (யாத்திராகமம் 21:26-27, உபாகமம் 23:15-16). இக்கட்டளைகள் அனைத்தும் பழங்காலப் போர்களின் வழக்கமான நடைமுறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலக் கலாச்சாரத்தில், இவ்வாறு போரில் பிடிக்கப்படுகிற பெண்கள் தகாதவிதமாய் நடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்; அல்லது அவர்களை அடிமைகளாக விற்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக, இஸ்ரவேலர்கள் ஒரு மாதம் காத்திருந்து, அந்தப் பெண்ணை மணந்துகொள்ள வேண்டும் என்ற கட்டளை இருந்தது. இது மனிதர்கள் என்ற முறையில் பெண்களுடைய ஆளுமையை மதிக்க அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது.
குற்றச்சாட்டு: உபாகமம் 20:13-15 வசனங்களில், கர்த்தர் ஒரு பட்டணத்தை உங்கள் கைகளில் ஒப்படைக்கும்போது, அங்குள்ள ஆண்களையும் சிறுவர்களையும் கொன்றுவிடுங்கள்; ஆனால் கற்பழிப்பதற்காகப் பெண்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு எதிரான ஒரு மோசமான காரியம் அல்லவா?
பதில்: உபாகமம் 20:13-15 ஆகிய வசனங்களில் உண்மையிலேயே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று நாம் காண்போம்:
“உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக. இந்த ஜாதிகளைச் சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக”.
எண்ணாகமம் 31-ஆம் அதிகாரத்தில் உள்ளதைப் போலவே, இந்த வேதப்பகுதியிலும் கற்பழிப்பு பற்றியோ அல்லது பாலியல் வன்செயல் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, வேதவசனங்களிலுள்ள உண்மையைப் பார்க்காமல், தன்னை ஒரு பெண்ணியவாதி என்று அழைத்துக்கொள்பவர், தன் கருத்துக்கு ஏற்றவாறு அனுமானங்களை இட்டுக்கட்டுகிறார். உண்மையில், இஸ்ரவேலர்கள் சிறைபிடிக்கப்பட்ட பெண்களைத் திருமணம் செய்துகொள்ளத் தேவன் அனுமதித்தார். மேலும், அவர்கள் தங்கள் மனைவிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பெண்கள் முதலாவது தங்கள் குடும்பங்களை நினைத்துத் துக்கம் கொண்டாட வேண்டும். ஒருத்தியை மனைவியாக்கிய பிறகு அவளைத் தவறாக நடத்தக் கூடாது (உபாகமம் 21:10-14). திருமணம் செய்யப்படாதவர்களை வேலைக்காரிகளாக ஆக்கியிருந்தார்கள். ஆயினும் நாம் முன்னரே சிந்தித்ததுபோல, அவர்களைத் தவறாக நடத்துவதற்கு எதிரான விதிகளும் இருந்தன.
மேலும், இந்த வேதப்பகுதியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியம் என்னவெனில், இந்தப் பெண்ணியவாதி கூறுவதுபோலச் சிறுவர்கள் கொல்லப்படவில்லை; ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆகவே, இந்த வகையில் சிறுவர்களும் பெண்களும் தேவனுடைய அன்பான கரிசனைக்கு உட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.