(எண்ணாகமம் 31:14-18): இந்த வேதப்பகுதியில், மீதியானிய இனத்தைச் சேர்ந்த ஆண்களையும், பெண்களையும், முதியவர்களையும், சிறுபிள்ளைகளையும் கொல்லும்படி மோசே தனது ஆட்களிடம் உத்தரவிடுகிறார். ஆனால், திருமணமாகாத கன்னிப்பெண்களை மட்டும் உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அப்பெண்களைக் கற்பழிப்பதற்காகத்தானே உயிரோடு காப்பாற்றச் சொல்கிறார்? இது பெண்களுக்கு எதிரான பாகுபாடு அல்லவா?

மீதியானியர் ஒரு நாடோடிக் கூட்டத்தினர் ஆவர். இவர்கள் மோவாப் மக்களுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள். பாலியல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தையின் மூலமாக இஸ்ரவேலரைக் கவர்ந்து, அவர்களை விக்கிரக வழிபாட்டிற்குள் தள்ளியவர்கள் இவர்களே. எனவே, இவர்களைப் பழிவாங்கும் பொருட்டு அவர்களைக் கொல்ல வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார் (எண்ணாகமம் 25). இஸ்ரவேலர்கள் மோவாபியர்களின் பலிகளில் கலந்துகொண்டு, அவர்கள் மத்தியில் அவர்களுடைய பலியின் உணவைச் சாப்பிட்டு, பாகால் உட்பட மோவாபியர்களின் பல தெய்வங்களை வணங்கினர் (எண் 25:2,3). இதனிமித்தமாக, தேவன் ஒரு கொள்ளைநோயை அனுப்பி இஸ்ரவேல் மக்களில் 24,000 பேரைக் கொன்றார். இந்தக் கொள்ளை நோயானது, இஸ்ரவேலர் மீதியானியர்களுடன் உடலுறவு கொண்டு தங்களைத் தீட்டுப்படுத்தியதன் விளைவாக நேரிட்டது (எண் 25:9). ஆகவே, மீதியானியர்களின் தவறான சூழ்ச்சியின் காரணமாகவும் அவர்களுடைய பாவத்தின் காரணமாகவும் தேவன் அவர்களை நியாயமான முறையில் தண்டித்தார். இஸ்ரவேலர்களுக்கு மேலும் இவர்களால் எவ்விதப் பிரச்சினையும் வராதபடிக்கு, ஒரு தற்காப்பு நடவடிக்கையாக அவர்களை அழித்து நியாயந்தீர்க்கும்படி கட்டளையிட்டார்.

எண்ணாகமம் 31:14-18 ஆகிய வசனங்களைக் கொண்ட இந்த வேதப்பகுதி, திருமணமாகாத கன்னிப்பெண்கள் தவிர மற்ற அனைத்துப் பெண்களும் இஸ்ரவேலர்களை மயக்கிப் பாவம் செய்யத் தூண்டியதன் தண்டனையாகக் கொல்லப்பட வேண்டும் என்று கூறுகிறது. மேலும், கன்னிப்பெண்களை விட்டுவிட வேண்டும் என்றும் கூறுகிறது. ஒருவேளை, இந்த இளம் கன்னிப்பெண்கள் பாகால் வழிபாட்டுடன் தொடர்புடைய ஒழுக்கக்கேடான செயல்களில் வெளிப்படையாக ஈடுபடாமல் இருந்திருக்கலாம். எனவேதான், அவர்கள் திருமணமான பெண்கள் மற்றும் ஆண்களுடன் சேர்க்கப்படவில்லை. இந்த இளம் பெண்கள் இஸ்ரவேலர்களால் சிறைபிடிக்கப்பட வேண்டும் என்றுதான் வேத வசனம் கூறுகிறது. இவர்கள் இஸ்ரவேலர்களால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இஸ்ரவேலின் ஆண்கள் அவர்களைக் கற்பழித்தார்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறான கருத்தாகும். அவர்கள் போரின்போது கைதியாக்கப்பட்டதால், போர் விதிகளின்படி அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு அடிமைகளாக மாறியிருப்பார்கள் என்று மட்டுமே கூறமுடியும். மேலும், அவர்கள் அடிமைகளாகிவிட்டால், இஸ்ரவேலில் வழக்கத்திலிருக்கும் அடிமைகள் தொடர்பான அனைத்துச் சட்டங்களும் அவர்களுக்கும் பொருந்தும். எனவே, அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர் என்று எந்த எழுதப்பட்ட ஆதாரமுமில்லாமல் யூகத்தின் அடிப்படையில் கருதுவது தவறானது. இன்றைய காலகட்டத்தில் இளம் பெண்கள் கடத்தப்பட்டால் என்ன நிகழுமோ, அதைக் குறித்த அச்சத்தின் அடிப்படையில் எழுகின்ற கருத்தே இதுவாகும்.

மேலும், எண்ணாகமம் 25:7,8-இல் ஒரு சம்பவம் சொல்லப்பட்டுள்ளது. ஒரு இஸ்ரவேல் ஆணும் ஒரு மீதியானியப் பெண்ணும் பாலுறவில் ஈடுபட்டதால், அவர்கள் இருவரும் பினெகாஸால் கொல்லப்பட்டதைக் காண்கிறோம். இஸ்ரவேலர்களுக்கு தேவன் வழங்கிய நியாயப்பிரமாணம் பாலியல் வன்கொடுமையைக் கண்டிக்கிறது மட்டுமின்றி, சில சந்தர்ப்பங்களில் அதற்கு மரண தண்டனையையும் விதிக்கிறது (உபாகமம் 22:25-27). மேலும், கன்னிப்பெண்களை உயிரோடு வைப்பதற்கான கட்டளையைத் தொடர்ந்து, வீரர்கள் உடனடியாகத் தங்களையும், தாங்கள் சிறைபிடித்துக் கொண்டுவந்தவர்களையும் சுத்திகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர் (எண்ணாகமம் 31:19). பாலியல் வன்கொடுமையோ அல்லது ஒருமித்த மனதுடன் உடலுறவு கொள்வதோ லேவியராகமம் 15:16-18 வசனங்களில் கூறப்பட்டிருக்கும் கட்டளையை மீறும் செயலாகும். எனவே, உடலுறவு குறித்த காரியத்தில் நியாயப்பிரமாணச் சட்டங்களில் இவ்வளவு கெடுபிடிகள் கொடுக்கப்பட்டுள்ளதால், மீதியானிய இனத்தைச் சேர்ந்த கன்னிப்பெண்களை இஸ்ரவேலர்கள் பலாத்காரம் செய்தார்கள் என்று கூறுவது, வேத வாக்கியங்களின் வெளிச்சத்தில் எந்த வகையிலும் பொருளற்ற வாதமாகும்.

 

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.