புத்தகங்கள்

நான் தற்பொழுது எனது உரையின் முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். அத்தேனே பட்டணத்தில் பவுல் எதைப் பார்த்தார், உணர்ந்தார், செய்தார் என்பதை விட்டுவிட்டு, நடைமுறைக்குத் தேவையான சிந்தனைக்கு நான் வருகிறேன். நாம் எதைப் பார்க்க வேண்டும், எதை உணர வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று இதைப் படித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வாசகரையும் நான் கேட்கிறேன்.

(அ) நாம் எதைப் பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறோம்? நாம் வேடிக்கை பார்த்தும், உல்லாசமாகவும் காலத்தைக் கழிக்கும் நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். “காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை” (பிர. 1:8). அங்கும் இங்கும் ஓடவும், அறிவைப் பெருக்கிக்கொள்ளவும் உலகம் பைத்தியமாயிருக்கிறது. வளமையும், கலைகளும், புதிய கண்டுபிடிப்புகளும் தொடர்ச்சியாகப் பெருங்கூட்ட மக்களைக் கண்காட்சிகளுக்கு அழைக்கின்றன. ஆயிரம் பல்லாயிரமான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மனிதக் கைவேலைகளைக் காண விரைந்தோடுகிறார்கள்.

ஆனால், ஒரு கிறிஸ்தவன் உலக வரைபடத்தைக் காண வேண்டியதில்லையா? வேதத்தை விசுவாசிக்கும் ஒரு மனிதன், அந்த வரைபடத்தில் ஆவிக்குரிய விதத்தில் இருளடைந்திருக்கும், மரணமடைந்திருக்கும் மற்றும் நற்செய்தி சென்று சேராமலிருக்கும் பரந்து விரிந்த பகுதிகளை ஒருமித்த கருத்துடன் காணவேண்டாமா? கிறிஸ்தவர்கள் ஒன்றும் செய்யாததினால், உலக மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கிறிஸ்துவையும் தேவனையும் அறியாமல், பாவத்திலும் விக்கிரக ஆராதனையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் காண வேண்டாமா? தேவனுடைய கண்கள் இவைகளைக் காணுகின்றன; நம்முடைய கண்களும் இவைகளையே காண வேண்டியதாய் இருக்கின்றன.

(ஆ) நாம் எதை உணர வேண்டியவர்களாயிருக்கிறோம்? நம்முடைய இருதயம் தேவனுடைய பார்வையில் சரியாக இருக்குமென்றால், தவறான மார்க்கங்களையும் விக்கிரக ஆராதனையையும் பார்ப்பதினால் நிச்சயமாக வேதனைப்படும். இத்தகைய உலகப்போக்குகள் நம்முடைய இருதயத்தில் உணர்த்த வேண்டிய காரியங்கள் அதிகம் உள்ளன.

நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிலடங்கா வாய்ப்புகளுக்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும். கிறிஸ்தவ உலகிற்கு, கிறிஸ்துவை அறிந்தவர்கள் ஆற்ற வேண்டிய கடமையைக் குறித்து அறிந்தவர்கள் வெகுசிலரே! ஒவ்வொரு வருடமும் சில வாரங்களாவது அவர்கள் கிறிஸ்துவை அறியாதவர்களின் மத்தியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டால் அது அவர்களுக்கு நலமாயிருக்கும்.

நம்முடைய கிறிஸ்தவ திருச்சபைகள், கிறிஸ்துவை அறிவிக்க இதுவரை எடுத்துக்கொண்ட முயற்சிகளை ஆராய்ந்தால், வெட்கமும் அவமானமுமே மிஞ்சும். பிஷப் ஹீபர், அதோனிராம் ஜட்சன், ஸ்வார்ட்ஸ், சீகன்பால்க் போன்றவர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து நம்மிடையே வந்து ஊழியம் செய்ததன் மூலம் தேவன் நம்மிடையே பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். பலவிதமான உபத்திரவங்களின் மத்தியில் நம்மைப் பாதுகாத்து, அபரிமிதமாய் ஆசீர்வதித்திருக்கிறார். ஆனால், எந்த அளவிற்குச் சொற்பமாக நாம் அவருக்குத் திருப்பிச் செலுத்தியிருக்கிறோம்! நம்மிடையே இருக்கும் ஆயிரக்கணக்கான திருச்சபைகளில், எத்தனை குறைவான திருச்சபைகள் ஊழியர்களைத் தாங்குகின்றன! ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக எத்தனை குறைவான வைராக்கியத்தைத் திருச்சபை மக்கள் காட்டுகிறார்கள்! இவைகள் இப்படி இருக்கலாகாது!

மனந்திரும்பாத ஆத்துமாக்களின் பரிதாபமான நிலையையும், கிறிஸ்து இல்லாமல் வாழ்ந்து மடியும் மக்களின் நிலைமையையும் நாம் நினைக்கும்பொழுது மனதுருக்கம் கொள்ள வேண்டும். இந்த வறுமையைப் போல வேறொரு வறுமை இல்லை! இந்த வியாதியைப் போல வேறொரு வியாதி இல்லை! இந்த அடிமைத்தனத்தைவிட வேறொரு அடிமைத்தனம் இல்லை! விக்கிரக ஆராதனை, தவறான மார்க்கம் மற்றும் பாவத்தின் மரணத்தைவிட, வேறொரு மரணம் இல்லை! இழந்துபோனவர்களுக்காக நாம் மனதுருக்கம் கொள்ளவில்லையென்றால், நம்மில் கிறிஸ்துவின் சிந்தை எங்கே என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இரட்சிக்கப்படாத ஆத்துமாவின் நிலைக்காக ஒருவனை வருத்தமடையச் செய்யாத கிறிஸ்தவம், 2000 ஆண்டுகளுக்கு முன் பரத்திலிருந்து வந்த, புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற கிறிஸ்தவம் அல்ல என்பதை உறுதியான பிரதான கொள்கையாக முன்வைக்கிறேன். அது வெறும் பெயர்; அது பவுல் கூறும் கிறிஸ்தவமும் அல்ல.
(இ) இறுதியாக, நாம் என்ன செய்ய வேண்டும்? உங்கள் மனதுக்கு நான் கொண்டுவர விரும்புகிற கருத்து இதுதான். பார்ப்பதும், உணர்வதும் நல்லது. ஆனால், செய்வதுதான் கிறிஸ்தவ விசுவாசத்தின் உயிர்நாடி. நம்மை செயல்பாட்டுக்கு நேராக வழிநடத்தாத செயலற்ற கவர்ச்சி, நம்முடைய உள்ளுணர்வுகளைக் கடினப்படுத்தும் தன்மையுடையது; அது நிச்சயமாகத் தீங்கிழைக்கக் கூடியது. நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் இதுவரை செய்தவைகளைவிட இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும். நாம் அனைவரும் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். வட இந்தியாவில் உள்ள ஊழிய ஸ்தலங்களும், நம் அருகில் உள்ள மாபெரும் நகரங்களும், உன்னத சுவிசேஷத்தை அறிவிக்க நம்மை அழைக்கின்றன.

நம்முடைய ஆவிக்குரிய போராயுதங்களைக் குறித்து நாம் வெட்கப்பட்டு, அசையாமல் அல்லது தயங்கி நிற்க வேண்டுமா? பழைய நல் விசுவாசமாகிய நற்செய்தி, தற்காலத்துத் தேவைகளுக்கு நிகரில்லையா? நாம் நற்செய்தியைக் குறித்து வெட்கப்பட ஒரு காரணமும் இல்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன். அது பழையதாகிவிடவில்லை; அது வழக்கொழிந்து போகவுமில்லை; அது காலத்தினால் பிற்போக்கானதுமில்லை. நமக்கு புதிய நற்செய்தியோ, அதில் சேர்க்கப்படவோ அல்லது நீக்கப்படவோ ஏதுமில்லை. பழைய வழிகளும், பழைய உண்மைகளும், முழுமையாக, உறுதியாக, அன்புடன் அறிவிக்கப்பட வேண்டியதே நமது தேவை. பவுல் பிரசங்கித்த அதே நற்செய்தியை முழுமையாகப் பிரசங்கியுங்கள், “விசுவாசிக்கிற எவனுக்கும் இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” (ரோமர் 1:16).

நற்செய்தியைப் பிரசங்கித்தப்பின் அதன் விளைவுகளைக் குறித்து வெட்கப்பட்டு, நாம் அசையாமல் அல்லது தயங்கி நிற்க வேண்டுமா? நாம் நம்முடைய தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு, பரிசுத்தவான்களுக்கு அன்று கொடுக்கப்பட்டிருந்த விசுவாசம் தன்னுடைய வல்லமையை இழந்துவிட்டது, இன்று அது ஒன்றும் செய்கிறதில்லை என்று முறுமுறுக்க வேண்டுமா? நாம் வெட்கப்படுவதற்கென்று ஒரு காரணமும் இல்லை. கிறிஸ்துவின் சத்தியப் போதனை தந்த விளைவுகளைவிட, இந்த உலகத்திலுள்ள எந்தவொரு மார்க்கத்தின் போதனையும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற இயலும். கிறிஸ்துவின் போதனையை இழிவுபடுத்தும் இன்றைய நவீன கல்விக்கூடங்கள், எத்தகைய விடுதலையைக் கொடுத்திருக்கின்றன? மாநகரங்களில், கடற்கரைகளில், மலை உச்சிகளில் உள்ள மக்கள் கூட்டம் நிறைந்த புறஜாதி வழிபாட்டுத்தலங்கள், எந்த அளவிற்கு மக்களுக்கு நற்செய்தி அறிவித்து நாகரிகம் அடைய வைத்துள்ளன?

இல்லை! என்பதே பதில். சத்தியம் என்பது என்ன என்ற கேள்விக்கு அதன் விளைவுகள் மற்றும் கனிகளைச் சுட்டிக்காட்டி பதிலளிக்கப்பட வேண்டுமெனில், நம்முடைய ஜெபப் புத்தகங்களிலும், விசுவாசப் பிரமாணங்களிலும் தெளிவாக வரையறுக்கப்பட்டு, முழுமையாகச் சொல்லப்பட்டு, நறுமணம்போல் வீசுகிற புதிய ஏற்பாட்டு விசுவாசத்தைக் குறித்து வெட்கப்பட எந்தவொரு காரணமும் இல்லை.

கடந்த காலங்களுக்காக நம்மைத் தாழ்த்தி, வரும் நாட்களில் தேவனுடைய உதவியுடன் இன்னும் அதிக முயற்சி செய்ய, நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் நம்முடைய கண்களை இன்னும் விரிவாகத் திறந்து, அதிகமாக உணர வேண்டும். தன்னை மறுத்துக் கொடுக்கும் காணிக்கைகளாலும், வைராக்கியத்துடன் இணைந்து செயல்படுவதாலும், உறுதியான சுவிசேஷப் பேச்சுடனும், இடைவிடாத ஜெபத்துடனும் நம்மை நாமே உந்தி அதிகமாகச் செயல்படலாம். இயேசு பரலோகத்தை விட்டு பூமிக்கு வந்த காரணமானது, நாம் அவருக்காகச் செய்யும் இந்தச் சிறப்பான செயலுக்கு மிகவும் தகுதியுள்ளது.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.