இப்பொழுது, புறஜாதிகளின் அப்போஸ்தலனான இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு உன்னதமான காரியம் ஒன்றும் இல்லையா? இதை வாசிப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, மிக முக்கியமாகக் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களின் சுருக்கத்தைத் தருகிறேன். இவை உங்கள் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு விதைகளாக அமையும்படி அவைகளைத் தூவுகிறேன்.
அ) மையப்பொருள் கிறிஸ்துவே அத்தேனே பட்டணத்தில் பவுலின் செய்கையிலிருந்து ஒரு சத்தியத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். எந்த இடத்திலும் நம்முடைய போதனையின் சாராம்சம் இயேசு கிறிஸ்துவாகவே இருக்க வேண்டும். நம்மைக் கேட்டுக்கொண்டிருக்கும் கூட்டம் கற்றவர்களோ, கல்லாதவர்களோ, உயர்ந்தவர்களோ, எளியவர்களோ யாராக இருந்தாலும், "கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் – கிறிஸ்து – கிறிஸ்து – கிறிஸ்து – சிலுவையில் அறையப்பட்டார், உயிர்த்தெழுந்தார், பரிந்து பேசுகிறார், விடுவிக்கிறார், மன்னிக்கிறார், ஏற்றுக்கொள்ளுகிறார், இரட்சிக்கிறார்" என்பதே நம் செய்தியாக இருக்க வேண்டும். நம்முடைய போதனையின் மையப்பொருள் கிறிஸ்துவாகவே இருக்க வேண்டும். இந்தக் காரியங்களை விட நற்செய்தியை நாம் மேம்படுத்தவே முடியாது. இதைவிடச் சிறப்பாகச் செயல்படக்கூடிய எந்த ஒரு தலைப்பையும் நாம் காண இயலாது. பவுல் அறுவடை செய்ததுபோல நாமும் அறுவடை செய்ய வேண்டுமென்றால், பவுல் விதைத்ததுபோல நாமும் விதைக்க வேண்டும்.
ஆ) தனித்து நிற்கப் பயப்பட வேண்டாம் அத்தேனே பட்டணத்தில் பவுலின் செய்கையிலிருந்து ஒரு நடைமுறைப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். தனி ஒருவனாகக் கிறிஸ்துவின் சாட்சியாக நிற்பதற்கு நாம் ஒருபோதும் பயப்படக் கூடாது. தேவைப்பட்டால் துன்மார்க்கமுள்ள திருச்சபையின் மத்தியில் தனியாகவும் – நம்முடைய நாட்டில் டெல்லியிலும், ஹைதராபாத்திலும், கொல்கத்தாவிலும், சென்னையிலும், திருச்சியிலும் தனியாக நில்லுங்கள் – எங்கு இருந்தாலும் அங்குத் தனியாக நில்லுங்கள். தேவனின் சத்தியம் நம் பக்கம் இருக்குமென்றால் நாம் அமைதி காக்க வேண்டியதில்லை. அத்தேனேயில் ஒரு பவுல், உலகத்திற்கு எதிராக ஒரு அத்தனாசியஸ், ரோம கத்தோலிக்க பீடாதிபதிகளின் படைகளுக்கு எதிராக ஒரு விக்ளிப், வார்ம்ஸ் நகரில் ஒரு லூத்தர் – இவர்கள் நம் கண்களுக்கு முன்னால் நிற்கும் கலங்கரை விளக்கங்கள். மனிதன் பார்க்கும் விதமாக தேவன் பார்க்கிறதில்லை. கூடியிருக்கும் மக்களின் தலைகளை எண்ணிக்கொண்டு நாம் நிற்கக் கூடாது. கிறிஸ்துவைத் தன் இருதயத்திலும், வேதத்தைத் தன் கரங்களிலும் கொண்டிருக்கும் ஒரு மனிதன், பெரும் விக்கிரக ஆராதனைக்காரர்கள் கூட்டத்தைவிட வலிமையானவன்!
இ) விசுவாசத்தில் உறுதி இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி, கிறிஸ்தவ மார்க்கத்தின் ஒரு அங்கம் என்பதை வலிமையாக எடுத்துரைப்பதன் முக்கியத்துவத்தையும் தேவையையும் அறிந்துகொள்ளுங்கள். வேதத்தின் அற்புதங்களைக் கேலி செய்யும், உபயோகமற்ற மரக்கட்டைகளைப்போல அவற்றைக் கட்டித் தூக்கி எறிய இடைவிடாமல் முயற்சி செய்யும், எடுபடாத விளக்கங்கள் மூலம் அவைகள் அற்புதங்களே அல்ல என நிரூபிக்க முயற்சி செய்யும் அவிசுவாசிகளும், சந்தேகப் பேர்வழிகளும் அநேகர் உண்டு என்பதை இதைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. இப்படிப்பட்டவர்களை எதிர்கொள்ள நாம் ஒருபோதும் பயப்படாமல், பவுலைப்போல நம்முடைய நிலையில் உறுதியாயிருக்க வேண்டும். பவுலைப்போல, கிறிஸ்து என்ற ஆதாரத்துடன் எல்லா மனிதரையும் உறுதியுடன் எதிர்கொள்ளவும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு நேராக அவர்களை வழிநடத்தவும் வேண்டும். இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை எதிர்க்கிறவர்கள் அந்த ஆதாரத்தை மறுதலிப்பதில்லை; அவர்களால் மறுதலிக்கவும் முடியாது. கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்காவிட்டால், அவர் பரமேறிய பிறகு அப்போஸ்தலர்களின் போதனைகளும் செய்கைகளும் தீர்க்க முடியாத புதிராகவே இருந்திருக்கும். ஆனால், நாம் விசுவாசிக்கிறபடி, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மறுக்க முடியாத உண்மையானால், இயற்கைக்கு அப்பாற்பட்ட இந்தக் காரியங்களுக்கு எதிரான கட்டுக்கதையான விவாதங்கள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டு வீழ்ந்துபோகும். உன்னதமானதும் அதிசயமானதுமான கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட நிலையில், வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்ற சிறு அற்புதங்கள் சாத்தியமற்றவை என்று சொல்வது புத்தியீனமானது.
ஈ) நற்செய்தியின் வல்லமை அத்தேனே பட்டணத்தில் பவுலின் செய்கையிலிருந்து, நமது விசுவாசத்தை உற்சாகப்படுத்தும் பாடத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். நாம் நற்செய்தியைப் பிரசங்கிப்போமென்றால், அது தன் பணியைச் செய்யும் என்ற நம்பிக்கையுடன் அதைச் செய்வோம். மார்ஸ் மேடையில் தனியாக நின்ற தர்சு பட்டணத்து யூதன், அச்சமயத்திலே ஒன்றும் செய்யாதவன் போல் காணப்பட்டான். ஏதோ தோல்வியில் முடிந்ததுபோல அவன் தன் வழியே போய்விட்டான். அநேகமாக, ஸ்தோயிக்கர்களும் எப்பிக்கூரியர்களும் ஏதோ தாங்கள் வென்றுவிட்டதுபோல, பவுலை ஏளனம் செய்து சிரித்திருக்கலாம். ஆனால் அந்தத் தனி யூதன், ஒருபோதும் அணைக்க இயலாத ஒரு விளக்கை அங்கே ஏற்றியிருந்தான். அத்தேனேயில் அவன் அறிவித்த வார்த்தையானது, வளர்ந்து பெருகி, மிகப்பெரிய மரமானது. அந்தச் சிறிய புளித்தமாவு, பின்னாளில் முழு கிரேக்கத்தையும் புளிக்கவைத்தது. பவுல் பிரசங்கித்த நற்செய்தி விக்கிரக ஆராதனைக்கு மேலாக வெற்றிபெற்றது. இன்றைக்கு உள்ள வெறுமையான பார்த்தினோன் கோயில், அத்தேனியரின் மார்க்கம் மரித்துப்போய்விட்டது என்பதற்கு ஆதாரமாகும். ஆம்; நாம் நல்ல விதையை விதைப்போமென்றால், நாம் கண்ணீரோடே விதைத்திருக்கலாம், “ஆனாலும் நாம் அறுத்த அரிகளைக் கெம்பீரத்தோடே சுமந்துகொண்டு வருவோம்” (சங்கீதம் 126:6).