எந்த எண்ண அலைகளுடன் இந்தக் கட்டுரையை ஆரம்பித்தேனோ, அதே நினைவலைகளுடன் இதை முடிக்க இருக்கிறேன். நம்முடைய கிராமங்களில் மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே வருகிறது. நகரவாசிகளின் எண்ணிக்கை கிராமவாசிகளின் எண்ணிக்கையைவிடப் பன்மடங்கு அதிகம். நீங்கள் ஒரு நகரவாசியாக இருந்தால், முடிவாக இப்போது நான் கொடுக்கப்போகும் அறிவுரையைக் கவனமுடன் கேளுங்கள். உங்கள் ஆத்துமாவைக் குறித்து நான் பேசும்போது, உங்கள் முழு கவனத்தையும் என்னிடம் செலுத்துங்கள்.

  1. நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் ஒரு வித்தியாசமான, ஆபத்தான நிலையிலே இருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வசிப்பிடம் நகரத்திலோ அல்லது கிராமத்திலோ அமைந்திருக்கலாம். ஆனால் பாபேலின் நாட்கள் முதல், எங்கெல்லாம் ஆதாமின் பிள்ளைகள் அதிக எண்ணிக்கையில் கூடியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் ஒருவரையொருவர் உச்சகட்ட பாவத்தையும் துன்மார்க்கத்தையும் நோக்கி இழுக்கிறார்கள். மாபெரும் நகரங்கள் எப்போதும் சாத்தானின் சிங்காசனமாகவே இருந்திருக்கின்றன. இந்த நகரங்களில் இளம் வாலிபன் தேவனற்ற தன்மையின் பல உதாரணங்களைக் காண்கிறான்; அவன் பாவத்திலே வாழ முடிவுசெய்துவிட்டால், அவனுக்கு உதவப் பல நண்பர்கள் தயாராக இருப்பார்கள். இந்த நகரங்களில்தான் திரையரங்குகளும், சூதாட்ட விடுதிகளும், நடன விடுதிகளும், மதுபான விடுதிகளும் எப்போதும் கூட்டமாக இருக்கும். இந்த நகரங்களில்தான் பண ஆசையும், உலகப் பொழுதுபோக்குகளும், மாம்ச இச்சைகளும் திரளானவர்களை அடிமையாக்குகின்றன. ஒரு மனிதன் தன் ஓய்வுநாளை உதாசீனப்படுத்தவும், தேவ கிருபையை அவமதிக்கவும், வேதத்தை அலட்சியப்படுத்தவும், ஜெபப் பழக்கத்தை விட்டுவிடவும் அவனை உற்சாகப்படுத்தும் நூற்றுக்கணக்கான காரியங்களை இந்த நகரங்களில் காணலாம். நீங்கள் ஒரு நகரத்தில் வாழ்ந்தால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு வரும் ஆபத்தைக் குறித்து அறிந்திருங்கள். உங்கள் பலவீனத்தையும் பாவ சுபாவத்தையும் உணர்ந்திருங்கள். கிறிஸ்துவண்டை ஓடி, உங்கள் ஆத்துமாவை அவர் பாதுகாத்துக்கொள்ளும்படி அவரிடம் ஒப்புக்கொடுங்கள். அவர் உங்களைப் பிடித்துக்கொள்ளும்படிக் கேளுங்கள், அவர் உங்களைப் பாதுகாப்பாக நடத்துவார். உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பிசாசுக்கு எதிர்த்து நின்று, விழிப்புடன் ஜெபம் பண்ணுங்கள்.

  2. மறுபுறம், நீங்கள் ஒரு நகரத்தில் வாழ்ந்தால், கிராமப்பகுதிகளில் உங்களுக்குக் கிடைக்காத மற்றொரு சிறப்பான உதவி உங்களுக்குக் கிடைக்கலாம். பரலோகத்திற்கு நேரான உங்கள் பயணத்தில் உங்களுக்கு மகிழ்வுடன் உதவிசெய்யும் உண்மையான கிறிஸ்துவின் ஊழியர்கள் இல்லாத இந்திய நகரங்களே இல்லை! தங்கள் சிறு மந்தையோடு மேலும் ஒருவரைக் கூட்டிக்கொள்ள ஆயத்தமாயிருக்கும் இடுக்கமான வழியில் செல்லும் யாத்திரிகர்கள் இல்லாத, நற்செய்தியைப் பிரசங்கிக்கும் ஊழியர்கள் இல்லாத இந்தியப் பட்டணங்கள் சொற்பமே!

வாசகரே, திடன் கொள்ளுங்கள்! ஒரு நகரத்தில் கிறிஸ்துவுக்காக வாழ்வது என்பது முடியாத காரியம் என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள். தேவனால் எல்லாம் கூடும் என்பதை நினைவில் வையுங்கள். மாபெரும் சோதனைகளின் மத்தியிலும், சிலுவையைச் சுமந்து, மரணம்வரை உண்மையாயிருந்த மாபெரும் சாட்சிகளின் திரளை நினைத்துக்கொள்ளுங்கள். பாபிலோனில் தானியேலையும் மற்ற மூன்று வாலிபர்களையும் நினைத்துக்கொள்ளுங்கள். ரோம் நகரில் நீரோவின் அரண்மனையில் இருந்த பரிசுத்தவான்களை நினைத்துக்கொள்ளுங்கள். அப்போஸ்தலர்களின் நாட்களில், கொரிந்துவிலும், எபேசுவிலும், அந்தியோகியாவிலும் இருந்த திரளான விசுவாசிகளை நினைத்துக்கொள்ளுங்கள். வாழும் இடமல்ல, தேவ கிருபையே ஒருவனைக் கிறிஸ்தவனாக்குகிறது. பூமியில் வாழ்ந்தவர்களிலேயே மிகவும் பரிசுத்தமானவர்களும், தேவனுக்கு மிகவும் பயனுள்ளவர்களுமான பரிசுத்தவான்கள், வனாந்திரத்தில் வாழ்ந்த சந்நியாசிகள் அல்ல, அவர்களும் நகரவாசிகளே.

இவற்றை நினைவில் வைத்து, உற்சாகமாக இருங்கள். “முழுவதும் விக்கிரக ஆராதனையால் நிறைந்திருந்த” அத்தேனேயைப் போன்ற ஒரு நகரத்தில்கூட உங்கள் வசிப்பிடம் அமைந்திருக்கலாம். வங்கியிலோ, வியாபார ஸ்தலத்திலோ அல்லது ஒரு கடையிலோ நீங்கள் மட்டும் தனித்து நிற்க வேண்டியிருக்கலாம். கிறிஸ்து உங்களுடன் இருந்தால் நீங்கள் தனியானவர் அல்ல. கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். தைரியமாகவும், உறுதியாகவும், பொறுமையாகவும் இருங்கள். மாபெரும் நகரத்திலும்கூட ஒரு மனிதன் மகிழ்ச்சியானவனாகவும், பயனுள்ள கிறிஸ்தவனாகவும் வாழ முடியும் என்பதையும், அவன் வாழும்போது மதிக்கப்படுபவனாகவும், மரிக்கும்போது கனப்படுத்தப்படுபவனாகவும் இருப்பான் என்பதையும் நீங்கள் கண்டுகொள்ளும் நாள் வரும்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.