1 | “அந்நாளின் பாவத்தையும் தீட்டையும் நீக்கித் தூய்மையாக்கும் நீரூற்று தாவீதின் குடும்பத்தாருக்கெனவும் எருசலேமில் குடியிருப்போருக்கெனவும் தோன்றும். |
2 | அந்நாளிலே நான் சிலைகளின் பெயர்கள் நாட்டில் இல்லாதவாறு அறவே ஒழித்துவிடுவேன்: அதன்பின் அவற்றைப் பற்றிய நினைவு யாருக்கும் இராது: மேலும் போலி இறைவாக்கினரையும் அசுத்த ஆவியையும் நாட்டிலிருந்து விரட்டி விடுவேன்” என்கிறார் படைகளின் ஆண்டவர். |
3 | எவனாவது மீண்டும் இறைவாக்கினனாகத் தோன்றுவானாகில் அவனைப் பெற்றெடுத்த தந்தையும் தாயும், “ஆண்டவரின் பெயரால் பொய் பேசுவதால் நீ உயிர்வாழக்கூடாது” என்று அவனிடம் சொல்வார்கள். அவன் இறைவாக்கு உரைக்கும்போதே அவனைப் பெற்றெடுத்த தாய் தந்தையர் அவனைக் குத்திக் கொன்று போடுவார்கள். |
4 | அந்நாளில் இறைவாக்கினருள் ஒவ்வொருவனும் இறைவாக்கு உரைக்கும் போது தான் கண்ட காட்சியைக் குறித்து வெட்கமடைவான்: ஏமாற்றுவதற்காகக் கம்பளி மேலாடையைப் போர்த்திக் கொள்ளமாட்டான். |
5 | ஆனால், “நான் இறைவாக்கினன் அல்ல: நிலத்தைப் பயிரிடுகிற உழவன்: என் இளமை முதல் நிலத்தை உழுது பயிர் செய்பவன்” என்று சொல்வான். |
6 | “உன் மார்பில் இந்த வடுக்கள் எவ்வாறு ஏற்பட்டன?” என ஒருவன் வினவினால், “என் நண்பர் இல்லத்தில் காயமுற்றபோது இவை ஏற்பட்டன” என மறுமொழி பகர்வான். |
7 | “வாளே எழுந்திடு, என் ஆயனுக்கும் நெருங்கிய நண்பனுக்கும் எதிராகக்கிளர்ந்தெழு என்கிறார் படைகளின் ஆண்டவர். 'ஆயனை வெட்டு: அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்: சிறியோர்க்கு எதிராக என் கையை ஓங்குவேன். |
8 | நாட்டு மக்களுள் மூன்றில் இரு பங்கினர் வெட்டுண்டு மாள்வர்: மூன்றில் ஒரு பங்கினரே எஞ்சியிருப்பர்', என்கிறார் ஆண்டவர். |
9 | இந்த மூன்றில் ஒரு பங்கினரையும் வெள்ளியை நெருப்பில் இட்டுத் தூய்மைப்படுத்துவது போல் தூய்மைப்படுத்துவேன்: பொன்னைப் புடமிடுவதுபோல் புடமிடுவேன்: அவர்கள் என் பெயரை நினைத்து மன்றாடுவார்கள்: நானும் அவர்கள் மன்றாட்டிற்குச் செவி கொடுப்பேன்: 'இவர்கள் என் மக்கள்' என்பேன் நான், 'ஆண்டவர் எங்கள் கடவுள்' என்பார்கள் அவர்கள்.” |