வேதாகமத்தை வாசி

Click to Subscribe

ஓசியா 13

                   
புத்தகங்களைக் காட்டு
1எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகாலின் விஷயத்தில் குற்றம் செய்து இறந்துபோனான்.
2இப்போதும் அவர்கள் அதிகமதிகமாகப் பாவம் செய்து, தங்கள் வெள்ளியினால் செய்த சிலைகளையும், தங்கள் அறிவுக்கேற்ப உருவங்களையும் தங்களுக்கு செய்துகொள்கிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனிதர்களில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளை முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்கிறார்கள்.
3ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள்.
4நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை.
5நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்திரத்திலே அறிந்துகொண்டேன்.
6தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்களுடைய இருதயம் மேட்டிமையானது; அதினால் என்னை மறந்தார்கள்.
7ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன்; சிவிங்கியைப்போல் வழியருகே பதுங்கியிருப்பேன்.
8குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரலைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் கொன்றுபோடுகிறதுபோல் கொன்றுபோடுவேன்; காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.
9இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடு உண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு.
10எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை விரும்பும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?
11நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்.
12எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.
13பிரசவிக்கும் பெண்ணின் வேதனை அவனுக்கு வரும்; அவன் விவேகமில்லாத பிள்ளை; பிரசவநேரம் வரை அவன் நிற்கவில்லை.
14அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும்.
15இவன் சகோதரர்களுக்குள்ளே மக்கள் பெருத்தவனாயிருந்தாலும், கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய கிணறு சுரக்காமல் வற்றிப்போகும்; அது விரும்பப்படத்தக்க சகல பொருட்களுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்துக்கொண்டுபோகும்.
16சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்செய்தபடியால், குற்றம் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகளின் வயிறுகள் கிழிக்கப்படும்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.