யாத்திராகமம் 21:10-ஆம் வசனப்பகுதியில், தோராவின்படி ஆண்கள் பலதார மணம் செய்துகொள்ளும்படி தேவன் அனுமதிக்கிறாரா? மேலும், ஓர் ஆண் பல மனைவிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான சட்டங்களையும் அவர் அமைத்திருக்கிறாரா?

வேதாகமத்தின் தேவன் ஒருபோதும் பலதார மணத்தை ஏற்படுத்தவுமில்லை, அதை ஆதரிக்கவுமில்லை (ஆதியாகமம் 2:18-25 ஆகிய வசனங்களில் சொல்லப்பட்ட காரியம், மத்தேயு 19:1-9 ஆகிய வசனங்களிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது). அதாவது, திருமண உடன்படிக்கையில் ஓர் ஆண் ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் செய்துகொள்வதே தேவனுடைய திட்டமாயிருக்கிறது. இதை மீறுவது பாவமாகும்; தேவனின் பார்வையில் இது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகும். புறமதக் கலாச்சாரங்கள் எபிரெய மக்களின் மீது அதிக அளவிலான தாக்கங்களைக் கொண்டிருந்தன என்பது உண்மைதான். அக்காலத்தில் பலருக்குப் பல மனைவிகள் இருந்தார்கள் என்பதும் உண்மையே. ஆனால், இது ஒருபோதும் தேவனின் திட்டமல்ல. தேவன் ஒருபோதும் பலதார மணத்தை மன்னிக்கவில்லை. உண்மையில், தோராவின் சட்டங்கள் மிகவும் கடுமையானவை. அது திருமணமானவர்களிடையே காணப்படும் விபசாரம் என்னும் பாவத்திற்கு மரண தண்டனையைக் கொடுக்கப் பரிந்துரைக்கிறது (லேவியராகமம் 20:10, உபாகமம் 22:22). பெரும்பாலான பண்டைய கலாச்சாரங்களும் மதங்களும் விபசாரத்தைத் தண்டனைக்குரிய ஒரு குற்றமாகக்கூடப் பார்ப்பதில்லை.

வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள எந்தக் குடும்பத்திலும் பலதார மணம் நேர்மறையான விளைவை ஏற்படுத்தியதாக நாம் காண்கிறதில்லை. வேதம் கூறும் அனைத்து முக்கியமான கதாபாத்திரங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைக் கொண்டிருந்ததால் பல பிரச்சினைகளையே சந்தித்தன என்பதே உண்மை. இத்தகைய பிரச்சினைகள் அனைத்திற்கும் முதன்மையான காரணம், "ஒரு கணவன், ஒரு மனைவி" என்ற குடும்பத்திற்கான தேவ திட்டத்திற்கு எதிராக அவர்கள் செயல்பட்டதன் விளைவேயாகும். இத்தகைய பிரச்சினைக்குரிய நிகழ்வுகள் வேதத்தில் சேர்க்கப்படுவதைத் தேவன் உறுதிசெய்தார். ஏனெனில், இத்தகைய பலதார மணத்தைத் தேவன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், அது தண்டனைக்குரியது என்பதையும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை வேதாகமத்தில் சேர்த்துள்ளார். பழைய ஏற்பாட்டின் இறுதிப் பகுதிக்கு நாம் வரும்போது, கணவன் - மனைவிக்கு இடையே (மனைவிகளுக்கு இடையே அல்ல) அமைந்துள்ள திருமண உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மல்கியாவின் தீர்க்கதரிசனத்தில் தேவன் தெளிவாகக் கூறியுள்ளார். நாம் புதிய ஏற்பாட்டிற்கு வரும்போது அந்தக் கட்டளை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

லேவியராகமம் 12:1-8: இந்தப் வேதப்பகுதி ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் “தீட்டுள்ளவள்” (அசுத்தமானவள்) என்பதால், பிரசவத்திற்குப் பிறகு அவள் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. பெண் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதைக் காட்டிலும் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுப்பது தூய்மையானது என்றும் அது கூறுகிறதா? மேலும் ஒரு தாய் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும்போது இருமுறை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும் என்று அது கூறுகிறது. இது குழந்தைப் பிறப்பின் அடிப்படையில், முக்கியமாகப் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை பாலினப் பாகுபாடு காட்டப்படுகிற ஒன்றல்லவா? ஒரு பெண் ஒரு பெண்ணாக இருக்கிறதற்காகவே தீட்டுள்ளவளாக இருக்க வேண்டுமா? இது பெண்களுக்கு எதிரான வெளிப்படையான ஆணாதிக்கமும் பாரபட்சமுமாக இருக்கிறதல்லவா?

ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த பெண் 7 நாட்கள் மற்றும் 33 நாட்கள் (மொத்தம் 40 நாட்கள்) சடங்கு ரீதியாகத் தீட்டுள்ளவளாக இருக்க வேண்டும் என்று நியாயப்பிரமாணம் குறிப்பிடுகிறது. அதுவே, அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் 14 நாட்கள் மற்றும் 66 நாட்களுமாகச் சேர்த்து மொத்தம் 80 நாட்கள் தீட்டுள்ளவளாக இருக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது என்பது உண்மையே.

யூத பாரம்பரியத்தில் பின்பற்றப்படுகிற சடங்குகளையும், அவர்கள் வாழ்க்கையில் தூய்மைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வதே இந்த வாதத்தைத் தீர்ப்பதற்கான சிறந்த வழியாகும். இங்கே சொல்லப்பட்டுள்ள 'தீட்டு' என்ற வார்த்தையானது 'குறைவுள்ளவள்' என்றோ அல்லது 'பாவம் நிறைந்தவள்' என்றோ பொருளைத் தருகிறதில்லை. மாறாக, இது யூத கலாச்சாரத்தில் பேணப்படுகிற சுத்தத்தின் மாபெரும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இதற்காக நாற்பது நாட்கள், எண்பது நாட்கள் போன்ற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்கள் ஏன் கொடுக்கப்படுகின்றன என்று வேதம் நமக்குத் தெளிவாகச் சொல்லவில்லை என்றாலும், நம்பத்தகுந்த சில சிறந்த காரணங்களை நாம் சிந்திக்கலாம்:

  1. தாயின் வயிற்றில் இருக்கும்போது, குழந்தைகளிடத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாகப் பெண் குழந்தைகளுக்குப் பிறந்தவுடனே “மாதவிடாய்” போன்ற சிறிய அளவிலான இரத்தப்போக்கு பிறப்புறுப்பு வழியாக வெளியேறுவது மருத்துவ ரீதியாகப் பொதுவான ஒன்றாகும். குழந்தைகளுக்கு உண்டாகிற இது தோராயமாக ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும். எனவே, ஒரு பெண் குழந்தைக்கும் அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்க்கும் (தாய்க்கும் மகளுக்கும்) சுத்திகரிப்புக்கான காலம் இரட்டிப்பாகத் தேவைப்பட்டிருக்கலாம்.

  2. மேலும், “ஜான்ஸ் ஹாப்கின்ஸ்” (Johns Hopkins) பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வறிக்கை கூறுவதைக் கவனிப்போம். பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயின் இரத்தப்போக்கில் உள்ள நச்சுத்தன்மையானது, ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயின் இரத்தப்போக்கின் நச்சுத்தன்மையைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. குழந்தைகள் பிறந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு பெண்களின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யப்பட்டபோது, ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு பெண் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரவும், பாலியல் உறவுகளை வைத்துக்கொள்ளவும் அதிக நேரம் தேவைப்படுவதாக அது கூறுகிறது. (David I. Macht, "A Scientific Appreciation of Genesis 1:28 and Leviticus 12:1-5", Journal of Biblical Literature, Vol. 52, No. 4 (Dec., 1933), pp. 253-260. வெளியிடப்பட்ட ஆய்வு மற்றும் முடிவுகளின் விவரங்களை [சந்தேகத்திற்குரிய இணைப்பு அகற்றப்பட்டது] என்ற இணைப்பில் காணலாம்). எனவே, தாயின் பாதுகாப்பு மற்றும் உடல்நலக் காரணங்களுக்காகவே இத்தகைய நீண்ட காலம் (எண்பது நாட்கள்) உடலுறவிலிருந்து விலகியிருக்க வேண்டியது அவசியமாக இருந்திருக்கலாம்.

  3. ஆண் குழந்தைகள் பிறந்த எட்டாவது நாளில் (லேவியராகமம் 12:3) அவர்களுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும்; இது அக்குழந்தைகளுக்கு இயல்பான சுத்தம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கலாம். ஆனால், பெண் குழந்தைக்கு இத்தகைய விருத்தசேதன முறை இல்லாததால், தாயும் சேயும் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ள அதிக நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்திருக்கலாம்.

  4. பண்டைய கலாச்சாரங்களில் ஆண் பிள்ளைகள் மிகவும் மதிப்புமிக்கவர்களாகக் கருதப்பட்டார்கள் (இன்றைய பல கலாச்சாரங்களிலும் இத்தகைய எண்ணமே தொடர்ந்துகொண்டிருக்கிறது). ஒரு தாய் புதிதாகப் பிறந்த ஒரு பெண் குழந்தையுடன் வீட்டில் அதிக நாட்கள் (அதாவது சுத்திகரிப்பின் நாட்கள்) இருப்பது, தாய்க்கும் மகளுக்குமான அதிகமான பிணைப்பை உருவாக்க உதவும். மேலும் "பெண் குழந்தை பிறந்துவிட்டதே, ஓர் ஆண் குழந்தை பிறந்திருந்தால் நன்றாயிருக்குமே" என்று கருதி, மீண்டும் கருத்தரிக்க எண்ணும் கணவன், பெண் குழந்தை பிறந்த சிறிது நாட்களிலேயே மனைவியுடன் உடலுறவு கொள்வதைத் தடுத்து, தாயின் ஆரோக்கியம் காக்கப்படுவதற்கும் மேம்படுவதற்கும் இந்த அதிகப்படியான சுத்திகரிப்பு நாட்கள் உதவியாக இருக்கின்றன.

இப்போது முக்கியமானதும் நம்முடைய ஆர்வத்தைத் தூண்டுகிறதுமான ஒரு காரியத்திற்கு வருவோம். பிறக்கிற குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், சுத்திகரிப்பின் பிராயச்சித்தத்திற்காக தேவனுக்கு முன்பாகச் செலுத்த வேண்டிய பலிகள் ஒரே விதமானவையே (லேவியராகமம் 12:6). ஆண் குழந்தைகளுக்கு ஒருவிதமான பலியும், பெண் குழந்தைகளுக்கு வேறுவிதமான பலியும் கிடையாது. பலி செலுத்தும் சடங்குகளில் வேறுபாடுகள் எதுவும் இல்லை. இது தேவனுக்கு முன்பாக இரு பாலினத்தவரும் சமமாக இருக்கிறார்கள் என்பதையும், அவர் எவ்விதப் பாகுபாடும் காட்டுகிறவர் அல்ல என்பதையும் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. பாலினம் தொடர்பான தேவனின் இருதயத்தைப் புரிந்துகொள்வதற்கு இந்தக் குறிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

“தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்” (ஆதி. 1:28) என்று கட்டளையிட்டார். எனவே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்பது தேவனுடைய கட்டளையாகும். மேலும் பிள்ளைகள் கர்த்தருடைய சுதந்தரமாகக் (வெகுமதியாகக்) கருதப்படுகிறார்கள் (சங்கீதம் 127:3). தம்மிடத்தில் வந்த குழந்தைகளை வரவேற்று அவர்களை ஆசீர்வதித்ததன் மூலமாக இயேசு கிறிஸ்து மோசேயின் சட்டங்களை நிறைவேற்றினார் (மத்தேயு 19:14). ஆகவே, பெண்களுக்கான சுத்திகரிப்பின் நாட்கள் (தனிமைப்படுத்தப்பட்ட காலங்கள்) பாலினப் பாகுபாட்டின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை அல்ல என்ற முடிவுக்கு நாம் வரலாம். மாறாக, இது பிரசவ காலத்திலும், பிரசவத்திற்குப் பிந்தைய காலகட்டங்களிலும் பேணப்பட வேண்டிய சுத்திகரிப்பு மற்றும் நடைமுறைச் சுகாதாரச் சூழ்நிலைகளுடன் தொடர்புடையது என்று நாம் உறுதியாகக் கூறலாம்.

 

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.