நாம் எவ்வாறு தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்யக்கூடாது என்பதை முதலில் சிந்தித்துவிட்டு, பின்பு சரியான வழிமுறைகள் என்ன என்பதைச் சிந்திப்பதே சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
காலையில் அமைதிவேளையின்போது நமது மனதில் எழுகிற சிந்தனைகள் எல்லாம் தேவனுடைய சித்தம் அல்ல! நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்து, அமைதிவேளையைச் சில காலங்களாகக் கடைப்பிடிக்கிறீர்கள் என்றால் இது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்கள் அமைதிவேளையின்போது பல தெளிவற்ற சிந்தனைகள் உங்கள் மனதில் ஓடும். இவற்றை நீங்கள் தேவனுடைய சித்தம் என்று சொல்ல முடியுமா? உங்கள் மனதில் எழுகின்ற ஆழ்ந்த அல்லது அழுத்தமான சிந்தனையையே தேவனுடைய சித்தம் என்று சொல்லிவிட இயலாது. ஏனென்றால், உங்கள் மனதில் எழுகின்ற உறுதியான சிந்தனைகள் தான் தேவனுடைய சித்தம் என்று வேத வாக்கியங்களில் எங்கும் சொல்லப்படவில்லை. சற்று நீங்கள் கவனித்தீர்களென்றால், அவிசுவாசிகளுக்கும் மனசாட்சி உண்டு. அவர்கள் தங்களுடைய விக்கிரகங்களுக்கு எதையாகிலும் நேர்ந்துகொண்டால், அதைத் தங்கள் மனசாட்சியின்படி சரியாக நிறைவேற்றிவிடுகிறார்கள். ஆகவே, நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபித்துவிட்டபடியினால், உங்கள் மனசாட்சி ஏற்படுத்தும் சிந்தனைகள் எல்லாம் தேவனுடைய சித்தம் ஆகிவிடாது.
சிலர் சீட்டுப்போட்டு தேவனுடைய சித்தம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள். தாங்கள் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தங்கள் மனதில் வைத்திருக்கிறார்களோ, அவற்றைத் தனித்தனித் துண்டுச் சீட்டுகளில் எழுதி, ஜெபம் செய்துவிட்டு, கண்களை மூடி ஏதேனும் ஒன்றை எடுப்பார்கள். அதில் என்ன வருகிறதோ, அதுவே தேவனுடைய சித்தம் என்று முடிவு செய்துவிடுவார்கள். நீங்கள் வேதவாக்கியங்களைக் கவனித்துப் பார்த்தால், சீஷர்கள் மத்தியாஸ் என்பவரைச் சீட்டுப்போட்டே அப்போஸ்தல ஊழியத்திற்குத் தெரிந்தெடுத்தார்கள். ஆனால், உண்மையில் தேவன் பவுலையே அப்போஸ்தல ஊழியத்திற்குத் தெரிந்தெடுத்தார். ஆகவே, சீட்டுப்போடுவதைவிட, தேவனை அண்டிக்கொள்வதே சிறந்ததல்லவா!
சிலர் இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறேன்: "நான் வேதப் புத்தகத்தைத் திறக்கும்போது எந்த வசனம் என் கண்முன் வருகிறதோ, அந்த வசனத்தின் மூலம் தேவன் என்னோடு பேசுகிறார், அதுதான் தேவனுடைய சித்தம்." வேதப்புத்தகம் அந்த நோக்கத்துடன் ஒருபோதும் எழுதப்படவில்லை. அது தோல் சுருள்களில்தான் எழுதப்பட்டது; வசனங்களாகக் கூட பிரிக்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே, இதுதான் தேவனுடைய சித்தத்தை அறிய சரியான முறை என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், நாம் பின்வரும் கருத்தையும் நம்ப வேண்டும்: அச்சு இயந்திரங்களும், தாள்களும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் தேவன் இந்த முறையைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார் என்று சொல்ல வேண்டும். எனவே, இந்த முறைகளெல்லாம் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளச் சரியான முறைகள் அல்ல.