தேவன் என்னைக் குறித்து ஒரு சித்தம் வைத்திருப்பார் என்றால், அதை அவர் நிச்சயமாக ஒளித்து வைக்கப் போவதில்லை! நான் அதை எளிதாகக் கண்டுகொள்ளும் வகையில் அவரே வழிகளை ஏற்படுத்தி வைத்திருப்பார். 2 பேதுரு 1:19-ஆம் வசனத்திற்கு உங்கள் கவனத்தைத் திருப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்: > "அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்." இங்கே பேதுரு குறிப்பிடும் தீர்க்கதரிசனம் எது? அவர் முழு வேதவாக்கியங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் (இந்நாட்களில் கள்ளத் தீர்க்கதரிசிகள் சொல்லும் கள்ளத் தீர்க்கதரிசனத்தைப் பற்றி அல்ல!). ஆகவே, வேதத்தை முழுமையாக ஆராய்ந்தால் மட்டுமே நீங்கள் அதைக் கண்டுகொள்ள முடியும்.

தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள இதுவே மிகச் சரியான வழி. நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்றால், அவர் அதை எங்கே வெளிப்படுத்தியிருக்கிறாரோ அங்கேதான் நீங்கள் அதைக் கண்டுகொள்ள வேண்டும். தேவன் தன்னுடைய வார்த்தையைவிட வேறு எங்கும் அவருடைய சித்தத்தை வெளிப்படையாக, தெளிவாக வெளிப்படுத்தவில்லை!

இப்பொழுது நீங்கள் சொல்லலாம், "வேதாகமத்தில் என்னைப் பற்றித் தனியாக ஒரு அதிகாரம் இல்லையே. நான் யாரைத் திருமணம் செய்ய வேண்டும், கல்லூரியில் எந்தப் படிப்பைப் படிக்க வேண்டும், எந்த நிறுவனத்தில் அல்லது எந்த வேலையில் நான் சேர வேண்டும் என்பதைப் பற்றி வேதாகமம் எதுவுமே எனக்குச் சொல்லவில்லையே" என்று நீங்கள் கேட்கலாம். இவைகளைக் குறித்து நான் வேதாகமத்தில் எப்படிக் கண்டுபிடிப்பது என்றும் நீங்கள் சிந்திக்கலாம். தொடர்ந்து வாசியுங்கள், அதை நீங்கள் சீக்கிரம் கண்டுகொள்வீர்கள்.

நாம் மேலும் தொடர்வதற்கு முன்பாக, உபாகமம் 29:29-ஐ வாசிக்கலாம்: > "மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்." இந்த வசனத்தை நீங்கள் கவனித்தால், தேவனுடைய சித்தம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது, மறைவான தேவனுடைய சித்தம்; இரண்டாவது, வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சித்தம். முதல் பகுதியானது தேவனுக்குச் சொந்தமானது, அதை அறிந்துகொள்ள முயற்சிப்பதும் செய்வதும் என்னுடைய வேலை அல்ல. அது தேவன் செய்ய வேண்டிய பணி. என்னுடைய வேலையெல்லாம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற தேவனுடைய சித்தத்தை ஒழுங்காகச் செய்வதுதான். நம்முடைய வாழ்க்கையில் நாம் நிறைவேற்ற வேண்டிய தேவனுடைய சித்தம் இதுவே.

நாம் அடிக்கடி செய்யும் தவறு என்னவென்றால், வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தேவனுடைய சித்தத்தைச் செய்யாமல், மறைக்கப்பட்டிருக்கும் தேவனுடைய சித்தம் என்ன என்பதைக் கண்டுகொள்ள நாம் ஆர்வம் காட்டுகிறோம். நம்முடைய பணியைச் செய்யாமல், தேவன் செய்ய வேண்டிய பணியில் கவனம் செலுத்துகிறோம். தேவன் வெளிப்படுத்தியிருக்கிற அவருடைய சித்தத்தை நீங்கள் செய்யவில்லை என்றால், தேவன் அவருடைய பணியைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆகவே, நமக்குச் சொந்தமானது என்னவென்றால் வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற தேவனுடைய சித்தமே.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.