வேதாகமத்தை வாசி

Click to Subscribe

ஓசியா 9

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரவேலே, மகிழ்ச்சியாக இருக்காதே; மற்ற மக்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ வழிவிலகிப்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் கூலியை நாடுகிறாய்.
2தானியக்களமும் திராட்சைத்தொட்டியும் அவர்களைப் பிழைக்கச்செய்வதில்லை; அவர்களுக்குத் திராட்சைரசம் ஒழிந்துபோகும்.
3அவர்கள் கர்த்தருடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர்கள் மீண்டும் எகிப்திற்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைச் சாப்பிடுவார்கள்.
4அவர்கள் கர்த்தருக்குத் திராட்சைரசத்தின் பானபலியை ஊற்றுவதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாக இருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைச் சாப்பிடுகிற அனைவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கே உரியது, அது கர்த்தருடைய ஆலயத்தில் வருவதில்லை.
5ஆசரிப்பு நாளிலும், கர்த்தருடைய பண்டிகைநாளிலும் என்ன செய்வீர்கள்?
6இதோ, அவர்கள் அழிவிற்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம் செய்யும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் நெருஞ்சிமுட்செடிகளுக்குச் சொந்தமாகும்; அவர்களுடைய குடியிருப்புகளில் முட்செடிகள் முளைக்கும்.
7விசாரிப்பின் நாட்கள் வரும், நீதி சரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர்கள் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்தினாலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடர்களும், ஆவியைப் பெற்ற மனிதர்கள் பைத்தியம் பிடித்தவர்களுமாக இருக்கிறார்கள்.
8எப்பிராயீமின் காவற்காரர்கள் என் தேவனோடு எதிர்த்து நிற்கிறார்கள்; தீர்க்கதரிசி தன் வழிகளிலெல்லாம் குருவிபிடிக்கிறவனுடைய கண்ணியாகவும், தன் தேவனுடைய ஆலயத்திலே பகையாளியாகவும் இருக்கிறான்.
9கிபியாவின் நாட்களில் நடந்தது போல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்.
10வனாந்திரத்தில் திராட்சைக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்முறை பழுத்த பழங்களைப்போல உங்கள் முற்பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோரிடம் போய், இழிவானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள்.
11எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்துபோகும்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதும் இல்லை, கர்ப்பமடைவதும் இல்லை.
12அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனிதர்கள் இல்லாதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் இல்லாதவர்களாக்குவேன்; நான் அவர்களை விட்டுப்போகும்போது அவர்களுக்கு ஐயோ!
13நான் எப்பிராயீமைத் தீருவின் திசைவரை இருக்கிறதைப் பார்க்கிறபோது, அது நல்ல வசதியான இடத்திலே நாட்டப்பட்டிருக்கிறது; ஆனாலும் எப்பிராயீமர்கள் தங்கள் மகன்களைக் கொலை செய்கிறவனிடத்தில் வெளியே கொண்டுபோய்விடுவார்கள்.
14கர்த்தாவே, நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக் கொடும்; அவர்களுக்கு விழுந்துபோகிற கர்ப்பத்தையும் பால் இல்லாத முலைகளையும் கொடும்.
15அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் சமுகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லோரும் துரோகிகள்.
16எப்பிராயீமர்கள் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அழிப்பேன்.
17அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனதினால் என் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார்; அவர்கள் அந்நிய மக்களுக்குள்ளே அலைந்து திரிவார்கள்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.