| 1 | மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட, உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன். |
| 2 | ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான். |
| 3 | மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவனுடைய மனம் கர்த்தருக்கு விரோதமாக எரிச்சலடையும். |
| 4 | செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான். |
| 5 | பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை. |
| 6 | பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன். |
| 7 | தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே. |
| 8 | ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான். |
| 9 | பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான். |
| 10 | மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது. |
| 11 | மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை. |
| 12 | ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும். |
| 13 | மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர். |
| 14 | வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு. |
| 15 | சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; அசதியானவன் பட்டினியாக இருப்பான். |
| 16 | கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான். |
| 17 | ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். |
| 18 | நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே. |
| 19 | கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும். |
| 20 | உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். |
| 21 | மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும். |
| 22 | நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன். |
| 23 | கர்த்தருக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது. |
| 24 | சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான். |
| 25 | பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான். |
| 26 | தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன். |
| 27 | என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேட்காதே. |
| 28 | அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும். |
| 29 | பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும், மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது. |