வேதாகமத்தை வாசி

Click to Subscribe

யாத்திராகமம் 29

                   
புத்தகங்களைக் காட்டு
1அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்ய அவர்களைப் பரிசுத்தப்படுத்தும்படி, நீ அவர்களுக்குச் செய்யவேண்டியது: ஒரு காளையையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்.
2புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லியமாவினால் செய்து
3அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடு அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து
4ஆரோனையும் அவனுடைய மகன்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் முன்பாக வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவி
5அந்த ஆடைகளை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் அணிந்து, ஏபோத்தின் விசித்திரமான இடுப்புக்கச்சையும் அவனுக்குக் கட்டி
6அவன் தலையிலே தலைப்பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைத் தலைப்பாகையின்மேல் அணிந்து
7அபிஷேக தைலத்தை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி, அவனை அபிஷேகம் செய்யவேண்டும்.
8பின்பு அவனுடைய மகன்களை வரச்செய்து, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்து.
9ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் இடுப்புக்கச்சைகளைக் கட்டி, அவனுடைய மகன்களுக்கு தொப்பிகளையும் அணிந்து, இப்படியாக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் பிரதிஷ்டை செய்யவேண்டும்.
10காளையை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவரவேண்டும்; அப்பொழுது ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கவேண்டும்.
11பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரத்து வாசலின் அருகில் கர்த்தருடைய சந்நிதானத்தில் கொன்று
12அதனுடைய இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன்னுடைய விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் பூசி, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,
13குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின்மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் எரித்து
14காளையின் இறைச்சியையும் அதின் தோலையும் அதின் சாணியையும் முகாமிற்கு வெளியே அக்கினியால் சுட்டெரிக்கவேண்டும்; இது பாவநிவாரணபலி.
15பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்; அதனுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளை வைத்து.
16அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்து
17ஆட்டுக்கடாவைத் துண்டு துண்டாக வெட்டி, அதனுடைய குடல்களையும் அதனுடைய தொடைகளையும் கழுவி, அவைகளை அந்த வெட்டப்பட்ட இறைச்சித் துண்டுகளோடும் அதனுடைய தலையோடும் வைத்து
18ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் எரித்துவிடு; இது கர்த்தருக்குச் செலுத்தும் சர்வாங்கதகனபலி; இது சுகந்த வாசனையும் கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலியுமாக இருக்கும்.
19பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்; அதனுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளை வைக்கவேண்டும்.
20அப்பொழுது அந்தக் கடாவைக் கொன்று, அதனுடைய இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலது காதின் மடலிலும், அவனுடைய மகன்களின் வலது காதுகளின் மடலிலும், அவர்களுடைய வலது கைகளின் பெருவிரலிலும், அவர்களுடைய வலது கால்களின் பெருவிரலிலும் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து
21பலிபீடத்தின்மேல் இருக்கும் இரத்தத்திலும் அபிஷேகத் தைலத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனும் அவனுடைய ஆடைகளும் அவனுடைய மகன்களும் அவர்களுடைய ஆடைகளும் பரிசுத்தமாக்கப்படும்படி, அவன்மேலும் அவனுடைய ஆடைகள்மேலும் அவனுடைய மகன்கள்மேலும் அவர்களுடைய ஆடைகள்மேலும் தெளிக்கவேண்டும்.
22அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவாக இருப்பதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு சிறுநீரகங்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும்
23கர்த்தருடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து
24அவைகள் எல்லாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவனுடைய மகன்களின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டி
25பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனபலியோடு வைத்து, கர்த்தருடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் எரித்துப்போடு; இது கர்த்தருக்குச் செலுத்தப்படும் தகனபலி.
26ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்புப்பகுதியை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டு; அது உன்னுடைய பங்காக இருக்கும்.
27மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவனுடைய மகன்களுடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்புப்பகுதியையும் உயர்த்திப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக.
28அது ஏறெடுத்துப் படைக்கிற படைப்பானதால், இஸ்ரவேலர்கள் பலியிடுகிறவைகளில் அவைகளே நித்திய கட்டளையாக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேர்வதாக; இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய சந்நிதானத்தில் உயர்த்திப் படைக்கிற சமாதானபலிகளில் அவைகளே உயர்த்திப் படைக்கும் படைப்பாக இருக்கவேண்டும்.
29ஆரோனின் பரிசுத்த ஆடைகள், அவனுக்குப்பின்பு, அவனுடைய மகன்களுக்கு சேரும்; அவர்கள் அவைகளை அணிந்துகொண்டு, அபிஷேகம்செய்யப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.
30அவனுடைய மகன்களில்அவனுடைய பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த இடத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக்கூடாரத்தில் நுழையும்போது, அவைகளை ஏழுநாட்கள்வரை அணிந்துகொள்ளவேண்டும்.
31பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதனுடைய இறைச்சியை பரிசுத்த இடத்தில் சமைக்கவேண்டும்.
32அந்த ஆட்டுக்கடாவின் இறைச்சியையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவனுடைய மகன்களும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே சாப்பிடவேண்டும்.
33அவர்களைப் பிரதிஷ்டைச்செய்து பரிசுத்தப்படுத்தும்படி, அவைகளால் பாவநிவிர்த்தி செய்யப்பட்டபடியால், அவைகளை அவர்கள் சாப்பிடவேண்டும்; அந்நியனோ அவைகளை சாப்பிடக்கூடாது; அவைகள் பரிசுத்தமானவைகள்.
34பிரதிஷ்டையின் இறைச்சியிலும் அப்பத்திலும் ஏதாவது அதிகாலைவரை மீதியாக இருந்ததால், அதை அக்கினியால் சுட்டெரிக்கவேண்டும்; அது சாப்பிடப்படக்கூடாது, அது பரிசுத்தமானது.
35இந்தபடி நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் செய்யவேண்டும்; ஏழுநாட்கள்வரை நீ அவர்களைப் பிரதிஷ்டைசெய்து
36பாவநிவிர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பரிகாரம் செய்தபின்பு, அந்தப் பலிபீடத்தைச் சுத்திகரிக்கசெய்யவேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம்செய்யவேண்டும்.
37ஏழுநாட்கள்வரை பலிபீடத்திற்காகப் பரிகாரம்செய்து, அதைப் பரிசுத்தமாக்கவேண்டும்; பலிபீடமானது மகா பரிசுத்தமாக இருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.
38பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவென்றால்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒருவயதுடைய இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.
39ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடவேண்டும்.
40ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும், இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும், பானபலியாகக் கால்படி திராட்சை ரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடன் படைக்கவேண்டும்.
41மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலே பலியிட்டு, காலையிலே செலுத்தின ஆகாரபலிக்கும் பானபலிக்கும் ஒரேமாதிரியாக அதைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.
42உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக்கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.
43அங்கே இஸ்ரவேலர்களைச் சந்திப்பேன்; அந்த இடம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்.
44ஆசரிப்புக்கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் பரிசுத்தப்படுத்தி
45இஸ்ரவேலர்களின் நடுவே நான் தங்கி, அவர்களுக்குத் தேவனாக இருப்பேன்.
46தங்கள் நடுவே நான் தங்கும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த நான் தங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்களுடைய தேவனாகிய கர்த்தர்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.