| 1 | அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக: |
| 2 | நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும். |
| 3 | நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்? |
| 4 | கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ? |
| 5 | துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும். |
| 6 | அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்; அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும். |
| 7 | அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும். |
| 8 | அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, வலையின் சிக்கலிலே நடக்கிறான். |
| 9 | கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள். |
| 10 | அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது. |
| 11 | சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து, அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும். |
| 12 | அவன் பசியினால் பெலனற்றுப்போவான்; அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும். |
| 13 | அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்; பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும். |
| 14 | அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும். |
| 15 | அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், பயங்கரம் அவனுடைய கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவனுடைய குடியிருப்பின்மேல் தெளிக்கப்படும். |
| 16 | கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும். |
| 17 | அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும். |
| 18 | அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான். |
| 19 | அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை; அவனுடைய வீட்டில் மீதியாயிருக்க வேண்டியவன் ஒருவனும் இல்லை. |
| 20 | அவனுடைய காலத்தில் இருந்தவர்கள் அவனுடைய நாளுக்காக அதிர்ச்சியடைந்ததுபோல, பின்சந்ததியாரும் அதிர்ச்சியடைவார்கள். |
| 21 | அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய இடம் இதுவே என்பார்கள் என்றான். |