லோத்தின் மனைவி சோதோம் நகரத்தின் அழிவைச் சற்றுத் திரும்பிப் பார்த்ததற்காகத் தேவன் அவளைத் தண்டித்த செயல், பெண்களின் மீது அவருக்கு இருந்த குறைவான அபிப்பிராயத்தினால்தானா? லோத்தும் அவனது குடும்பத்தாரும் நகரத்தை விட்டுப் பாதுகாப்பான இடத்திற்குத் தப்பிச் செல்லும்போது, "பின்னிட்டுத் திரும்பிப் பார்க்கக் கூடாது" என்று தேவதூதர்கள் தெளிவாக எச்சரித்திருந்தார்கள். எனவே, இது “வெறுமனே திரும்பிப் பார்க்கும்” ஒரு செயலாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் ஓடித் தப்பிச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய ஒரு நேரடிக் கட்டளை தேவதூதர்களால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.
முழு நகரமும் அக்கினியால் எரிக்கப்படும்போது, அவர்கள் அதிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். எனவே, தேவன் அவர்கள் மீது காட்டிய மாபெரும் இரக்கத்திற்கு, தங்கள் வாழ்க்கையில் அவர்கள் காட்டவேண்டிய பிரதி உபகாரத்தின் அடையாளமாகவே 'திரும்பிப் பார்க்க வேண்டாம்' என்னும் கட்டளை கொடுக்கப்பட்டது. இதற்கு அவர்கள் முழுமையாகக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். ஆனால், தேவதூதர்களால் கொடுக்கப்பட்ட நேரடியான கட்டளைக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் போனது லோத்தின் மனைவியின் குற்றமேயாகும். வேண்டுமென்றே கட்டளைகளை மீறும் செயல்களுக்கு எந்தவொரு நீதிமன்றமும் தண்டனையே வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆகவேதான் லோத்தின் மனைவி உப்புத்தூணாக மாறினாள். இது அவள் ஒரு பெண் என்பதற்காகக் கொடுக்கப்பட்ட தண்டனையல்ல. ஒருவேளை லோத்து திரும்பிப் பார்த்திருந்தாலும், அவனது கீழ்ப்படியாமையின் விளைவாக அவனும் கட்டளையை மீறியதன் அடிப்படையில் அதே தண்டனையைச் சந்தித்திருப்பான். எனவே, லோத்தின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வு, தேவன் எந்த வகையிலும் பாலினப் பாகுபாடு காட்டாதவர் என்பதைத் தெள்ளத்தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவன், பாவத்தை எந்தப் பாலினத்தவர் செய்தாலும் பட்சபாதமின்றி (பாகுபாடின்றி) அதைத் தண்டிப்பவர் என்பதை இதன் மூலம் நாம் தெளிவாக அறிந்துகொள்கிறோம்.