புத்தகங்கள்

நாம் ஒரு விவாதத்திற்குரிய காரியத்தைப் பற்றிப் பேசப் போகிறோம். இந்தக் காரியத்தைக் குறித்துப் பல்வேறு விதமான கருத்துகள் நிலவுகின்றன. இத்தகைய கருத்து மோதல்களால் சபைகள், குடும்பங்கள் மற்றும் நட்பு வட்டாரங்களுக்குள் பல பிரிவினைகள் தோன்றியுள்ளன. ஆண், பெண் ஆடைகளைப் பற்றிய வரலாற்றுப் பின்னணியைப் பார்க்கும்போது, நமது கலாச்சாரத்தில் ஆண்கள் முழுநீளக் கால்சட்டையையும் (Pants), பெண்கள் கழுத்து முதல் பாதம் வரையிலான முழுநீள ஆடையையும் அணிவதே தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்து வந்துள்ளது எனலாம்.

இது விவாதத்திற்கு அப்பாற்பட்ட, மறுக்க முடியாத ஒரு உண்மையாகும். இவ்வுண்மையைப் பழங்காலப் பழமொழி ஒன்று தெளிவுபடுத்துகிறது. “இல்லத்தை நடத்தும் மனைவி, குடும்பத்துக்குள் முழுநீளக் கால்சட்டையை அணிந்திருக்கிறாள்” (She wears the pants in the family) என்பதே அப்பழமொழி. இப்பழமொழியில் ஒரு உண்மை பொதிந்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இருந்து வருகிற “பெண்ணிய விடுதலை இயக்கம்”, பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்களே என்பதை அடையாளப்படுத்துவதற்காக, எல்லாப் பெண்களையும் முழுநீளக் கால்சட்டைகளை அணிந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்று போராடி வருகிறது. தேவன் பெண்களுக்கு நியமித்த, ‘ஆண்களுக்குக் கீழ்ப்படிந்திருத்தல்’ என்னும் ஸ்தானத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காகவே இது செயல்படுகிறது. மேலும், ஓர் ஆண் என்ன செய்கிறானோ, அவை எல்லாவற்றையும் பெண்களையும் செய்ய வலியுறுத்துவதன் வாயிலாக, பெண்களுக்குச் சம உரிமை என்னும் வாய்ப்பை வழங்கவும் முயன்று வருகிறது.

இந்த இயக்கத்தின் ஆவி பெண்களின் சிந்தையையும் பற்றிக்கொண்டது. இதனால்தான் ஆண்களின் உடையாகிய முழுநீளக் கால்சட்டைகளைப் பெண்களும் அணிந்துகொள்வதில் மும்முரம் காட்டுகிறார்கள். இந்த உலகம் என்ன செய்கிறதோ, அதையே திருச்சபையும் பின்பற்றி வருகிறது. தேவபக்தியுள்ள முன்னோர்களும், வேதவசனத்தில் வைராக்கியம் காட்டிய திருச்சபைத் தலைவர்களும், தங்களது வாழ்க்கையில் மிகக் குறைந்த அளவே இந்த உலக முறைமைகளுக்கு இடம் கொடுத்திருந்த காரணத்தால், “பெண்கள் ஆண்களின் ஆடையாகிய முழுநீளக் கால்சட்டையை அணியக்கூடாது” என்னும் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள். ஆடை பற்றிய வரலாற்றுப் பின்னணி எதையும் அறியாத இளந்தலைமுறைக் கிறிஸ்தவர்கள், தங்களது தேவபக்தியுள்ள முன்னோர்களின் நிலைப்பாட்டை அர்த்தமற்றது என்று கருதி, அதைக் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதுமட்டுமின்றி, தாங்கள் அணிகிற முழுநீளக் கால்சட்டைகள் பெண்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டவை அன்றி, ஆண்களுக்காக உருவாக்கப்பட்டவை அல்ல என்னும் நிலைப்பாட்டையும் கொண்டிருக்கிறார்கள்.

மறுபுறம், தேவன் ஆதாமுக்கு ஒருவிதமான ஆடையையோ, ஏவாளுக்கு வேறுவிதமான ஆடையையோ உருவாக்கவில்லை; இருவருக்கும் அங்கி (Tunic) போன்ற ஒரேவிதமான ஆடையையே உருவாக்கினார் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆயினும், “புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்” (உபாகமம் 22:5) என்று வேதம் ஒரே ஆடையை ஆண்களும் பெண்களும் அணியக்கூடாது என்று உறுதியுடன் கூறுகிறது. வரலாற்று ரீதியாக நாம் பார்க்கும்போது, உலக அளவில் பொதுவாக ஆண்களே முழுநீளக் கால்சட்டைகளை அணிந்து வந்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. இன்றைக்குக் கலாச்சாரம் மாறிவிட்டது, எனவே இத்தகைய முழுநீளக் கால்சட்டைகளைப் பெண்களும் அணியலாம் என்று வலியுறுத்தப்படுகிறது.

ஆயினும், கலாச்சாரத்தை மாற்றியமைப்பதில் மாயையை விரும்பும் அந்தகார சக்திகளுக்குப் பெரும்பங்கு இருக்கிறது என்பது உண்மையாகும். இதைக் கருத்தில் கொள்ளும்போது, தீய சக்திகளால் ஏற்படுகிற இத்தகைய மாற்றம் தேவனால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆடைகளில் ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றங்கள் தேவனுக்கு அருவருப்பானவை என்றே நம்மால் கூறமுடியும். “பெண்கள் ஓர் ஆணுக்குரிய (அல்லது அதைப் போன்ற) ஆடைகளை அணியக் கூடாது... ஏனெனில் அவ்வாறு செய்கிற அனைத்தும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவை” என்று வேதவசனம் கூறுகிறது. ஆகவே, இதற்கு மேல் நான் வேறு எதுவும் கூற விரும்பவில்லை. இந்தக் கட்டுரையின் நோக்கமே சர்ச்சையை உண்டாக்க வேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக, பிரச்சினைகளைச் சுமூகமாகத் தீர்ப்பதே ஆகும். பெண்கள் முழுநீளக் கால்சட்டைகளை அணிவது தேவனுக்கு முன்பாகப் பாவம் என்று நான் கூறவரவில்லை. மாறாக, அதை அணிந்திருக்கிற ஒரு பெண்ணைப் பார்க்கிற ஓர் ஆணின் கண்களில் அது எத்தகைய மாற்றத்தை உண்டுபண்ணுகிறது, எத்தகைய இச்சையைத் தூண்டுகிறது என்பதையே நான் கேட்க விரும்புகிறேன்.

முதலாவதாக, முழுநீளக் கால்சட்டைகள் அதனை அணியும் பெண்களின் இடுப்புக்குக் கீழேயுள்ள சரீரத்தின் வடிவத்தை வெளிப்படுத்திக் காட்டும் தன்மையுடையவை. பொதுவாக, பெண்கள் அடக்கமான உடைகள் வேண்டும் என்று வாதிடுகிறார்கள். ஆனால், அத்தகைய ஆடைகளை யார் அணிகிறார்கள்? முழுநீளக் கால்சட்டைகளின் தன்மையே சரீர உருவத்தை அப்பட்டமாகக் காண்பிக்கக்கூடியதாக இருக்கிறபடியால், அதை எப்படி அடக்கமான அல்லது கண்ணியமான முறையில் உருவாக்க முடியும்? இது மிகக் கடினமான ஒன்றாகும். குறிப்பாகச் சற்றே பருமனாக இருக்கிற பெண்களுக்கு இத்தகைய ஆடைகளை உருவாக்குவது இன்னும் கடினமானது. உண்மை என்னவெனில், உடலோடு இறுக்கமாக இல்லாமல் சற்றுத் தளர்வாக இருக்கிற முழுநீளக் கால்சட்டைகளை அணிகிற பெண்களைப் பார்ப்பதே அரிதான ஒன்றாகிவிட்டது.

ஆண்கள் தளர்வாகவும் கண்ணியமான முறையிலும் முழுநீளக் கால்சட்டைகளை அணியும்போது, பெண்கள் மட்டும் இடுப்பு முதல் கணுக்கால் வரை உடலோடு இறுக்கமாக ஒட்டிக்கொள்ளும்படியான கால்சட்டைகளை அணிவது ஏன்? ஏனெனில், பெண்களுக்கான இந்தப் பாணியிலான உடைகளை உருவாக்கும்படி ஊக்குவிப்பவன் இந்த உலகத்தின் அதிபதியாகிய பிசாசு. அவனுக்குக் கீழாக இருக்கிற வணிகர்களுக்கு அவர்களுடைய இலாபமும் சம்பாத்தியமும் மட்டுமே முக்கியம். ஒரு பெண்ணின் இடுப்புக்குக் கீழாக உள்ள பகுதியை முன்னும் பின்னும் காண்பிப்பதும், தொடைமுதல் கால் வரையிலான வடிவத்தை வெளிப்படுத்துவதும் ஓர் ஆணின் இதயத்திற்கு ஒரு கண்ணியாக அமையும் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, ஒரு பெண் தனது உடலின் அங்கங்களை எல்லா நேரங்களிலும் கவனத்துடன் மறைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மறைத்துக் கொள்வதற்கு நீளமான பாவாடை அல்லது நீளமான ஒரு கவுன் (Gown) அணிவது மிகவும் சிறப்பானதாகும். இந்த வகை ஆடைகளே ஒரு பெண்ணின் உடல் அவயவங்களைச் சரியான விதத்தில் மறைப்பதற்கு ஏற்ற ஆடைகளாகும்.

சில பெண்கள், தாங்கள் அணிகிற முழுநீளக் கால்சட்டை தோலோடு ஒட்டி இறுக்கமாக இல்லாமல் சற்றுத் தளர்வாக இருந்தால், அது ஒரு கண்ணியமான ஆடை என்று நினைக்கிறார்கள். இத்தகைய கால்சட்டைகள் உங்களுடைய உடலோடு ஒட்டிக்கொண்டிராமல் போதுமான அளவு இடைவெளியுடன் இருந்தால் நல்லதுதான். ஆயினும், இத்தகைய கால்சட்டைகள் உங்கள் கால்கள் மற்றும் இடுப்புகளின் வடிவத்தைக் காட்டுகிற இயல்பைக் கொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இப்படிக் காட்டுவதுதான் இந்த ஆடையின் இயல்பே. சரீர வடிவத்தைக் காட்டாத முழுநீளக் கால்சட்டைகளை உருவாக்குவது சாத்தியமற்றது. நீங்கள் எவ்வளவு தளர்வாக முழுநீளக் கால்சட்டைகளை அணிந்திருந்தாலும், ஏதாவது ஒரு சூழ்நிலையில் குனிய நேரிட்டால், மற்ற இறுக்கமான ஆடைகளைப் போலவே இதுவும் உங்கள் பின்பகுதியின் உருவத்தைக் காட்டிவிடும். நீங்கள் மெலிதான உடல் அமைப்புடன் இருந்தால் நீங்கள் குனிந்தாலும் பிரச்சினை இல்லை; அது பின்பக்கத்தின் வடிவத்தைக் காட்டாது. ஆனால் அதேவேளையில், நீங்கள் சற்றே பருமனான ஒரு பெண்மணியாக இருந்தால், அது பார்ப்பவரின் புருவத்தை உயர்த்தச் செய்யும். ஆகவே சிறந்த வழி என்னவென்றால், முழுநீளக் கால்சட்டைகள் தளர்வாக இருந்தாலும் அவற்றை அணியாமல் தவிர்த்துவிடுவதே ஆகும்.

ஒருவேளை உங்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் (அதாவது, முழுநீளக் கால்சட்டை அணிந்திருக்கிற ஓர் ஆணின் உடலமைப்பைப் பார்க்கும் ஒரு பெண்ணுக்கு, அது எவ்விதப் பாதிப்பையும் உண்டாக்காது என்றாலும்), இத்தகைய ஆடை அணிந்திருக்கிற ஒரு பெண்ணின் உடல் வடிவமைப்பைப் பார்க்கிற ஓர் ஆணுக்கு அது ஒருவிதமான இச்சையைத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஓர் ஆணின் தொடுதல் ஒரு பெண்ணுக்கு எவ்விதமான கிளர்ச்சியை உண்டுபண்ணுமோ, அதேவிதமான தூண்டுதலை ஓர் ஆணுக்கு உண்டுபண்ணுவதற்கு ஒரு பெண்ணின் பார்வையே போதுமானது. தாவீது மற்றும் பத்சேபாளைக் குறித்த சம்பவத்தில் இது உண்மையாயிருந்தது என வேதாகமம் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது. உண்மையை மறைக்காத எந்தவொரு நேர்மையான மனிதனும் இதை ஒப்புக்கொள்வான். ஆகவே பெண்களாகிய நீங்கள், ஆண்களின் இத்தகைய மனோபாவத்தை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதை உங்களுடைய அனுபவத்திலிருந்து உங்களால் அறிந்துகொள்ள முடியாது. உங்களது இடுப்பின் பின்பக்கமும் தொடைகளும் ஓர் ஆணின் இதயத்தில் ஆபாசமான இச்சையைத் தூண்டிவிடுவதற்குப் போதுமானவை. நீங்கள் அணிகிற முழுநீளக் கால்சட்டைகள் உங்களுடைய இந்த அவயவங்களின் வடிவத்தை நன்றாகக் காட்டும் வேலையைச் செய்கின்றன.

பெண்கள் முழுநீளக் கால்சட்டை அணிவது தவறு என்று சிலர் நம்புகிறார்கள். ஆயினும் இவ்வாறு கூறுகிறவர்களே, தங்கள் வீட்டுப் பெண்களுக்கு முழங்கால் வரையிலான பாவாடைகளை அணிந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்தி, ஆண்கள் செய்யக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஊக்கமளிக்கிறார்கள். இவ்வாறு உற்சாகப்படுத்துகிறவர்களைப் பார்த்து ஒரேயொரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்: இத்தகைய ஆடைகளை அணிந்திருக்கும்போது அவர்கள் கண்ணியமாகத் தோன்றுகிறார்களா, இல்லையா? இதற்கான பதில் பல காரியங்களைச் சார்ந்திருக்கலாம். இத்தகைய ஆடைகள் தளர்வான பாவாடைகளைப் போலத் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, நீளமாக இருந்தால் அவை பாவாடையைப் போலவே கண்ணியமான உடையாக இருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய ஆடைகளில் பல, ஆண்களின் முழுநீளக் கால்சட்டைகளைப் போலவோ அல்லது அரைக்கால் சட்டைகளைப் (Shorts) போலவோதான் இருக்கின்றன. ஆனால், இத்தகைய ஆடைகள் போதுமான அளவு நீளமாகவும், தளர்வாகவும், உடலை நன்றாக மூடி மறைத்து வைத்துக்கொள்ளும் வகையிலும் அமைந்திருந்தால், இவற்றை நிச்சயமாகவே நீளமான பாவாடைகளைப் போன்றே நல்ல உடையாக ஏற்றுக்கொள்ளலாம்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.