அத்தேனே பட்டணத்தில் பவுல் எதைப் பார்த்தார்?
அதற்கான பதிலைத் தெளிவாக அப்பகுதியில் வாசிக்கிறோம். “முழுவதும் விக்கிரக ஆராதனையில் மூழ்கியிருந்த ஒரு பட்டணத்தை” அவர் பார்த்தார். ஒவ்வொரு தெருவிலும் விக்கிரகங்கள் அவருடைய கண்களுக்குத் தென்பட்டன. விக்கிரகக் கடவுள்களின் கோயில்கள் ஒவ்வொரு முக்கியப் பகுதியையும் ஆக்கிரமித்திருந்தன. பிளினியைப் (Pliny) பொறுத்தவரை, அக்ரோபோலிஸை (Acropolis - ஏதென்ஸ் நகரில் உள்ள உயர் பாறை அடுக்கின் மேல் அமைந்துள்ள ஒரு பண்டைய அரண்) நோக்கி அமைந்துள்ள, குறைந்தது 40 அடி உயர மினெர்வாவின் (Minerva) சிலை, எப்பக்கத்திலிருந்தும் பார்ப்போரின் கண்களைக் கவர்ந்தது. பவுலைப் பொறுத்தவரை மிகப்பெரிய விக்கிரக ஆராதனை அமைப்பு அப்பகுதி முழுவதும் பரவியிருந்தது. “அத்தேனியர்கள் தங்கள் முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தி விக்கிரகக் கடவுள்களை வணங்கினார்கள்” என்று வரலாற்று ஆசிரியரான பௌசானியாஸ் (Pausanias) சொல்கிறார். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், அந்தப் பட்டணம் முழுவதும் விக்கிரகங்களால் நிறைந்திருந்தது.
இந்தப் பட்டணம், அநேகமாக, பவுல் பார்த்ததிலேயே புறஜாதியாரின் பட்டணத்திற்கு ஒரு சிறந்த மாதிரியாக இருந்திருக்கலாம். அதன் அளவுடன் ஒப்பிடும்பொழுது, உலகத்திலேயே மிகவும் அதிகமான கற்றறிந்த வல்லுநர்களையும், நாகரிகமுள்ளவர்களையும், தத்துவஞானிகளையும், கலை மற்றும் அறிவியலில் சிறந்த அறிவுள்ளவர்களையும் அத்தேனே பட்டணம் தன்னகத்தே கொண்டிருந்தது. ஆனால் சமயரீதியாகப் பார்த்தால் அதன் நிலை என்ன? சாக்ரடீஸ், பிளாட்டோ போன்ற தத்துவஞானிகளின் பட்டணம் – எஸ்கிலஸ் (Aeschylus), சோபோகிளிஸ் (Sophocles), யூரிபிடிஸ் (Euripides) மற்றும் துசிடிடிஸின் (Thucydides) பட்டணம் – மனம், அறிவு மற்றும் கலையின் பட்டணம் – முழுவதும் விக்கிரக ஆராதனையில் மூழ்கியிருந்தது.
1. தெய்வீக வெளிப்பாடு மற்றும் பரலோக வழிநடத்துதல் ஆகியவை மிக முக்கியமாகத் தேவை என்பதை நாம் அறிந்துகொள்கிறோமா? மனிதனுக்கு வேதம் இல்லாவிட்டால், அவன் தன் மனிதத்தன்மைக்கு ஏற்ப மிகவும் மோசமான ஒரு கடவுளைக் கொண்ட ஒரு வகையான சமயத்தைப் பின்பற்றுவான்; ஆனால் அது வெளிச்சமில்லாத, சமாதானமில்லாத, நம்பிக்கையற்ற சமயமாகவே இருக்கும்.
“தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கிறது” (1 கொரி 1:21). பண்டைய அத்தேனே பட்டணமானது நாம் மிகவும் கவனிக்க வேண்டிய, நம்முன் நிற்கும் ஒரு பாடம். தேவ வெளிப்பாடு இல்லாத இயற்கைத் தன்மை வீணானதே; அது வீழ்ந்துபோன மனிதனை இயற்கைக் கடவுள்களை நோக்கியே நடத்தும். வேதம் இல்லாமல் அத்தேனியர்கள் கல்லையும் மண்ணையும் தங்கள் கைவேலைகளையும் வணங்கினார்கள். ஸ்தோயிக்கர் அல்லது எப்பிகூரியராகிய ஒரு புறஜாதி தத்துவஞானியை ஒரு திறந்த கல்லறையின் அருகில் நிறுத்தி, வரவிருக்கும் உலகத்தைக் குறித்து அவனிடம் கேளுங்கள்; சமாதானம் தரும், ஏற்றுக்கொள்ளக்கூடிய, தெளிவான எந்த ஒரு பதிலையும் அவனால் சொல்ல இயலாது.
2. சமயத்தின் இருளுக்கு எதிராக, மிக உயர்ந்த அறிவுப்பூர்வமான பயிற்சி எந்த வகையிலும் பாதுகாப்புத் தராது என்ற ஒரு பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோமா? புறஜாதியாரின் உலகத்தில் வேறெங்கிலும் இருந்ததைவிட, அத்தேனே பட்டணத்தில் மிகவும் சிந்திக்கத்தக்க, கற்றறிந்த ஞானிகள் இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. கிரேக்கத் தத்துவ மாணவர்கள் ஒன்றுமறியா அறிவிலிகள் அல்ல. அவர்கள் தர்க்க நெறிமுறைகள், சொற்பொழிவு, வரலாறு மற்றும் கலைத் துறைகளில் சிறந்து விளங்கினார்கள். ஆனால் இந்த எல்லா மனக்கட்டுப்பாடும், அவர்களின் பட்டணம் “விக்கிரக ஆராதனையில் முழுவதுமாக மூழ்கியிருப்பதிலிருந்து” தடுக்க முடியவில்லை.
இந்த 21-ம் நூற்றாண்டில், வாசித்தல், எழுதுதல், கணிதம், வரலாறு, மொழியியல், இயற்பியல், உயிரியல் ஆகியவை வேதத்தின் அறிவு இல்லாமல் கல்வியைக் கொடுக்கப் போதுமானவை என்று நமக்குச் சொல்லப்படுகிறதா? தேவன் அதை மறுக்கிறார்! அப்படியென்றால் நாம் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவில்லை. அறிவாற்றலை விக்கிரகமாக்குவது ஒருசில மனிதர்களைத் திருப்திப்படுத்தலாம்; கிரேக்க சிந்தனைகளுக்கு முழு உலகமும் மிகவும் கடன்பட்டுள்ளது என்றும் சொல்லலாம். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகிறது: எபிரெய நாட்டுக்குப் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தின அந்த அறிவு இல்லாமல், பண்டைய கிரேக்கம் இருளான விக்கிரக உலகத்தில் புதையுண்டிருக்கும். சாக்ரடீஸ் அல்லது பிளாட்டோவின் சீடர் பல காரியங்களில் அறிவுப்பூர்வமாகச் சொற்திறமை பெற்றிருக்கலாம்; ஆனால், “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” (அப் 16:30) என்ற சிறைச்சாலைக்காரனின் கேள்விக்கு அவனால் பதில் சொல்லியிருக்கவே முடியாது. “மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே?” என்று அவனால் தன்னுடைய இறுதி நேரத்தில் சொல்லவே முடியாது.
3. கலைப்புலமை, படுமோசமான மூடநம்பிக்கைக்கு எதிராக எந்தப் பாதுகாப்பையும் தருவதில்லை என்பதை நாம் கற்றுக்கொள்கிறோமா? அத்தேனியர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்ப நுண்ணறிவு மிகப்பெரிய, மறுக்க இயலாத உண்மை. அத்தேனே பட்டணத்தில் பவுலின் கண்கள் பல அழகிய சிற்பங்களைக் கண்டன; அவை இன்றும் கலையை விரும்பும் மனதுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி தரக்கூடியவை. ஆனாலும் அத்தேனே பட்டணத்தின் உன்னத கட்டிடங்களை வடிவமைத்துக் கட்டின மனிதர்கள் ஒரே உண்மையான கடவுளைப்பற்றி அறிவற்றவர்களாயிருந்தார்கள். நம்முடைய கலை மற்றும் அறிவியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினால் இன்றைய உலகம் தற்பெருமையில் நிறைந்திருக்கிறது. மனிதன் இயந்திரங்களைப்பற்றியும் புது கண்டுபிடிப்புகளைப்பற்றியும், ஏதோ மனிதனால் முடியாதது ஒன்றுமில்லை என்பதுபோல் எழுதுகிறான், பேசுகிறான். ஆனால், மிக உயர்ந்த கலை அறிவு மற்றும் இயந்திரவியல் அறிவு ஆவிக்குரிய மரணத்துடன் இணைந்துள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம். பிடியாஸின் (Phidias - சிற்பி) பட்டணமாகிய அத்தேனே “முழுவதும் விக்கிரகத்தால் நிறைந்திருந்தது”. ஒரு அத்தேனிய சிற்பி ஒரு கவர்ச்சியான கல்லறையைக் கட்டலாம்; ஆனால் பாவத்தால் துக்கப்படுபவனின் கண்ணீரின் ஒரு துளியைக்கூட அவனால் துடைக்க இயலாது.
இந்தச் செய்தியை மறந்துவிடக்கூடாது. இது கவனமாகச் சிந்திக்கப்பட வேண்டும். நாம் வாழும் இந்தக் காலத்துக்கும் இவை பொருத்தமானவை. நாம் சந்தேகம் நிறைந்த அவிசுவாசமான நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் திரும்பும் ஒவ்வொரு பக்கத்திலும் சத்தியத்தையும், தெய்வீக வெளிப்பாட்டின் மதிப்பையும் குறித்த சந்தேகத்தையும் கேள்வியையுமே எதிர்கொள்கிறோம். “இந்தக் காரணம் மட்டுமே போதாதா?”, “இரட்சிப்புக்கேதுவான அறிவை மனிதன் பெற வேதம் உண்மையாகவே தேவையா?”, “சத்தியத்திற்கும் தேவன