புத்தகங்கள்

கேள்வி: 'எதற்காக, எப்படி ஜெபிப்பது என்று நமக்குத் தெரியாது என்பது தேவனுக்குத் தெரியும். அப்படியிருக்கும்பொழுது தேவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?'

விடை: 'நமக்கு ஜெபிக்கத் தெரியாது' என்று சொல்லுகிறோம். உண்மைதான், ஆனால் நம் கீழான (பாவ) நிலையை நம்மால் உணர முடிகிறதா? நியாயப்பிரமாணத்தின் தண்டனைக்குள்ளாக வாழ்கிறோம் என்று தேவன் நமக்குக் காட்டியிருக்கிறாரா? அப்படியிருக்குமானால் நீ கவலைப்பட வேண்டியதில்லை. உன் இருதயத்தில் தேவன் கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்று நினைக்க இடமுண்டு. ஜெபம் உன் வாழ்வில் கண்டிப்பாகப் பலமாக வெளிப்படும். உன் பெருமூச்சுகள் உன் வீட்டின் பல பாகங்களிலிருந்து பரலோகத்திற்குச் சென்றிருக்கிறது (ரோமர் 8:26). உன் இருதயம் உன் கண்ணீரை நன்கு அறியும். உன் இருதயம் இன்னொரு உலகத்தின் காரியங்களை வாஞ்சித்து, இவ்வுலகக் காரியங்களை மறக்கும்படி செய்திருக்கிறதா? வசனத்தை வாசித்துப் பார்: "குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய்சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை" (ஆபகூக் 2:3).

கேள்வி: நான் ஒரு தனி இடத்தை நாடிச் சென்று, என் இருதயத்தை தேவனுக்கு முன்பாக ஊற்ற வேண்டும் என்று விரும்பினாலும், என்னால் ஒரு வார்த்தைகூட சொல்ல முடிவதில்லை. ஏன்?

விடை: தேவன், ஜெபத்தில் நீ சொல்லும் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், உன் இருதயத்தின் நொறுங்குண்ட தன்மையை உற்றுக் கவனிக்கிறார். அது மட்டுமே அவருடைய இரக்கத்தை நமக்குக் கொண்டுவரும். 'தேவனே, நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்' (சங்கீதம் 51:17).

சில சமயங்களில், நமது பேசமுடியாத நிலை மிகுந்த துன்பத்தால் ஏற்படக்கூடும். 'நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன்' (சங். 77:4). இதனால் துன்பப்படுகிற ஆத்துமாக்களுக்கு ஆறுதல் ஏற்படக்கூடும். நம்முடைய வாயின் வார்த்தைகள் வராவிட்டாலும், ஆவியானவர் நம் உள்ளங்களில் பெருமூச்சுகளோடு விண்ணப்பம் செய்ய உதவுகிறார்.

தேவனுக்கு முன்பாக நாம் நின்று பேச வேண்டுமானால், முதலாவது நமது கீழான பாவ நிலையை உணர வேண்டும். இரண்டாவது, தேவனது வாக்குத்தத்தங்களை நினைவுகூர வேண்டும். மூன்றாவது, கிறிஸ்துவின் இருதயத்தை நோக்கிப் பார்க்க வேண்டும். அவர் நம்முடைய பாவநிலையை உணர்ந்து சுத்திகரிப்பார் என்று நம்ப வேண்டும். நம்மைப் போன்ற பாவிகளுக்குக் கிறிஸ்து உதவியிருக்கிறார் என்று அறிய வேண்டும். அவர் இரக்கத்தின் ஐசுவரியத்தை நம் இருதயத்தில் நினைவுகூர வேண்டும். வார்த்தைகளால் மட்டும் தேவனிடம் ஜெபிக்கக் கூடாது; அவ்வார்த்தைகளோடு நம் முழு இருதயமும் சேர்ந்திருக்க வேண்டும். அப்படியிருக்குமானால், நிச்சயம் ஜெபிக்கும்பொழுது தேவனைக் கண்டுகொள்வோம் (எரேமியா 29:13).

தடை: ஆவியானவரின் உதவி இல்லாமல் வேறு எந்த வகையிலும் நாம் ஜெபிக்க முடியாது என்று சொல்லும்பொழுது, எப்படி ஜெபிக்க வேண்டும் என்று ஏதாவது ஆலோசனை கூற முடியுமா?

விடை: நாம் ஒருவரையொருவர் ஜெபிக்க உற்சாகப்படுத்த வேண்டும். ஆனால், இப்படித்தான் ஜெபிக்க வேண்டும் என்று வலியுறுத்த அவசியமில்லை. பொதுவாகக் கிறிஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டும் என்று சொல்லலாமேயொழிய, ஒரு குறிப்பிட்ட ஜெபங்களை மட்டும் ஜெபிக்க வேண்டும் என்று சொல்லுவது தவறு. பவுல் அப்போஸ்தலன், பொதுவாக கிறிஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லுகிறார் (எபேசியர் 6:18, ரோமர் 15:30-32).

தடை: ஆனால், சில எழுதப்பட்ட ஜெபங்களை நாம் உபயோகிக்காவிட்டால், நம் பிள்ளைகளுக்கு எப்படி ஜெபிக்கக் கற்றுக்கொடுப்பது?

விடை: நாம் சிலவேளைகளில் நமது பிள்ளைகளுக்கு ஜெபிப்பதற்குத் தவறான முறைகளைக் கற்றுக்கொடுக்கிறோம். ஆனால், பிள்ளைகளுக்குத் தங்களுடைய பாவ நிலையை உணரும்படி செய்ய வேண்டும். ஆதி பாவத்தினாலும், செயல் பாவத்தினாலும் அவர்கள் தேவ கோபாக்கினையின் கீழ் இருக்கிறார்கள் என்று எடுத்துக்காட்ட வேண்டும். இதன்மூலம் நம் பிள்ளைகள் விரைவில் தாங்களே ஜெபிக்கக் கற்றுக்கொள்வார்கள். இதற்குப் பதிலாக, அவர்கள் பாவ நிலையை அவர்களுக்கு எடுத்துக்காட்டாமல், சில எழுதப்பட்ட ஜெபங்களை மட்டும் கற்றுக்கொடுத்தால், அவர்களை நாமே சபிக்கப்பட்ட மாய்மாலக்காரர்களாகப் பெருமையோடு சுற்றித்திரியத் தூண்டுவதுபோலக் காணப்படும். எனவே பிள்ளைகளுக்கு அவர்களுடைய அவலநிலையை எடுத்துக்காட்ட வேண்டும். பாவத்தினால் ஆக்கினைக்குள்ளாகி நரகத்திற்குப் போக வேண்டும் என்பதையும், அதேசமயம் எப்படி மன்னிப்புப் பெற்று வெற்றியோடு வாழ முடியும் என்பதையும் அவர்களிடம் சொல்ல வேண்டும். அப்படிச் செய்யும்பொழுது அவர்கள் கண்களில் கண்ணீர் வரும்; இருதயத்தில் பெருமூச்சும் ஏற்படும். மேலும் யாரிடம், யார்மூலம் ஜெபிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், அவருடைய கிருபையையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

தேவனே அவர்கள் கண்களைத் திறக்க வேண்டும். எனவேதான் தாவீது, 'பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்' என்று சொல்லுகிறார் (சங்கீதம் 34:11). 'உங்களுக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுப்பேன்' என்று சொல்லாமல், 'கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்' என்று சொல்வதை நாம் கவனிக்க வேண்டும். அதாவது, கர்த்தருக்குப் பயப்படுவதன் மூலம், நாம் நம்முடைய பாவநிலையை உணர்ந்து சுவிசேஷத்தில் நம்பிக்கை வைக்க முடியும். அந்த நம்பிக்கையின் மூலம், ஆவியானவர் நமக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கிறார். இவ்வகைப் போதனையினால் அவர்கள் தேவனிடம் ஜெபிக்கும்படி பழகிக்கொள்வார்கள். அப். பவுல் மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பும்வரை, தேவன் அவரை ஒரு ஜெபிக்கின்ற மனிதனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று பார்க்கிறோம். அதேபோல்தான் நாமும்கூட (அப்போஸ்தலர் 9:11).

தடை: ஆனால், சீஷர்கள் தங்களுக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கக் கேட்டபொழுது, கிறிஸ்து கர்த்தருடைய ஜெபத்தைச் சொல்லிக் கொடுத்தாரல்லவா?

விடை: அவர்கள் மட்டுமல்ல, நாமுங்கூட கிறிஸ்துவால் போதிக்கப்பட விரும்புவோம். தற்சமயம் அவர் சரீரத்தில் இல்லாததால், தமது வார்த்தையாலும் ஆவியானவர் மூலமாயும் கற்றுக்கொடுக்கிறார். நமக்கு போதிக்க ஆவியானவரை அனுப்ப வேண்டும் என்று சொன்னதற்கு இணங்க, அவரை நம்மிடையே அனுப்பி இன்றும் போதிக்கிறார் (யோவான் 14:16; 16:7).

மேலும், பரமண்டல ஜெபம் மத்தேயு 6-ல் இருப்பதைவிட லூக்கா 11-ல் வித்தியாசப்படுவதைப் பார்க்கலாம். மேலும், நாமெல்லாரும் ஒரே வகை ஜெபத்தைத்தான் செய்ய வேண்டும் என்று சீஷர்கள் சொல்லவில்லை; அவர்களும் அப்படிச் செய்யவில்லை. மேலும் நிருபங்களிலும், நாம் விசுவாசத்துடனேயே ஜெபிக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

மேலும், கிறிஸ்து பரமண்டல ஜெபத்தின் மூலம், நாம் ஜெபத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும், பரலோகத்திலிருக்கிற தேவனிடம், விசுவாசத்தோடு, அவருடைய சித்தத்திற்கு உகந்த காரியங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 'அந்த ஜெபத்தையே ஏறெடுங்கள்' அல்லது 'அந்த மாதிரியில் ஜெபியுங்கள்' என்று கூறியுள்ளார் என அறியலாம்.

தடை: கிறிஸ்து, தமது சீஷர்களைப் பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்கச் சொல்லுகிறார். அதாவது பரிசுத்த ஆவியைப் பெறாமலே ஒருவர் ஜெபிக்க முடியும் என்று அர்த்தப்படும். அது சரியா? (லூக்கா 11:9-13 பார்க்கவும்)

விடை: பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்கிறவர்களுக்கு தேவன் அதைக் கொடுப்பார் என்று கிறிஸ்து சொன்னார். அதாவது, அதிக அளவு பரிசுத்த ஆவியைக் கொடுப்பார் என்று அர்த்தப்படும். அவர்கள் ஏற்கனவே ஓரளவு பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தார்கள். கிறிஸ்தவர்களாகிய நாமும்கூட அதிக அளவு பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஓரளவு பரிசுத்த ஆவியை நாமும் பெற்றிருக்கிறோம்.

கேள்வி: கிறிஸ்துவின் சீடர்கள் என்று தங்களை அறிந்தவர்கள் மட்டும்தான் ஜெபிக்க முடியுமா?

விடை: இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்ற யாராயிருந்தாலும் சரி, அவர்கள் ஜெபிக்கலாம். ஆனால் ஜெபிக்க ஆரம்பித்தவுடன், தன்னைத் தேவனுடைய பிள்ளை என்று நினைத்துவிட முடியாது. தேவனுடைய இரக்கம் உனக்குக் காட்டப்பட்டால், இயற்கையாகவே ஜெபிக்க ஆரம்பிக்கலாம். ஒருவன் கிறிஸ்தவன் என்பதற்கு முதல் அடையாளம் அவன் ஜெபிக்கிறவனாயிருப்பான் (அப்போஸ்தலர் 9:11). அவன் தேவனை கிறிஸ்துவின் வழியாய் அறிய முற்படுகின்றான்.

  • அ. கிறிஸ்துவை அவரது பரிசுத்தம், அன்பு, ஞானம், வல்லமை இவற்றிற்காகத் தேடுகின்றான். சரியான ஜெபம், கிறிஸ்துவின் மூலமாகத்தான் தேவனிடம் செல்ல வேண்டும். எனவே, ஜெபம் கிறிஸ்துவையே மையமாகக் கொண்டிருக்க வேண்டும். 'பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? பூலோகத்தில் உம்மைத்தவிர வேறே விருப்பமில்லை' (சங்கீதம் 73:25).

  • ஆ. நம் ஆத்துமா கடவுளோடு தொடர்ந்து தொடர்பில் ஈடுபட வேண்டும். 'நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்' (சங்கீதம் 17:15). 'நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்' (2 கொரிந்தியர் 5:2).

  • இ. சரியான ஜெபம், ஜெபிக்கப்படுகின்ற காரியத்துக்காகக் காத்திருக்க நம்மைத் தூண்டுகிறது. 'எப்பொழுது விடியுமென்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப் பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது' (சங்கீதம் 130:6). 'நான் எழுந்து, என் ஆத்தும நேசரைத் தேடினேன்' (உன்னதப்பாட்டு 3:2).

இங்கே நம்மை ஜெபத்திற்குத் தூண்டுகிற இரு காரியங்களைப் பார்க்கிறோம். ஒன்று, இவ்வுலகக் காரியங்களிலும் பாவத்தின்மேலும் வெறுப்பு; மற்றொன்று, பரிசுத்த நிலையில் தேவனோடு தொடர்புகொள்ள ஓர் அடக்கமுடியாத ஆவல். இவற்றோடு, மக்கள் பொதுவாக ஏறெடுக்கின்ற ஜெபங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், அவை கேலி ஜெபங்களாகவும், வெறுக்கப்படத்தக்க ஆவியின் பெருமூச்சாகவும் காணப்படுகின்றன. அநேகர் ஏறெடுக்கின்ற ஜெபங்கள் ஜெபங்களே அல்ல; அவை கடவுளையும் உலகத்தையும் ஏமாற்றுவதுபோல் அமைகின்றன. அவர்கள் வாழ்க்கையையும் அவர்கள் ஜெபத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் ஜெபிக்கிற காரியங்களுக்காக வாழ்க்கையில் அவர்கள் வாஞ்சிப்பதில்லை. அவர்களது மாய்மாலம் இதில் விளங்குகிறது.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.