வேதாகமத்தை வாசி

Click to Subscribe

ஏசாயா 25

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவரே, நீரே என் கடவுள்: நான் உம்மை மேன்மைப்படுத்துவேன்: உன் பெயரைப் போற்றுவேன்: நீர் வியத்தகு செயல் புரிந்துள்ளீர்: நெடுநாளாய் நீர் தீட்டியுள்ள திட்டத்தைத் திண்ணமாகவும் உறுதியாகவும் நிறைவேற்றியுள்ளீர்.
2ஏனெனில், நீ நகரத்தைக் கற்குவியலாக்கினீர்: அரண்சூழ்ந்த பட்டணத்தைப் பாழடையச் செய்தீர்: அயல் நாட்டினரின் கோட்டை அது: இனி நகராய் இராது: என்றுமே கட்டி எழுப்பப்படாது.
3ஆதலால் வலிமைமிகு மக்களினம் உம்மைப் பெருமைப்படுத்தும்: முரடரான வேற்றின நகரத்தினர் உமக்கு அஞ்சுவர்.
4ஏழைகளுக்கு நீர் அரணாய் இருக்கின்றீர்: வறியவனுக்கு அவன் துன்பத்தில் உறைவிடம் நீரே: புயற்காற்றில் புகலிடமாகவும், கடும் வெப்பத்தில் குளிர் நிழலாகவும் திகழ்கின்றீர்: ஏனெனில் முரடர்களின் சீற்றம் மதிற்சுவரை மோதித் தாக்கும் பெரும் புயல் போலும்,
5வறண்ட நிலத்தில் வெப்பம் போலும் இருக்கும். கார்மேக நிழல் வெயிலைத் தணிப்பது போல் அயல் நாட்டவரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடங்கச் செய்கின்றீர்: முரடர்களின் ஆரவாரம் அடங்கிவிட்டது.
6படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்: அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும்.
7மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்: பிற இனத்தார் அனைவரின் துன்பத் திகிலைத் தூக்கி எறிவார்.
8என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்: என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்: தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்: ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.
9அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: இவரே நம் கடவுள்: இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்: இவர் நம்மை விடுவிப்பார்: இவரே ஆண்டவர்: இவருக்காகவே நாம் காத்திருந்தோம்: இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.”
10ஆண்டவரின் ஆற்றல் இம் மலையில் தங்கியிருக்கும்: எருக்குழி நீரில் வைக்கோல் மிதிக்கப்படுவதுபோல், மோவாபு அவரால் மிதிக்கப்படுவான்.
11நீந்துபவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல், மோவாபு தன் கைகளை விரிப்பான்: ஆனால் ஆண்டவர் அவன் செருக்கையும் கைவினைச் செயல்களையும் விழச் செய்வார்.
12வானாளவ உயர்ந்துநிற்கும் உன் அரண்களை அவர் விழத் தள்ளி, தரைமட்டமாக்குவார்: அவை புழுதியோடு புழுதியாகி மண்ணோடு மண்ணாகும்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.