| 1 | பின்பு கைத்தடி போன்ற ஒரு அளவுகோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னைப் பார்த்து: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்து பார். |
| 2 | ஆலயத்திற்கு வெளியே இருக்கிற முற்றம் யூதரல்லாதவர்களுக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளக்கவேண்டாம்; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதங்கள்வரைக்கும் மிதிப்பார்கள். |
| 3 | என்னுடைய இரண்டு சாட்சிகளும் துக்கத்திற்கான சாக்கு ஆடை அணிந்துகொண்டவர்களாக, ஆயிரத்து இருநூற்றுஅறுபது நாட்கள்வரை தீர்க்கதரிசனம் சொல்லுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். |
| 4 | பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே. |
| 5 | ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த நினைத்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய எதிராளிகளை அழிக்கும்; யாராவது அவர்களைச் சேதப்படுத்த நினைத்தால், அவனும் அப்படியே கொல்லப்படவேண்டும். |
| 6 | அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற நாட்களிலே மழைபெய்யாதபடி வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டியபோதெல்லாம் பூமியை எல்லாவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. |
| 7 | அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். |
| 8 | அவர்களுடைய உடல்கள், நம்முடைய கர்த்தர் சிலுவையிலே அறையப்பட்ட மகா நகரத்தின் வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் அடையாளமாகச் சொல்லப்படும். |
| 9 | மக்களிலும், கோத்திரங்களிலும், பல மொழிக்காரர்களும், பல தேசங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாட்கள்வரை பார்ப்பார்கள், ஆனால், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்க அனுமதிக்கமாட்டார்கள். |
| 10 | அந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் மக்களை வேதனைப்படுத்தினதினால் அவர்களுக்காக பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள். |
| 11 | மூன்றரை நாட்களுக்குப்பின்பு தேவனிடத்தில் இருந்து ஜீவ சுவாசம் அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் கால் ஊன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு அதிக பயம் உண்டானது. |
| 12 | இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து அவர்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய எதிராளிகள் அவர்களைப் பார்த்தார்கள். |
| 13 | அந்த நேரத்திலே பூமி அதிகமாக அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்தில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது; மனிதர்களில் ஏழாயிரம்பேர் பூமி அதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதிஇருந்தவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். |
| 14 | இரண்டாம் ஆபத்து கடந்துபோனது; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாக வருகிறது. |
| 15 | ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது. |
| 16 | அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்களுடைய சிங்காசனங்கள்மேல் அமர்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து: |
| 17 | இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக் கொண்டு ராஜ்யங்களை ஆளுகிறீர். |
| 18 | தேசத்தின் மக்கள் கோபித்துக்கொண்டார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் வந்தது; மரித்தவர்கள் நியாயத்தீர்ப்பு அடைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரர்களுக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாக இருந்த சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பலன் கொடுப்பதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் நேரம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள். |
| 19 | அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமி அதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டானது. |