1 | சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம். |
2 | புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான். |
3 | வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர். |
4 | தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான். |
5 | ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்; ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். |
6 | பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே. |
7 | மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது. |
8 | லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்; அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும். |
9 | குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான். |
10 | மூடனை நூறடி அடிப்பதைவிட, புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும். |
11 | தீயவன் கலகத்தையே தேடுகிறான்; கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான். |
12 | தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட, குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல். |
13 | நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது. |
14 | சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு. |
15 | துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். |
16 | ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே. |
17 | நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். |
18 | புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான். |
19 | விவாதப்பிரியன் பாவப்பிரியன்; தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான். |
20 | மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான். |
21 | மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. |
22 | மனமகிழ்ச்சி நல்ல மருந்து; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும். |
23 | துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான். |
24 | ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும். |
25 | மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். |
26 | நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல. |
27 | அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். |
28 | பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான். |