1 | கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். |
2 | அகந்தை வந்தால் அவமானமும் வரும்; தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. |
3 | செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். |
4 | கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். |
5 | உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான். |
6 | செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள். |
7 | துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும். |
8 | நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். |
9 | மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான். |
10 | நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்; துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும். |
11 | செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்; துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும். |
12 | மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன்னுடைய வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். |
13 | புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான். |
14 | ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும். |
15 | அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான். |
16 | நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்; பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள். |
17 | தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான். |
18 | துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். |
19 | நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல, தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான். |
20 | மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்; உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள். |
21 | கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். |
22 | மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண், பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம். |
23 | நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும். |
24 | வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும் வறுமையடைபவர்களும் உண்டு. |
25 | உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். |
26 | தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். |
27 | நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். |
28 | தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள். |
29 | தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான். |
30 | நீதிமானுடைய பலன் ஜீவமரம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன். |
31 | இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம். |