| 1 | ஆசாபின் பாடல் சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலர்களுக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார். |
| 2 | ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும், என்னுடைய அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பியது. |
| 3 | துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது, வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன். |
| 4 | மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை; அவர்களுடைய பெலன் உறுதியாக இருக்கிறது. |
| 5 | மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்; மனிதர்கள் அடையும் உபத்திரவத்தை அடையமாட்டார்கள். |
| 6 | ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும். |
| 7 | அவர்களுடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாகப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாக நடக்கிறது. |
| 8 | அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்; பெருமையாகப் பேசுகிறார்கள். |
| 9 | தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்; அவர்களுடைய நாவு பூமியெங்கும் உலாவுகிறது. |
| 10 | ஆகையால் அவருடைய மக்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாகச் சுரந்துவரும். |
| 11 | தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள். |
| 12 | இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்; இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து, சொத்தைப் பெருகச்செய்கிறார்கள். |
| 13 | நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து, குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன். |
| 14 | நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன். |
| 15 | இந்த விதமாகப் பேசுவேன் என்று நான் சொன்னால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன். |
| 16 | இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து |
| 17 | அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை, அது என்னுடைய பார்வைக்கு கடினமாக இருந்தது. |
| 18 | நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழச்செய்கிறீர். |
| 19 | அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள். |
| 20 | தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை கலைத்துவிடுவீர். |
| 21 | இப்படியாக என்னுடைய மனம் கசந்தது, என்னுடைய உள்மனதிலே குத்தப்பட்டேன். |
| 22 | நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன். |
| 23 | ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என்னுடைய வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். |
| 24 | உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். |
| 25 | பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. |
| 26 | என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது; தேவன் என்றென்றைக்கும் என்னுடைய இருதயத்தின் கன்மலையும் என்னுடைய பங்குமாக இருக்கிறார். |
| 27 | இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டு உண்மையில்லாமல் போகிற அனைவரையும் அழிப்பீர். |
| 28 | எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது செயல்களையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என்னுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறேன். |