புத்தகங்கள்

தன்னுடைய பிள்ளைகளின் மீது, அவருடைய கிருபையின் ஐசுவரியத்தைப் பொழிந்தருள வேண்டும் என்கிற மிக இன்பமான தேவனின் சித்தத்தை தெய்வீக வாக்குத்தத்தங்கள் வெளிப்படுத்துகின்றன. அவைகள் அவருடைய இருதயத்தின் வெளிப்படையான சாட்சிகள்; அவர் முழு நித்தியத்திற்கும் அவர்கள் மீது அன்புகூருகிறார் என்பதையும், அவர்களுக்காகவும் அவர்களைக் குறித்தும் அவர் எல்லாக் காரியங்களையும் முன்குறித்திருக்கிறார் என்பதையும் அவைகள் காட்டுகின்றன. மனிதனிலும், தன்னுடைய குமாரனின் செய்து முடிக்கப்பட்ட பணியிலும், இக்காலத்திற்கும் நித்தியத்திற்கும் அவர்களுடைய முழுமையான இரட்சிப்பிற்குத் தேவையான எல்லாவற்றையும் தேவன் செய்து முடித்துவிட்டார். வாக்குத்தத்தங்களைக் குறித்த உண்மையான, தெளிவான மற்றும் ஆவிக்குரிய அறிவை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில், வானளாவிய மகிமையான கிருபையில் எண்ணிலடங்கா நட்சத்திரங்களைப் போல, வேதவாக்கியங்களில் சிதறிக்கிடக்கும் மகா உன்னதமான விலைமதிப்பில்லா வாக்குத்தத்தங்களை அவர்களுக்கு முன்பாக வைப்பது தேவனுக்குப் பிரியமாயிருந்தது. அவைகளினாலே கிறிஸ்துவுக்குள் அவர்களைக் குறித்த தேவனுடைய சித்தம் அவர்களுக்கு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அவருக்குள்ளாகப் பரிசுத்த ஸ்தலத்தை எடுத்துக்கொள்ளும்படியாகவும், அவர்களுடைய நிலையோ சூழ்நிலையோ எதுவாக இருந்தாலும், இதன் மூலமாக எல்லா நேரங்களிலும் அவருடைய கிருபையிலும் இரக்கத்திலும் அவரில் உண்மையான ஐக்கியம் கொள்ளும்படியாகவும் அவைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

நல்லதைக் கொடுக்கும்படிக்கோ அல்லது கெட்டதை நீக்கும்படிக்கோ தெய்வீக வாக்குத்தத்தங்கள் பலதரப்பட்டவையாக இருக்கின்றன. ஆசீர்வதிக்கப்பட்ட அவைகள் இருக்கும் வண்ணமாகவே, அவருடைய பிள்ளைகளுக்கு தேவனின் அன்பை வெளிப்படுத்தி அறிவிக்கின்றன. தேவனுடைய அன்புடன் தொடர்புடைய மூன்று படிகள் உள்ளன: முதலாவதாக, அதைச் செயல்படுத்த அவருக்கு ஒரு உள்ளான நோக்கம் உண்டு; இறுதியாக அந்த நோக்கத்தை உண்மையாகவே செயல்படுத்துதல்; ஆனால் அதற்கிடையில் அதன் பயனாளிகளுக்கு அந்த நோக்கத்தைக் கிருபையாக வெளிப்படுத்துவது. அன்பு மறைக்கப்பட்டிருக்கும்பொழுது நாம் அதினால் ஆறுதல் அடைய முடியாது. இப்பொழுது ‘அன்பாகவே’ இருக்கும் தேவன் தன்னுடையவர்கள் மீது அன்புகூருவது மட்டுமல்ல, சரியான நேரத்தில் தன்னுடைய அன்பை அவர்களுக்கு முழுமையாக விளங்கப்பண்ணுவது மட்டுமல்ல, அதற்கிடையில் நாம் அவருடைய இரக்கமுள்ள சித்தங்களை அறிந்துகொண்டவர்களாகவும், அவருடைய அன்பிலே நாம் இனிமையாகத் தங்கியிருக்கும்படியாகவும், அவருடைய உண்மையான வாக்குத்தத்தங்களில் நாம் நம்மை முழுமையாக ஆறுதல்படுத்திக்கொள்ளவும் செய்வார். ‘தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்!’ (சங் 139:17) என்று நம்மால் அங்கே சொல்ல முடியும்.

2 பேதுரு 1:4-ல் தெய்வீக வாக்குத்தத்தங்கள் ‘மகா மேன்மையும் அருமையுமானவைகள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்பர்ஜன் அவர்கள் சுட்டிக்காட்டியது போல, ‘உன்னதமான தன்மையும், விலைமதிப்பற்ற தன்மையும் ஒருபோதும் இணைந்து செல்வதில்லை, ஆனால் இத்தருணத்தில் இவை மிக அதிக அளவில் இணைந்திருக்கின்றன’. யெகோவா தன்னுடைய இருதயத்தை வெளிப்படுத்தத் தன்னுடைய வாயைத் திறக்கப் பிரியப்படும்பொழுது, அதை அவர் தனக்கே உரிய தகுதியுடனும், உயர்ந்த வல்லமையுடனும் செழுமையுடனும் செய்கிறார். பிரியமான லண்டன் போதகரை மீண்டும் குறிப்பிட வேண்டுமானால்: ‘அவைகள் உன்னதமான தேவனிடத்திலிருந்து வருகின்றன, அவைகள் மகா பெரிய பாவிகளுக்கு வந்திருக்கின்றன, அவைகள் நல்ல முடிவுகளுக்காகச் செயல்படுகின்றன மற்றும் பெரிய காரியங்களுடன் செயல்படுகின்றன’. அவைகளின் உன்னதத் தன்மையை இயற்கையான அறிவு புரிந்துகொள்ள முடியுமென்றாலும், ஒரு புதுப்பிக்கப்பட்ட இருதயம் மட்டுமே அவைகளின் மகா பெரிய விலைமதிப்பற்ற தன்மையை ருசித்து, தாவீதுடன் சேர்ந்து, ‘உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள், என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்’ (சங் 119:103) என்று சொல்ல முடியும்.

1. வாக்குத்தத்தங்கள் யாருக்குச் சொந்தமானவைகள் என்பதை உணர்ந்துகொள்ளும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். அவைகள் கிறிஸ்துவுக்குள் உள்ளவர்களுக்கு மட்டுமே உரியவை. ‘தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே’ (2 கொரி 1:20). மூவரான பரிசுத்த தேவனுக்கும், பாவம் நிறைந்த சிருஷ்டிக்கும் இடையில், அவர்கள் சார்பில் தேவனை முழுவதுமாகத் திருப்திப்படுத்திய அந்த மத்தியஸ்தரைத் தவிர வேறு எவரும் இணைப்பாயிருக்க முடியாது. ஆகையினாலே அந்த மத்தியஸ்தர் எல்லா நல்லவற்றையும் தன்னுடைய மக்களுக்காகத் தேவனிடமிருந்தும் பெற்றுக்கொள்கிறார்; அதை அவர்கள் அவர் மூலமாகவே பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பாவி கிறிஸ்துவை அவமதித்து அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கும்பொழுது, அதாவது கிறிஸ்துவைப் புறக்கணித்துவிட்டு, தேவனை அவருடைய இரக்கங்களுக்காக நோக்கிக் கூப்பிடும்பொழுது அது ஒரு மரத்திடம் விண்ணப்பம் பண்ணுவது போலவே இருக்கும், எந்தப் பயனும் இல்லை.

கர்த்தராகிய இயேசுவின் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்குத்தத்தங்களும், வாக்குப்பண்ணப்பட்டிருக்கிற காரியங்களும் அவர் மூலமாகவே அவருடைய பரிசுத்தவான்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ‘(முதன்மையான மற்றும் உன்னதமான) நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்’ (1 யோவா 2:25). இதே நிருபம் நமக்குச் சொல்கிறது, ‘அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது’ (1 யோவா 5:11). இப்படியிருக்கையில், கிறிஸ்துவுக்குள் இல்லாதவர்களுக்கு இந்த வாக்குத்தத்தங்களால் என்ன நன்மை உண்டாயிருக்கிறது? ஒன்றும் இல்லை. கிறிஸ்துவுக்கு வெளியே இருக்கும் மனிதனானவன், தேவனுடைய அன்பை விட்டு வெளியே இருக்கிறான்; ஆம், உண்மையாகவே அவன் தேவனுடைய கோபாக்கினையில் இருக்கிறான்; தெய்வீக வாக்குத்தத்தங்கள் அல்ல, நியாயத்தீர்ப்பின் எச்சரிப்புகளே அவனது பங்கு. ‘கிறிஸ்துவைச் சேராதவர்கள்’ ‘இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாய்’ (எபே 2:12) இருக்கிறார்கள் என்பதே மனப்பூர்வமாய் கவனத்தில் கொள்ளவேண்டியதாயிருக்கிறது. ‘தேவனுடைய பிள்ளைகளே’ ‘வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள்’ (ரோம 9:8). அருமையான வாசகரே, நீங்களும் அவர்களில் ஒருவராயிருக்கிறீர்களா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.
தெய்வீக வாக்குத்தத்தங்கள் இரட்சிக்கப்பட்டவர்களுக்கும், இரட்சிக்கப்படாதவர்களுக்கும் எந்த வித்தியாசமுமின்றி ஒன்றுபோலவே கிடைக்கிறது என்று போதிப்பவரின் குருட்டுத்தன்மையும், மகா பெரிய பாவமும் எத்தனை பயங்கரமானது! அவர்கள் ‘பிள்ளைகளின் அப்பத்தை’ எடுத்து ‘நாய்களுக்குப்’ போடுவது மட்டுமல்ல, ‘வேதவசனத்தைப் புரட்டி’ (2 கொரி 4:2), ஒழுக்கக்கேடான ஆத்துமாக்களை வஞ்சிக்கிறார்கள். வேதவாக்கியங்களைப் படித்து அதை ஆராயவேண்டியதும், மேலும் அவர்கள் வாசிப்பதையும் கேட்பதையும் தவறில்லாத தரத்துடன் சோதிக்க வேண்டியதும், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுடைய கடமை என்று தேவன் சொல்லியிருப்பதால், அவைகளைக் கேட்டு அவர்களுக்குச் செவிசாய்ப்பவர்களும் எந்த வகையிலும் குற்றமற்றவர்கள் அல்ல. அவர்கள் அப்படிச் செய்வதற்குச் சோம்பேறிகளாயிருந்து, தங்களுடைய குருடான வழிகாட்டிகளையே கண்மூடித்தனமாகப் பின்பற்ற முடிவுசெய்தால், அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள் தலைமேலேயே இருக்கும். சத்தியம் ‘வாங்கப்பட’ வேண்டியதாயிருக்கிறது (நீதி 23:23), அதனுடைய விலையைச் செலுத்த ஆயத்தமில்லாதிருந்தால், அது இல்லாமலே போகக்கடவது.
2. தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்முடையதாக்கிக்கொள்ளப் பிரயாசப்படும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். இதைச் செய்ய நாம் உண்மையாகவே அவைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ளத் தேவையான பிரயாசத்தை எடுக்க வேண்டும். பரிசுத்தவான்கள் கொஞ்சமும் அறிந்திருக்காத வாக்குத்தத்தங்கள் வேதவாக்கியங்களில் எத்தனை இருக்கின்றன என்பதும், அவைகள் விசுவாசிகளின் விசித்திரமான பொக்கிஷங்கள், விசுவாசத்தின் பாரம்பரியப் பொருள் அதிலே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாமலிருப்பதும் ஆச்சரியமளிக்கிறது! கிறிஸ்தவர்கள் ஏற்கனவே அந்த அதிசயமான வாக்குத்தத்தங்களைப் பெற்றவர்களாயிருக்கிறார்கள் என்பது உண்மையாக இருந்தாலும், அவர்களுடைய செல்வத்தின் தலைசிறந்தது, அவர்களுடைய சொத்தின் முழுமையும், வர இருக்கிற ஒன்று (நித்தியஜீவன்) மட்டுமே. அவர்கள் ஏற்கனவே ‘அச்சாரமான’ ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள், ஆனாலும் கிறிஸ்து அவர்களுக்காக வாங்கியிருக்கிற சிறந்த பகுதி இன்னும் தேவனுடைய வாக்குத்தத்தத்திலேயே இருக்கிறது. அப்படியானால் ‘தேவன் தமது ஆவியினாலே வெளிப்படுத்தியிருக்கும்’ (1 கொரி 2:10) பல நற்காரியங்களை தாங்கள் அறிந்துவைத்துக்கொள்ள, அவர்களுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களின் கையிருப்பை அறிந்துகொள்ள, அவருடைய சித்தத்தின் ஏற்பாட்டை அவர்கள் எத்தனை விடாமுயற்சியுடன் ஆராயவேண்டும்!
நித்திய உடன்படிக்கையாக என் மீது ஏற்படுத்தப்பட்டிருப்பதை அறிந்துகொள்ளும்படி நான் வேதவாக்கியங்களை ஆராய்வது மட்டுமல்லாமல், என் மனதிலே மீண்டும் மீண்டும் அவைகளைச் சிந்தித்து, அதன் ஆவிக்குரிய அர்த்தத்தைப் புரிந்துகொள்ள நான் தேவனிடத்தில் கதறும்படியாக, வாக்குத்தத்தங்களை நான் தியானிக்கவும் வேண்டும். ஒரு தேனீயானது பூவைப் பார்த்துக்கொண்டிருக்கும் வரை அதிலிருந்து தேனை உறிஞ்ச முடியாது. ஒரு கிறிஸ்தவனும் தன்னுடைய விசுவாசத்தினால் தெய்வீக வாக்குத்தத்தங்களைப் பற்றி அதன் ஆழத்தில் ஊடுருவும் வரை, அதிலிருந்து உண்மையான ஆறுதலையோ அல்லது பெலனையோ பெற்றுக்கொள்ள முடியாது. சோம்பேறி போஷிக்கப்படுவான் என்ற எந்த ஒரு உறுதியையும் தேவன் கொடுக்கவில்லை, ஆனால் ‘ஜாக்கிரதையுள்ளவனுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்’ (நீதி 13:4) என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆகவேதான் கிறிஸ்து சொன்னார், ‘அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்’ (யோவா 6:27). வாக்குத்தத்தங்களை மனதிலே பதித்திருக்கும்பொழுதுதான், உண்மையாகவே அவைகள் நமக்குத் தேவைப்படும்பொழுது, நாம் பெலனற்று மயங்கிவிழும்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவைகளை நமக்கு நினைவூட்டி பெலப்படுத்துவார்.

3. தேவனுடைய வாக்குத்தத்தங்களின் ஆசீர்வதிக்கப்பட்ட நோக்கத்தை நாம் அறிந்துகொள்ளும்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். ‘அனுதின வாழ்க்கையின் பொது இடங்களில் சில கிறிஸ்தவர்களின் நடக்கை, கிறிஸ்தவம் என்பது ஏதோ ஒரு பந்துபோலவும், பொது உலக வாழ்க்கைக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அது அவர்களுக்கு அசாதாரணமானதாகவும் சொப்பனத்தைப் போலவும் இருக்கிறது; இவையெல்லாம் உண்மை என்பதைவிட அவைகள் கடவுள் சம்பந்தப்பட்ட ஒரு கட்டுக்கதையாக அவர்களுக்குத் தோன்றுகிறது. ஆவிக்குரிய காரியங்களுக்காகவும், வரப்போகிற வாழ்க்கைக்காகவும் ஒரு நடைமுறை வழக்காக அவர்கள் தேவனில் நம்பிக்கை வைக்கிறார்கள்; ஆனால் உண்மையான தேவபக்தி இம்மை மற்றும் மறுமைக்குரிய வாக்குத்தத்தங்களை உள்ளடக்கியது என்பதை அவர்கள் முற்றிலும் மறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அனுதின வாழ்க்கையின் சிறு காரியங்களுக்காக ஜெபம் செய்வதும் வீணானதாகத் தோன்றும். இந்த மனப்போக்கு அவர்களுடைய விசுவாசத்தின் உண்மைத்தன்மையையே கேள்விக்குறியாக்குகிறது என்று நான் சொல்லப்போனால் அது அவர்களை அதிர்ச்சியடையச் செய்யலாம். இது அவர்கள் வாழ்க்கையின் சிறு பிரச்சனைகளில் கூட உதவி செய்யாவிட்டால், மரணம் போன்ற மிகப்பெரிய சோதனைகளில் அவர்களுக்கு அது கைகொடுக்குமா?’ (சி. ஹெச். ஸ்பர்ஜன்).

‘தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது’ (1 தீமோ 4:8). வாசகரே, தேவனின் வாக்குத்தத்தங்கள் அனுதின வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும், காரியங்களுக்கும் பொருந்தும் என்பதை விசுவாசிக்கிறீர்களா? அல்லது பழைய ஏற்பாடு மாம்ச பிரகாரமான யூதர்களுக்கு மட்டுமே சொந்தமானது, ‘நம்முடைய வாக்குத்தத்தங்கள்’ ஆவிக்குரியது, இந்த உலகத்திற்குரியதல்ல என்று நம்பவைத்து, வேத காலங்களைப் பிரித்து உபதேசிப்பவர்கள் (Dispensationalists) உங்களை ஏமாற்றியிருக்கிறார்களா? யோசுவா 1:5-ல் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கும், ‘நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுகிறதுமில்லை’ (எபி 13:5) என்ற வாக்குத்தத்தத்திலிருந்து எத்தனை முறை ஒரு கிறிஸ்தவன் தேற்றப்பட்டிருக்கிறான்! சொல்லப்பட்டிருக்கிற வாக்குத்தத்தங்களில் 2 கொரிந்தியர் 6:18-ல் குறிப்பிடப்பட்டிருப்பது லேவியராகமத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தும், 2 கொரிந்தியர் 7:1-ல் ‘இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியால்’ என்று சொல்லப்பட்டிருக்கிறதே!
‘பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களில் எது சரியாக எனக்குப் பொருத்தமானது? எங்கே நான் அதற்கான வரையறையைச் செய்ய முடியும்?’ என்று ஒருவேளை யாராவது கேட்டால், நாங்கள் பதிலுரைக்கிறோம், சங்கீதம் 84:11 அறிவிக்கிறது, ‘கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்’. நீங்கள் உண்மையாகவே ‘உத்தமமாய்’ நடப்பீர்களென்றால், ஆசீர்வதிக்கப்பட்ட வாக்குத்தத்தங்களையும், உண்மையாகவே உங்களுக்கு வேண்டியதாயிருக்கும் ‘நன்மைகளையும்’ தேவன் உங்களுக்குக் கொடுக்கிறார் என்பதை உங்களுடையதாக்கிக்கொள்ள நீங்கள் பாத்திரவான்களாயிருக்கிறீர்கள். ‘என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்’ (பிலி 4:19). இப்படியிருக்க, அவருடைய வார்த்தைகளில் எங்காகிலும் உள்ள வாக்குத்தத்தங்கள் உங்களுடைய தற்போதைய சூழ்நிலைக்குப் பொருந்துமென்றால், உங்களுடைய ‘தேவைக்கேற்ப’ அதை உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள்.
4. தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கிடையே சரியான பாகுபாட்டை நாம் ஏற்படுத்திக்கொள்ளும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். தேவனுடைய ஜனங்களில் பலர் அடிக்கடி ஆவிக்குரிய திருட்டிலே குற்றவாளிகளாகிறார்கள், நாங்கள் எதை இங்கே குறிப்பிடுகிறோம் என்றால், தங்களுக்குச் சொந்தமில்லாத ஒன்றை அவர்கள் தங்களுடையதாக்கிக் கொள்கிறார்கள், ஆனால் ண்மையில் அவைகள் மற்றவர்களுக்குச் சொந்தமானது. இயேசு கிறிஸ்துவுடன், அவரால் தெரிந்துகொள்ளப்பட்டு மீட்கப்பட்டவர்களாகிய நமக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சில குறிப்பிட்ட உடன்படிக்கைகள், எந்த நிபந்தனைகளுமின்றி நமக்கு இருக்கின்றன; ஆனால் தேவனால் சொல்லப்பட்டிருக்கும் பல வளமான வார்த்தைகள் மிகவும் கவனமுடன் மதிக்கப்பட வேண்டிய நிபந்தனைகளை உள்ளடக்கியவை, அதற்குக் கீழ்ப்படியாவிட்டால் நாம் அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய வாசகரின் உண்மையான தேடுதலின் ஒரு பகுதி இந்த முக்கியமான பகுதிக்குத் தரப்பட வேண்டும். ‘அவருடைய உடன்படிக்கை உன்னால் கவனமாகக் கைக்கொள்ளப்பட வேண்டும் என்ற அவருடைய நிபந்தனைக்கு நீ உட்பட்டு நடக்கும்பொழுது மட்டுமே, தேவன் உனக்குள்ள தன்னுடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்ளுவார். நாம் அவருடைய நிபந்தனையுடன் கூடிய வாக்குத்தத்தத்தின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்பொழுது மட்டுமே, நாம் அந்த வாக்குத்தத்தம் நமக்காக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கலாம்’ (சி. ஹெச். ஸ்பர்ஜன்).
பல தெய்வீக வாக்குத்தத்தங்கள் குறிப்பிட்ட குணாதிசயங்கள் கொண்டவர்களுக்குச் சொந்தமானவை, இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் ஆவிக்குரிய கனிகளை உடையவர்களுக்குச் சொந்தமானவை. உதாரணமாக, சங்கீதம் 25:9-ல், சாந்தகுணமுள்ளவர்களை ‘நியாயத்திலே நடத்துவார்’ என்று தேவன் சொல்கிறார்; ஒருவேளை நான் அவருடன் ஐக்கியத்தில் இல்லாதிருப்பேனானால், என்னுடைய சுயசித்தத்தைச் செய்துகொண்டிருப்பேனென்றால், என்னுடைய இருதயம் அகந்தையுள்ளதாயிருந்தால், இந்த வசனத்தின்படி என்னைத் தேற்றிக்கொள்ள எனக்கு எந்த நியாயமும் இல்லை. மீண்டும் யோவான் 15:7-ல், தேவன் நமக்குச் சொல்கிறார், ‘நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்’. ஆனால் நான் அவருடன் செயல்முறையில் ஐக்கியம் கொள்ளாதிருந்தேனானால், என்னுடைய நடத்தையை அவருடைய கட்டளைகள் ஒழுங்குபடுத்தவில்லையென்றால், என்னுடைய ஜெபத்திற்குப் பதில் வராது. தேவனுடைய வாக்குத்தத்தங்கள் சுத்தமான கிருபையினாலே வரும்பொழுது, அந்தக் கிருபையானது ‘நீதியினாலே ஆண்டுகொள்ளப்படுகிறது’ (ரோம 5:21) மேலும் அது மனிதனுடைய பொறுப்பைத் தட்டிக்கழிப்பதில்லை என்பதும் எப்பொழுதும் நினைவில் கொள்ளப்பட வேண்டியதாயிருக்கிறது. உடல் ஆரோக்கியத்தைக் குறித்த காரியங்களை நான் அலட்சியம் பண்ணினால், தேவனுடைய பல வகையான உலகப்பிரகாரமான இரக்கங்களை அனுபவிப்பதை என் சரீரத்திலுள்ள நோய் பாதிக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை: அதே வகையில், அவருடைய நியமங்களை நான் அசட்டைப் பண்ணினால், அவருடைய வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறாதபொழுது, என்னை நானே குற்றம் சாற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

தேவன் வாக்குப்பண்ணியிருப்பதால், பரிசுத்தம் காணப்படாவிட்டாலும் அவர் தன்னுடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறார் என்று ஒருவரும் நினைக்க வேண்டாம்: ஒரு பரிபூரணத்தின் விலையில் (பரிசுத்தமில்லாத் தன்மையில்) அவர் மற்றொரு பரிபூரணத்தை (வாக்குத்தத்தங்களை) செயல்படுத்துவதில்லை. கிறிஸ்துவினுடைய தியாகமான செயலை தேவன் பெரிதுபடுத்தி, அதன் கனிகளைத் தன்னுடைய செயலைக் குறித்து வருத்தப்படாத அக்கறையற்ற ஆத்துமாவின் மேல் வைத்து கனப்படுத்துவார் என்று ஒருவரும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். ஒரு உண்மையின் சமநிலை இங்கே காணப்பட வேண்டும்; அந்தோ! அது பலமுறை மறக்கப்படுகிறது, தெய்வீகக் கிருபையை உயர்த்துவதாகக் கருதிக்கொண்டு உண்மையில் மனிதரில் பலர் ‘இச்சையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்’. ‘ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன்’ (சங் 50:15) என்று குறிப்பிட எத்தனை முறை ஒருவன் கேட்டிருக்கிறான்! ஆனால் அது அதற்கு முந்தைய வசனத்தில் ‘நீ தேவனுக்கு ஸ்தோத்திர பலிகளையிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி’ என்பதுடன் இணைந்திருக்கிறது! மறுபடியும், ‘என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்’ (சங் 32:8) என்ற வாக்குத்தத்தமானது அதனுடைய பின்னணியத்தைக் கவனிக்காமல் எத்தனை முறை பிடித்துக்கொள்ளப்படுகிறது! அது தன்னுடைய ‘மீறுதல்களை’ (வசனம் 5) அறிக்கை பண்ணினவனுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம். அப்படியானால், நான் என்னுடைய மனதிலே அறிக்கை பண்ணாத பாவத்தை நான் வைத்திருந்தேனானால், மற்றும் மாம்சத்தின் பெலத்திலே சாய்ந்திருந்தேனானால் அல்லது தேவனுக்குக் காத்திருப்பதற்குப் (சங் 62:5) பதிலாக என்னுடைய சகாக்களின் உதவியை நாடினேனானால் – நான் அவருடன் நெருக்கமான ஐக்கியத்தில் நடக்க வேண்டும் என்பதை அது முக்கியப்படுத்துவதால், நான் அவரை விட்டுத் தூரமாயிருக்கையில் அவருடைய கண்களைக் காணமுடியாதாகையால், தேவன் தன்னுடைய கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார் என்பதை எண்ண எனக்கு எந்த உரிமையும் இல்லை.

5. தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்முடைய ஆதாரமாகவும், தாபரிக்கும் இடமாகவும் கொள்ளும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். தேவன் அவைகளை நமக்குக் கொடுத்திருப்பது, தன்னுடைய இரக்கமுள்ள வடிவமைப்புகளைத் தெரியப்படுத்துவதன் மூலம் தன்னுடைய அன்பை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, நம்முடைய இருதயத்தைத் தேற்றவும் விசுவாசத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதும் ஒரு காரணம். தேவன் விரும்பியிருந்தால் தன்னுடைய நோக்கத்தை வெளிப்படுத்தாமலேயே அவருடைய வாக்குத்தத்தங்களைப் பொழிந்திருக்க முடியும். நமக்குத் தேவையான எல்லா இரக்கங்களையும் தன்னைப் பணயம் வைக்காமலேயே கர்த்தர் கொடுத்திருக்க முடியும். அப்படியிருந்திருந்தால் நாம் விசுவாசிகளாயிருக்க முடியாது; வாக்குத்தத்தம் இல்லாமல் விசுவாசம் என்பது ஊன்றுவதற்குத் தரையில்லாமல் கால்கள் இருப்பதைப் போன்றது. நமக்கு எல்லாவற்றையும் தரும் பிதாவானவர் இரண்டு விதங்களில் நாம் ஈவுகளை அனுபவிக்கும்படி திட்டமிட்டுள்ளார்: முதலில் விசுவாசத்தின் மூலம், இரண்டாவதாகக் கனிகொடுப்பதின் மூலம். அவர் ஞானமாக நம்முடைய இருதயத்தைக் காணப்படுகிற மற்றும் அழிந்துபோகிற காரியங்களை மறக்கச்செய்து, ஆவிக்குரிய மற்றும் நித்தியத்திற்குரியவைகளை நோக்கி உயர்த்தி ஈர்க்கிறார்.
ஒருவேளை வாக்குத்தத்தங்கள் இல்லாதிருந்தால் நமக்கு எந்த விசுவாசமும் இருந்திருக்காது என்பது மட்டுமல்ல, எந்த நம்பிக்கையுமே இல்லை. தேவன் நமக்குக் கொடுப்பேன் என்று அறிவித்திருக்கிற காரியங்களை எதிர்பார்த்திருப்பதே நம்பிக்கையல்லவா? விசுவாசமானது ‘வாக்குத்தத்தம்’ என்ற வார்த்தையைப் பார்க்கிறது, நம்பிக்கையானது அதனுடைய செயலாக்கத்தைப் பார்க்கிறது. ஆகவே, இது ஆபிரகாமுடன் இருந்தது; ‘நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும் அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்பொழுது தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனானான்’ (ரோம 4:18-21). மோசேயிடமும் இது இப்படியே இருந்தது: ‘இனி வரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்’ (எபி 11:26). பவுலிடமும் இது இப்படியே இருந்தது: ‘எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்குமென்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்’ (அப் 27:25). அன்பான வாசகரே, உங்களிடத்திலும் இது இப்படியே இருக்கிறதா? பொய்யுரையாதவரின் வாக்குத்தத்தங்களே உங்கள் எளிய இருதயத்தின் இளைப்பாறும் இடமாக இருக்கிறதா?
6. தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கு நாம் பொறுமையுடன் காத்திருக்கும்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். தேவன் ஆபிரகாமுக்கு ஒரு குமாரனை வாக்குப்பண்ணினார், ஆனால் அது நிறைவேற அவன் பல ஆண்டுகள் காத்திருந்தான். கர்த்தருடைய கிறிஸ்துவை அவன் காணுமுன்னே மரணத்தைக் காண்பதில்லை (லூக் 2:26) என்ற வாக்குத்தத்தத்தை அவன் பெற்றிருந்தான், ஆனாலும் அவன் கல்லறையில் ஒரு காலை வைக்கும் வரை அது அவனுக்கு நன்மையாக முடியவில்லை. ஜெபமாகிய விதைக்கும் நேரத்திற்கும், பதில் பெற்றுக்கொள்ளுதலாகிய அறுவடை நேரத்திற்கும் இடையில் அடிக்கடி நீண்ட மற்றும் கடினமான குளிர்காலம் உண்டு. யோவான் நற்செய்தி புத்தகம் பதினேழாம் அதிகாரத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இயேசு தாமே செய்த ஜெபத்திற்கு அவர் இன்னும் முழுமையான பதிலைப் பெற்றுக்கொள்ளவில்லை. அவருடைய ஜனங்களுக்குள்ள தேவனுடைய சிறந்த வாக்குத்தத்தங்களில் பல அவர்கள் மகிமையில் பிரவேசிக்கும் வரை செழுமையுடன் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. எல்லா நித்தியத்தையும் தன்னுடைய அதிகாரத்தில் கொண்டிருப்பவர் அவசரப்பட வேண்டியதில்லை. பொறுமை ‘அவளுடைய பரிபூரண வேலையைச்’ செய்யும்படியாக தேவன் நம்மை அடிக்கடிக் காத்திருக்க வைக்கிறார், ஆனாலும் நாம் அவரில் உள்ள நம்பிக்கையை விடாதிருப்போமாக. ‘குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய்சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும்; அது தாமதிப்பதில்லை’ (ஆப 2:3).
‘இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்’ (எபி 11:13). விசுவாசத்தின் முழு செயலும் இங்கே புரிந்துகொள்ளப்படுகிறது: அறிவு, நம்பிக்கை, அன்புடன் ஒட்டிக்கொள்ளுதல். ‘தூரத்திலே’ என்பது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைக் குறிக்கிறது; அவைகளை அவர்கள் மனதினால் ‘பார்த்தார்கள்’, நிழலுக்குப் பின்னால் இருந்தவைகளை அறிந்து, தேவனுடைய ஞானத்தையும் நன்மையையும் அவைகளில் கண்டுகொண்டார்கள். அவைகள் ‘பின்தொடரப்பட்டன’: அவர்கள் சந்தேகப்படவில்லை, அவைகளில் அவர்களுடைய பங்குபெறுதல் உறுதியளிக்கப்பட்டிருந்தது, அது அவர்களை ஏமாற்றாது என்பதை அறிந்திருந்தார்கள். ‘அணைத்துக்கொண்டு’ என்பது அவர்களுடைய மகிழ்ச்சியையும், அதற்குள்ள தங்களுடைய மதிப்பையும் மேலும் அன்பையும், இதயப்பூர்வமாக வரவேற்பதையும், உற்சாகப்படுத்துவதையும் மனநிர்ணயம் பண்ணிக்கொள்வதைக் குறிக்கிறது. வாக்குத்தத்தங்களே அவர்களுடைய அலைதல்களிலும், சோதனைகளிலும், பாடுகளிலும் அவர்களுடைய ஆத்துமாக்களுக்குத் தேற்றரவாகவும் தாபரமாகவும் இருந்தன.
தேவன் தன்னுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதைத் தாமதப்படுத்துவதன் மூலம் பல வகையான முடிவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. நம்முடைய விசுவாசம் நிரூபிக்கப்படுவது மட்டுமல்லாது, அதனுடைய உண்மைத்தன்மையும் தெளிவாகக் காணப்படுகிறது; பொறுமை அதிகரிக்கப்படுவது மட்டுமல்லாமல், நம்பிக்கை செயல்வடிவம் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது; தேவனுடைய சித்தத்திற்கு அடிபணிதலும் ஊக்குவிக்கப்படுகிறது. ‘மறக்கடிக்கப்படுதல் இன்னும் முற்றுபெறவில்லை: நாம் மீண்டு வரவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிற சொகுசைச் சுற்றியே நாம் இன்னும் வலம் வந்துகொண்டிருக்கிறோம். ஆபிரகாம் தன்னுடைய மகன் ஈசாக்குப் பால் மறந்தபொழுது பெரிய விருந்து பண்ணினான்; ஒருவேளை நம்முடைய பரலோகத் தகப்பனும் நமக்கு அதையே செய்யலாம். பெருமையுள்ள இருதயமே உன்னைத் தாழ்மைப்படுத்து. உன்னுடைய விக்கிரகங்களை விட்டுவிடு; நீ விரும்பிச் செய்பவைகளை மறந்துவிடு; தேவன் வாக்குப்பண்ணின சமாதானம் உனக்கு வரும்’ (சி. ஹெச். ஸ்பர்ஜன்).
7. நாம் வாக்குத்தத்தங்களைச் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளும்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். முதலாவது, தேவனுடனான நமது நடவடிக்கைகளில்; அவருடைய சிம்மாசனத்தை நாம் நாடுவது, அவருடைய வாக்குத்தத்தங்களில் ஒன்றைக் கெஞ்சுவதற்காக இருக்க வேண்டும். அது நம்முடைய விசுவாசம் தங்கியிருப்பதற்கு அஸ்திபாரமாக அமைவது மட்டுமல்லாமல், நம்முடைய வேண்டுதல்களுக்கு அதுவே பொருளாகவும் அமைய வேண்டும். நம்முடைய வேண்டுதல் கேட்கப்பட வேண்டுமானால், நாம் தேவனுடைய சித்தத்தின்படி கேட்க வேண்டும்; அவருடைய சித்தமானது, அவர் நம்மீது பொழிந்தருளுவேன் என்று சொல்லியிருக்கிற நற்காரியங்களின் மீது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே நாம் அவர் வாக்குப்பண்ணினவைகளைப் பிடித்துக்கொண்டவர்களாய், அவருக்கு முன்னால் அவைகளை விரித்துக்காட்டி, ‘தேவரீர் சொன்னபடியே செய்தருளும்’ (2 சாமு 7:25) என்று சொல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். ஆதியாகமம் 32:12-ல் உள்ள வாக்குத்தத்தங்களை யாக்கோபு எப்படி வேண்டுதல் செய்தான் என்பதைக் கவனியுங்கள்; யாத்திராகமம் 32:13-ல் மோசேயையும், சங்கீதம் 119:58-ல் தாவீதையும், 1 இராஜாக்கள் 8:25-ல் சாலமோனையும் கவனியுங்கள்; என்னுடைய கிறிஸ்தவ வாசகரே, நீங்களும் அப்படியே செய்யுங்கள்.
இரண்டாவதாக, இந்த உலகத்தில் நாம் வாழ்கின்ற வாழ்க்கையில்; எபிரேயர் 11:13-ல் விசுவாச வீரர்கள் அறிந்திருந்ததையும், நம்பினதையும், தெய்வீக வாக்குத்தத்தங்களை அவர்கள் தழுவிக்கொண்டதையும் மாத்திரம் நாம் வாசிக்கவில்லை, அவர்களில் அது ஏற்படுத்தின விளைவுகளும் நமக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது: ‘அவர்கள் தங்களை இந்த உலகத்திற்கு அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு’, அதன்மூலம் தங்கள் விசுவாசத்தைப் பலர் அறிய வெளிப்படுத்தினார்கள். மேலும் அவர்கள் (தங்கள் நடக்கையின் மூலம் வெளிக்காட்டி) அவர்களின் ஆர்வம் இந்த உலகத்தின் காரியங்களின் மீது இல்லை என்பதை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்கள் குறித்துக்கொண்டிருந்த வாக்குத்தத்தங்களிலேயே அவர்களைத் திருப்திப்படுத்தும் பங்கு இருந்தது. ஒருவனுடைய பொக்கிஷம் எங்கேயோ, அங்கே அவனுடைய இருதயமும் இருப்பதால், அவர்களுடைய இருதயங்கள் பரலோகத்திற்குரிய காரியங்களில் வைக்கப்பட்டிருந்தன.
‘இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடு பூரணமாக்கக் கடவோம்’ (2 ொரி 7:1); இந்த விளைவையே இது நம்மில் ஏற்படுத்த வேண்டும், விசுவாசம் அவைகளையே பிடித்துக்கொண்டிருக்குமானால், நிச்சயமாக ஏற்படுத்தும். ‘இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது’ (2 பேது 1:4). இப்பொழுது நற்செய்தியும் விலைமதிப்பற்ற வாக்குத்தத்தங்களும், கிருபையாகப் பொழிந்தருளப்பட்டு வல்லமையாகச் செயல்படுத்தப்படும்பொழுது, அவைகள் இருதய சுத்தத்திலும் நடவடிக்கைகளிலும் தாக்கங்கொள்ளுகின்றன. அவபக்தியையும் உலக இச்சையையும் விட்டுவிடவும், தெளிந்த புத்தியுள்ளவர்களாக, நீதியுள்ள மற்றும் தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழப் போதிக்கின்றன. தெய்வீகத் தாக்கத்தின் மூலமாக மனிதனை உள்ளார்ந்த விதத்தில் தெய்வீகத் தன்மையில் பங்கடையச் செய்து, வெளிப்பிரகாரமாக இவ்வுலகத்தில் இருக்கும் கேட்டிற்கும் தீயவைகளுக்கும் விலகி ஒதுங்கியிருக்கச் செய்வதே நற்செய்தி வாக்குத்தத்தங்களின் வல்லமையான விளைவுகளாகும்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.