1 | கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப் போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப்போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது: | 2தீமோ 2:14 1தீமோ 5:21 1தீமோ 6:13 |
2 | இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு: கடிந்துகொள்: அறிவுரை கூறு: மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு. | சங் 40:9 ஏசா 61:1-3 யோனா 3:2 லூக் 4:18 லூக் 4:19 லூக் 9:60 ரோம 10:15 கொலோ 1:25 கொலோ 1:28 |
3 | ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்கமாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக்கொள்வார்கள். | 2தீமோ 3:1-6 1தீமோ 4:1-3 |
4 | உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைகதைகளை நாடிச் செல்வார்கள். | 2தீமோ 1:15 நீதி 1:32 சகரி 7:11 அப் 7:57 எபிரெ 13:25 |
5 | நீயோ அனைத்திலும் அறிவுத் தெளிவோடிரு: துன்பத்தை ஏற்றுக்கொள்: நற்செய்தியாளனின் பணியை ஆற்று: உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய். | ஏசா 56:9 ஏசா 56:10 ஏசா 62:6 எரே 6:17 எசே 3:17 எசே 33:2 எசே 33:7 மாற் 13:34 மாற் 13:37 லூக் 12:37 அப் 20:30 அப் 20:31 1தெச 5:6 எபிரெ 13:17 வெளிப் 3:2 |
6 | ஏனெனில், நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. | பிலிப் 2:17 |
7 | நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். | 1தீமோ 6:12 |
8 | இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்: நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். | சங் 31:19 மத் 6:19 மத் 6:20 கொலோ 1:5 1தீமோ 6:19 |
9 | விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய். | 2தீமோ 4:21 2தீமோ 1:4 |
10 | தேமா இன்றைய உலகப்போக்கை விரும்பி என்னைவிட்டு அகன்று, தெசலோனிக்கா சென்று விட்டார். கிரேஸ்கு கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்று விட்டனர். | கொலோ 4:14 கொலோ 4:15 பிலேமோ 1:24 |
11 | என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர். | 2தீமோ 1:15 |
12 | திக்கிக்குவை நான் எபேசுக்கு அனுப்பிவிட்டேன். | அப் 20:4 எபே 6:21 கொலோ 4:7 தீத் 3:12 |
13 | நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டு வந்த போர்வையையும் நூல்களையும், குறிப்பாகத் தோற்சுருளையும் எடுத்துவா. | 1கொரி 4:11 2கொரி 11:27 |
14 | கன்னானாகிய அலக்சாந்தர் எனக்குப் பல தீமைகளைச் செய்தான். அவன் செயலுக்குத் தக்கவாறு ஆண்டவர் அவனுக்குப் பதிலளிப்பார். | அப் 19:33 அப் 19:34 1தீமோ 1:20 |
15 | அவனிடமிருந்து உன்னைக் காத்துக்கொள். அவன் நம்முடைய போதனையை அதிகம் எதிர்த்தவன். | மத் 10:16 மத் 10:17 பிலிப் 3:2 |
16 | நான் முதன்முறை வழக்காடிய போது எவரும் என் பக்கமிருக்கவில்லை: எல்லாரும் என்னை விட்டு அகன்றனர். அக் குற்றம் அவர்களைச் சாராதிருப்பதாக. | அப் 22:1 அப் 25:16 1கொரி 9:3 2கொரி 7:11 பிலிப் 1:7 பிலிப் 1:17 1பேது 3:15 |
17 | நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்: சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். | சங் 37:39 சங் 37:40 சங் 109:31 எரே 15:20 எரே 15:21 எரே 20:10 எரே 20:11 மத் 10:19 அப் 18:9 அப் 18:10 அப் 23:11 அப் 27:23 அப் 27:24 |
18 | தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென். | ஆதி 48:16 1சாமு 25:39 1நாளா 4:10 சங் 121:7 மத் 6:13 லூக் 11:4 யோவா 17:15 1கொரி 10:13 2கொரி 1:10 2தெச 3:3 |
19 | பிரிஸ்கா, அக்கிலா, ஒனேசிப்போர் ஆகியோரின் வீட்டாருக்கு வாழ்த்துக் கூறு. | அப் 18:2 அப் 18:18 அப் 18:26 ரோம 16:3 ரோம 16:4 1கொரி 16:19 |
20 | எரஸ்து கொரிந்துவில் இருந்து விட்டார். துரோப்பிம் நோயுற்றிருந்ததால் அவரை மிலேத்துவில் விட்டு வந்தேன். | அப் 19:22 ரோம 16:23 |
21 | குளிர் காலத்திற்குமுன் வர முழு முயற்சி செய். ஆபூல், பூதன்சு, லீனு, கிளாதியா மற்ற எல்லாச் சகோதரர்களும் சகோதரிகளும் உனக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். | 2தீமோ 4:9 2தீமோ 4:13 2தீமோ 1:4 |
22 | ஆண்டவர் உன்னோடு இருப்பாராக! இறை அருள் உங்களோடு இருப்பதாக! | மத் 28:20 ரோம 16:20 2கொரி 13:14 கலா 6:18 பிலேமோ 1:25 |