வேதாகமத்தை வாசி

நீதிமொழிகள் 29

                   
புத்தகங்களைக் காட்டு
1பன்முறை கண்டிக்கப்பட்டும் ஒருவர் பிடிவாதமுள்ளவராகவே இருந்தால், அவர் ஒருநாள் திடீரென அழிவார்: மீண்டும் தலைதூக்கமாட்டார்.
2நேர்மையானவர்கள் ஆட்சி செலுத்தினால், குடிமக்கள் மகிழ்ச்சியுடனிருப்பார்கள்: பொல்லார் ஆட்சி செலுத்தினால் அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
3ஞானத்தை விரும்புவோர் தம் தந்தையை மகிழ்விப்பார்: விலைமகளின் உறவை விரும்புகிறவர் சொத்தை அழித்துவிடுவார்.
4நியாயம் வழங்குவதில் அரசர் அக்கறை காட்டினால் நாடு செழிக்கும்: அவர் வரி சுமத்துவதில் அக்கறை காட்டினால் நாடு பாழாய்ப் போகும்.
5தமக்கு அடுத்திருப்போரை அவர்கள் எதிரிலேயே அளவுமீறிப் புகழ்கிறவர் அவரைக் கண்ணியில் சிக்கவைக்கிறார்.
6தீயவர் தம் தீவினையில் சிக்கிக் கொள்வர்: நேர்மையாளரோ மகிழ்ந்து களிகூர்வர்.
7ஏழைகளின் உரிமைகளைச் காப்பதில் நேர்மையாளர் அக்கறை கொள்வர்: இவ்வாறு அக்கறைகொள்வது பொல்லருக்குப் புரியாது.
8வன்முறையாளர் ஊரையே கொளுத்திவிடுவர்: ஞானமுள்ளவர்களோ மக்களின் சினத்தைத் தணிப்பார்கள்.
9போக்கிரியின்மீது ஞானமுள்ளவர் வழக்குத் தொடுப்பாராயின், அவர் சீறுவார், இகழ்ச்சியோடு சிரிப்பார், எதற்கும் ஒத்துவரமாட்டார்.
10தீங்கறியாதவனைக் கொலைகாரர் பகைப்பர்: நேர்மையானவர்களோ அவருடைய உயிரைக் காக்க முயல்வார்கள்.
11அறிவில்லாதவர் தம் சினத்தை அடக்கமாட்டார்: ஞானமுள்ளவரோ பொறுமையோடிருப்பதால், அவர் சினம் ஆறும்.
12ஆட்சி செலுத்துகிறவர் பொய்யான செய்திகளுக்குச் செவி கொடுப்பாராயின், அவருடைய ஊழியரெல்லாரும் தீயவராவர்.
13ஏழைக்கும் அவரை ஒடுக்குவோருக்கும் பொதுவானது ஒன்று உண்டு: இருவருக்கும் உயிரளிப்பவர் ஆண்டவரே.
14திக்கற்றவர்களின் வழக்கில் அரசர் நியாயமான தீர்ப்பு வழங்குவாராயின், அவரது ஆட்சி பல்லாண்டு நீடித்திருக்கும்.
15பிரம்பும் கண்டித்துத் திருத்துதலும் ஞானத்தைப் புகட்டும்: தம் விருப்பம் போல் நடக்கவிடப்பட்ட பிள்ளைகள் தாய்க்கு வெட்கக்கேட்டை வருவிப்பர்.
16பொல்லாரின் ஆட்சி தீவினையைப் பெருக்கும்: அவர்களது வீழ்ச்சியை நல்லார் காண்பர்.
17உன் பிள்ளையைத் தண்டித்துத் திருத்து: அவர் உனக்கு ஆறுதலளிப்பார், மனத்தை மகிழ்விப்பார்.
18எங்கே இறைவெளிப்பாடு இல்லையோ, அங்கே குடிமக்கள் கட்டுங்கடங்காமல் திரிவார்கள்: நீதி போதனையின்படி நடப்பவர் நற்பேறு பெற்று மகிழ்வார்.
19வெறும் வார்த்தைகளினால் வேலைக்காரர் திருத்தமாட்டார்: அவை அவருக்கு விளங்கினாலும் அவற்றைப் பொருட்படுத்தமாட்டார்.
20பேசத் துடிதுடித்துக்கொண்டிருப்பவரை நீ பார்த்திருக்கிறாயா? மூடராவது ஒருவேளை திருந்துவார்: ஆனால் இவர் திருந்தவேமாட்டார்.
21அடிமையை இளமைப் பருவமுதல் இளக்காரம் காட்டி வளர்த்தால், அவர் பிற்காலத்தில் நன்றிகெட்டவராவார்.
22எளிதில் சினம் கொள்பவரால் சண்டை உண்டாகும்: அவர் பல தீங்குகளுக்குக் காரணமாவார்.
23இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்: தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்.
24திருடனுக்குக் கூட்டாளியாயிருப்பவர் தம்மையே அழித்துக் கொள்கிறார்: அவர் உண்மையைச் சொன்னால் தண்டிக்கப்படுவார்: சொல்லாவிடில், கடவுளின் சாபம் அவர்மீது விழும்.
25பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிக்கொண்டு நடப்பவர் கண்ணியில் சிக்கிக்கொள்வார்: ஆண்டவரை நம்பகிறவருக்கோ அடைக்கலம் கிடைக்கும்.
26பலர் ஆட்சியாளரின் தயவை நாடுவதுண்டு: ஆனால் எந்த மனிதருக்கும் நியாயம் வழங்குபவர் ஆண்டவர் அன்றோ?
27நேர்மையற்றவரை நல்லார் அருவருப்பர்: நேரிய வழி நடப்போரை பொல்லார் அருவருப்பர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.