1 | பொல்லாங்கு செய்தோரை எவரும் பின்தொடர்ந்து செல்லாதிருந்தும், அவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள்: நேர்மையானவர்களோ அச்சமின்றிச் சிங்கம் போல் இருப்பார்கள். |
2 | ஒரு நாட்டில் அறிவும் விவேகமுமுள்ள தலைவர்கள் இருந்தால், அதன் ஆட்சி வலிமைவாய்ந்ததாய் நிலைத்திருக்கும்: ஆனால் ஒரு நாட்டினர் தீவினை புரிவார்களாயின், ஆளுகை அடுத்தடுத்துக் கைமாறிக் கொண்டே இருக்கும். |
3 | ஏழைகளை ஒடுக்கும் கொடிய அதிகாரி, விளைச்சலை அழிக்கும் பெருமழைக்கு ஒப்பானவன். |
4 | நீதிபோதனையைப் புறக்கணிப்போரே, பொல்லாரைப் புகழ்வர்: அதைக் கடைப்பிடித்து நடப்போர் அவர்களை எதிர்ப்பர். |
5 | தீயோருக்கு நியாயம் என்றால் என்ன என்பதே தெரியாது: ஆண்டவரை வழிபடுபவரோ எல்லாவற்றையும் நன்குணர்பவர். |
6 | முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட, மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல். |
7 | அறிவுக்கூர்மையுள்ள மகன் நீதிச் சட்டத்தைக் கடைபிடித்து நடப்பான்: ஊதாரிகளோடு சேர்ந்துகொண்டு திரிபவன் தன் தந்தைக்கு இழிவு வரச் செய்வான். |
8 | அநியாய வட்டி வாங்கிச் செல்வத்தைப் பெருக்குகிறவரது சொத்து, ஏழைகளுக்கு இரங்குகிறவரைச் சென்றடையும். |
9 | ஒருவர் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியாதிருப்பாரானால், கடவுளும் அவர் வேண்டுதலை அருவருத்துத் தள்ளுவார். |
10 | நேர்மையானவர்களைத் தீயவழியில் செல்லத் தூண்டுபவர், தாம் வெட்டின குழியில் தாமே விழுவார்: தீது செய்யாதவர்கள் வளம்பட வாழ்வார்கள். |
11 | செல்வர் தம்மை ஞானமுள்ளவர் என்று எண்ணிக்கொள்வார்: உணர்வுள்ள ஏழையோ அவரது உண்மையான தன்மையை நன்கறிவார். |
12 | நேர்மையானவர்கள் ஆட்சியுரிமை பெற்றால் மக்கள் பெருமிதம் கொள்வர்: பொல்லார் தலைமையிடத்தற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள். |
13 | தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது: அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர் கடவளின் இரக்கம் பெறுவார். |
14 | எப்போதும் கடவுளுக்கு அஞ்சி வாழ்பவர் நற்போறுபெறுவார்: பிடிவாதமுள்ளவரோ தீங்கிற்கு உள்ளாவார். |
15 | கொடுங்கோல் மன்னன் ஏழைக்குடிமக்களுக்கு முழக்கமிடும் சிங்கமும் இரைதேடி அலையும் கரடியும் போலாவான். |
16 | அறிவில்லாத ஆட்சியாளர் குடி மக்களை வதைத்துக் கொடுமைப்படுத்துவார்: நேர்மையற்ற முறையில் கிடைக்கும் வருவாயை வெறுப்பவர் நீண்டகாலம் வாழ்வார். |
17 | கொலை செய்தவன் தப்பியோடுவதாக எண்ணிப் படுகுழியை நோக்கி விரைகிறான்: அவனை எவரும் தடுக்க வேண்டாம். |
18 | நேர்மையாக நடப்பவருக்குத் தீங்கு வராது: தவறான வழியில் நடப்பவர் தீங்கிற்கு உள்ளாவார். |
19 | உழுது பயிரிடுகிறவர் நிரம்ப உணவு பெறுவார்: வீணானவற்றில் காலத்தைக் கழிப்பவர் எப்போதும் வறுமை நிறைந்தவராய் இருப்பார். |
20 | உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்: விரைவிலேயே செல்வராகப் பார்க்கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார். |
21 | ஓரவஞ்சனை காட்டுவது நன்றல்ல: ஆனால் ஒரு வாய்ச் சோற்றுக்காகச் சட்டத்தை மீறுவோருமுண்டு. |
22 | பிறரைப் பொறாமைக் கண்ணோடு பார்ப்பவர் தாமும் செல்வராக வேண்டுமென்று துடிக்கிறார்: ஆனால் தாம் வறியவராகப்போவதை அவர் அறியார். |
23 | முகப்புகழ்ச்சி செய்கிறவரைப் பார்க்கிலும் கடிந்துகொள்ளுகிறவரே முடிவில் பெரிதும் பாராட்டப்படுவார். |
24 | பெற்றோரின் பொருளைத் திருடிவிட்டு, “அது குற்றமில்லை” என்று சொல்கிறவன், கொள்ளைக்காரரை விடக் கேடுகெட்டவன். |
25 | பேராசைக்கொண்டவன் சண்டை மூளச் செய்வான்: ஆண்டவரையே நம்பியிருப்பவர் நலமுடன் வாழ்வார். |
26 | தன் சொந்தக் கருத்தையே நம்பி வாழ்பவன் முட்டாள்: ஞானிகளின் நெறியில் நடப்பவரோ தீங்கினின்று விடுவிக்கப்படுவர். |
27 | ஏழைகளுக்குக் கொடுப்பவருக்குக் குறைவு எதுவும் ஏற்படாது: அவர்களைக் கண்டும் காணாததுபோல் இருப்பவர் பல சாபங்களுக்கு ஆளாவார். |
28 | பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்: அவர்கள் வீழ்ச்சியுற்றபின் நேர்மையானவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள். |