1 | ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு அதிராக்கு நாட்டிற்கு எதிராக எழும்புகிறது: அது தமஸ்கு நகர்மீது இறங்கித் தங்கும்: ஏனெனில் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களைப் போலவே சிரியா நாட்டின் நகர்களும் ஆண்டவருக்கே உரியன. |
2 | அதன் எல்லைக்கு அடுத்துள்ள ஆமாத்தும் ஞானத்தில் சிறந்த தீரும் சீதோனும் அவருக்கே சொந்தம். |
3 | தீர் தன்னைச் சுற்றிலும் அரண் ஒன்றைக் கட்டியெழுப்பியது: தூசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் பொன்னையும் சேமித்தது. |
4 | இதோ என் தலைவர் அவற்றைப் பறிமுதல் செய்வார்: அதன் அரணைக் கடலுக்குள் தூக்கி எறிவார்: அந்நகரும் நெருப்புக்கு இரையாகும். |
5 | அஸ்கலோன் இதைக் கண்டு அஞ்சி நடுங்கும்: காசா நகர் வேதனையால் துடிதுடிக்கும்: அவ்வாறே எக்ரோனும் நம்பிக்கை இழந்துவிடும். காசா நகரிலிருந்து அரசன் அழித்தொழிவான்: அஸ்கலோன் குடியற்றுப்போகும். |
6 | அஸ்தோதில் கலப்பினத்தார் குடியிருப்பார்கள்: பெலிஸ்தியரின் ஆணவத்தை நான் ஒழித்திடுவேன். |
7 | இரத்தம் வடியும் இறைச்சியை அவர்கள் வாயினின்று அகற்றுவேன்: அருவருப்பான உணவை அதன் பற்களிடையிருந்து நீக்குவேன்: அவ்வினம் நம் கடவுளுக்கு எஞ்சியதாகும்: அது யூதாவின் குலங்களில் தலையாயது ஆகும். எக்ரோன் நகரத்தார் எபூசியரைப் போல் இருப்பார்கள்: |
8 | அங்குமிங்கும் தாக்கும் படையினின்று எனது இல்லத்தைக் காப்பதற்கு நான் பாளையம் இறங்குவேன்: ஒடுக்குகிறவன் எவனும் இனி அவர்களின் நகர்களை ஊடுருவிச் செல்லான்: ஏனெனில் என் கண்களாலேயே யாவற்றையும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். |
9 | மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்: வெற்றிவேந்தர்: எளிமையுள்ளவர்: கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். |
10 | அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்: எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்: போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்: அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும். |
11 | உன்னைப் பொறுத்தமட்டில் உன்னோடு நான் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு, சிறைப்பட்டிருக்கும் உன்னைச் சார்ந்தோரை நீரற்ற படுகுழியிலிருந்து விடுவிப்பேன். |
12 | நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறைக் கைதிகளே, உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்: இருமடங்கு நன்மைகள் நான் உங்களுக்குத் தருவேன் என்று நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன். |
13 | நான் யூதாவை என் வில்லாக்கிக் கொண்டேன்: எப்ராயிமை அம்பாக அமைத்துக்கொண்டேன்: சீயோனே! உன் மக்களை யவனருக்கு எதிராக ஏவிவிட்டு உன்னை வல்லவனின் வாள் போல் ஆக்குவேன். |
14 | அப்போது அவர்கள்மீது ஆண்டவர் தோன்றுவார். அவரது அம்பு மின்னலைப்போல் பாய்ந்து செல்லும்: தலைவராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி ஒலி எழுப்புவார்: அவர் தென்திசைச் சூறாவளிக்கு இடையே நடந்து வருவார். |
15 | படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு அடைக்கலமாய் இருப்பார்: அவர்கள் தங்கள் பகைவரை ஒழித்துக்கட்டி, அவர்களுடைய கவண் கற்களை மிதித்துப்போடுவார்கள்: திராட்சை இரசத்தைப்போல் அவர்களது குருதியைக் குடிப்பார்கள்: கிண்ணம்போல் நிரம்பி வழிந்தும், பலிபீடத்தின் கொம்புகளைப் போல் நனைந்தும், இரத்தத்தால் நிறைந்திருப்பார்கள். |
16 | அந்நாளில் அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர், தம் மக்களாகிய அவர்களை ஆயர் தம் மந்தையை மீட்பது போல் மீட்டருள்வார்: அவர்களும் அவரது நாட்டில் மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள கற்களைப்போல் ஒளிர்வார்கள். |
17 | ஆம், அக்காட்சி எத்துணை இனியது: எத்துணை அழகியது: கோதுமை இளங்காளையரையும் புதுத்திராட்சை இரசம் கன்னியரையும் செழிப்புறச் செய்யும். |