1 | இளவேனில் காலத்தில் மழைக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்: ஆண்டவரே மின்னல்களை உண்டாக்குபவர்: மனிதர்க்கு அவரே மழையைத் தருபவர்: வயல்வெளிகளில் பயிரினங்களை முளைப்பிப்பவரும் அவரே: |
2 | குலதெய்வங்களை வீணானதையே கூறுகின்றன: குறிசொல்வோர் பொய்க்காட்சி காண்கின்றனர்: அவர்கள் போலிக் கனவுகளை எடுத்துரைக்கின்றனர்: வெறுமையான ஆறுதல் மொழிகளைச் சொல்கின்றனர்: ஆதலால், மக்கள் ஆடுகளைப்போல் சிதறுண்டு அலைந்தனர்: ஆயரில்லாததால் துன்புறுகின்றனர். |
3 | ஆயர்களுக்கு எதிராக என் கோபம் பற்றியெரிகின்றது: தலைவர்களை நான் தண்டிக்கப் போகின்றேன்: ஏனெனில், படைகளின் ஆண்டவர் தம் மந்தையாகிய யூதா குடும்பத்தாரைக் கண்காணிக்கிறார்: அவர்களை வலிமைமிகு போர்க்குதிரைகளைப்போல் ஆக்குவார். |
4 | அவர்களிடமிருந்தே மூலைக் கல் தோன்றும்: கூடார முளையும், போர் வில்லும், ஆட்சியாளர் அனைவரும் ஒருங்கே அவர்களிடமிருந்துதான் தோன்றுவர். |
5 | அவர்கள், ஆற்றல்மிக்க போர்வீரர்களைப்போல், பகைவரைச் சேற்றில் தள்ளி மிதிப்பார்கள். |
6 | “யூதா குடும்பத்தை ஆற்றல் மிக்கதாய் ஆக்குவேன்: யோசேப்பு குடும்பத்தை மீட்டருள்வேன்: அவர்கள்மீது இரக்கம் கொண்டுள்ளதால் அவர்களை நான் திரும்பி வரச்செய்வேன்: அவர்கள் என்னால் தள்ளிவிடப்படாதவர்களைப் போல் இருப்பார்கள்: ஏனெனில், நானே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்: நான் அவர்களின் மன்றாட்டுக்கு மறுமொழி அளிப்பேன். |
7 | எப்ராயிம் மக்கள் ஆற்றல்மிக்க வீரரைப்போலாவார்கள்: திராட்சை மது அருந்தியவரின் உள்ளத்தைப்போல் அவர்கள் உள்ளம் களிப்படையும்: அவர்கள் பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள்: ஆண்டவரில் அவர்கள் இதயம் மகிழ்ந்து களிப்புறும். |
8 | சீழ்க்கை ஒலி எழுப்பி நான் அவர்களைச் சேர்த்துக் கொள்வேன்: ஏனெனில் நானே அவர்களை மீட்டருள்வேன்: முன்போலவே அவர்கள் பல்கிப் பெருகுவார்கள். |
9 | மக்களினங்களிடையே நான் அவர்களைச் சிதறடித்தாலும், தொலை நாடுகளில் என்னை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்: தங்கள் மக்களோடு வாழ்ந்து திரும்பி வருவார்கள். |
10 | நான் அவர்களை எகிப்து நாட்டினின்று திரும்பிவரச் செய்வேன்: அசீரியாவிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்: கிலயாது, லெபனோன் நாடுகளுக்கு அவர்களைக் கொண்டு வருவேன்: இடம் இல்லாமல் போகுமட்டும் வந்து சேருவார்கள். |
11 | எகிப்தியக் கடலை அவர்கள் கடந்து செல்வார்கள்: கடல் அலைகள் அடித்து நொறுக்கப்படும்: பேராற்றின் ஆழங்களெல்லாம் வறண்டுபோகும்: அசீரியாவின் ஆணவம் அடக்கப்படும்: எகிப்து நாட்டின் செங்கோல் அகற்றப்படும். |
12 | ஆண்டவருக்குள் அவர்களை ஆற்றல் மிக்கவர்கள் ஆக்குவேன்: ஆண்டவரின் பெயரில் அவர்கள் பெருமைகொள்வார்கள், “ என்கிறார் ஆண்டவர். |