1 | திராட்சை இரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்: போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்: அவற்றில் நாட்டங்கொள்பவர் மடையரே. |
2 | அரசரின் சினம் சிங்கத்தின் முழக்கத்திற்கு நிகர்: அரசருக்குச் சினமூட்டுகிறவர் தம் உயிரை இழப்பார். |
3 | விவாதத்தில் ஈடுபடாதிருத்தல் மனிதருக்கு அழகு: ஏனெனில் மூடராயிருக்கும் எவரும் விவாத்ததை விரும்புகின்றனர். |
4 | சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டார்: அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார். |
5 | மனிதர் மனத்தில் மறைந்திருக்கும் எண்ணம் ஆழமான நீர்நிலை போன்றது: மெய்யறிவுள்ளவரே அதை வெளிவரச் செய்வார்? |
6 | பலர் தம்மை வாக்குப் பிறழாதவரெனக் கூறிக்கொள்வர்: ஆனால், நம்பிக்கைக்குரியவரைக் கண்டுபிடிக்க யாரால் இயலும்? |
7 | எவர் களங்கமற்ற நேர்மையான வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவரின் காலத்திற்குப்பின் நற்பேறு பெறுவார்கள். |
8 | மன்னன் நீதிவழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும்போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்துவிடுவான். |
9 | “என் இதயத்தைக் தூயதாக்கி விட்டேன்: நான் பாவம் நீக்கப்பெற்றுத் தூய்மையாயிருப்பவன்”என்று யாரால் சொல்லக்கூடும்? |
10 | பொய்யான எடைக் கற்களையும் பொய்யான அளவைகளையும் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கின்றார். |
11 | சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம்: அவர் உண்மையும் நேர்மையானவரா என்று சொல்லிவிடலாம். |
12 | கேட்கும் காது, காணும் கண்: இவ்விரண்டையும் ஆண்டவரே படைத்தார். |
13 | தூங்கிக்கொண்டேயிருப்பதை நாடாதே: நாடினால் ஏழையாவாய். கண் விழித்திரு: உனக்கு வயிறார உணவு கிடைக்கும். |
14 | ஒரு பொருளை வாங்கும் போது, தரம் குறைவு, விலை மிகுதி என்று ஒருவர் சொல்வார்: வாங்கிச் சென்றபின், தாம் திறம்படச் செய்ததாக நினைத்துத் தம்மையே மெச்சிக் கொள்வார். |
15 | பொன்னையும் முத்துகளையும் விட, அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன். |
16 | அன்னியருடைய கடனுக்காகப் பிணை நிற்கிறவருடைய ஆடையை எடுத்துக்கொள்: அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு. |
17 | வஞ்சித்துப் பெறும் உணவு சுவையாயிருக்கும்: ஆனால் பின்னர் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும். |
18 | நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால் வெற்றி பெறுவாய்: சூழ்ச்சி முறையை வகுக்குமுன் போரைத் தொடங்காதே. |
19 | வம்பளப்போன் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவான்: வாயாடியோடு உறவாடாதே. |
20 | தாயையும் தந்தையையும் சபிக்கிறவனின் விளக்கு, காரிருள் வேளையில் அணைந்துபோகும். |
21 | தொடக்கத்திலே விரைவில் கிடைத்த உரிமைச் சொத்து, இறுதியிலே ஆசி பெற்றதாய் இராது. |
22 | “தீமைக்குத் தீமை செய்வேன்” என்று சொல்லாதே: ஆண்டவரையே நம்பியிரு: அவர் உன்னைக் காப்பார். |
23 | பொய்யான எடைக் கற்களைப் பயன்படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கிறார்: போலித் துலாக்கோலைப் பயன்படுத்துவது முறையற்றது. |
24 | மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்: அப்படியிருக்க, தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்? |
25 | எண்ணாமல் ஒன்றைக் கடவுளுக்குப் படையல் என நேர்ந்து விட்டு, அப்பொருத்தனையைப்பற்றிப் பிறகு எண்ணுவது கண்ணியில் கால் வைப்பதாகும். |
26 | ஞானமுள்ள அரசன் பொல்லாரைப் பிரித்தெடுப்பான்: அவர்கள் மீது சக்கரத்தை ஏற்றி நசுக்குவான். |
27 | ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு: அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும். |
28 | அன்பும் உண்மையும் மன்னவனை ஆட்சியில் நீடித்திருக்கச் செய்யும்: அன்பாகிய அடிப்படையிலேதான் அவனது அரியணை நிலைத்து நிற்கும். |
29 | இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களது வலிமை: முதியோருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி. |
30 | நையப் புடைத்தலே மனத்தின் மாசகற்றும்: கசையடி கொடுத்தலே உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும். |