1 | மீண்டும் நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது இதோ, |
2 | பறக்கும் ஏட்டுச்சுருள் ஒன்றைக் கண்டேன். “நீ காண்பது என்ன?” என்று அத்தூதர் என்னைக் கேட்க, நான், “பறக்கும் ஏட்டுச்சுருள் ஒன்றைக் காண்கிறேன்: அதன் நீளம் இருபது முழம், அகலம் பத்து முழம்” என்று பதிலளித்தேன். |
3 | அப்போது அவர் என்னிடம், “அனைத்துலகின்மீதும் விழுகின்ற சாபமே இது: ஒருபுறம் எழுதியுள்ளபடி, திருடன் எவனும் இங்கிருந்து ஒழிக்கப்படுவான்: மறுபுறம் எழுதியுள்ளபடி, பொய்யாணை இடுகிறவன் எவனும் தண்டனைக்குத் தப்பவே மாட்டான். |
4 | நான் அந்தச் சாபத்தை அனுப்புவேன்” என்கிறார் படைகளின் ஆண்டவர். “அது திருடரின் வீட்டிற்குள்ளும் என் பெயரால் பொய்யாணை இடுவோரின் இல்லத்திற்குள்ளும் நுழைந்து, அவரவர் வீட்டில் தங்கி, மரங்கள் கற்கள் உட்பட அவ்வீட்டையே அழித்து விடும். |
5 | பின்பு என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதர் வெளியே வந்து என்னிடம், “உன் கண்களை உயர்த்தி, அங்கிருந்து வருவது யாது எனப்பார்” என்றார். |
6 | “அது என்ன?” என்று நான் திருப்பிக் கேட்க, “வெளிவரும் ஒரு மரக்கால்!” என்றார். தொடர்ந்து அவர், “இதுதான் நில உலகெங்கும் பரவியிருக்கும் அவர்களின் தீச்செயல்” என மொழிந்தார். |
7 | அதன் ஈய மூடி தூக்கி உயர்த்தப்பட்டது. இதோ, மரக்காலின் உள்ளே ஒரு பெண் அமர்ந்திருந்தாள். |
8 | அப்போது அத்தூதர், “இவளே அக்கொடுமை” எனக் கூறி, அவளை அந்த மரக்காலுக்குள் திணித்துப் பளுவான ஈய மூடியால் அதை அடைத்தார். |
9 | மீண்டும் நான் என் கண்களை உயர்த்திப் பார்த்த போது இதோ, வெளிவருகின்ற இரண்டு பெண்களைக் கண்டேன்: அவர்களுக்கு நாரையின் இறக்கைகள் போல் இறக்கைகள் இருந்தன. அவர்களுடைய இறக்கைகளில் காற்று நிரம்பியிருந்தது: அவர்கள் மரக்காலை மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் தூக்கிக் கொண்டு போனார்கள். என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதரிடம், |
10 | “இவர்கள் மரக்காலை எங்கே கொண்டு போகிறார்கள்?” என்று நான் கேட்டேன். |
11 | அதற்கு அவர், “சீனார் நாட்டிலே அதற்கொரு கோவில் கட்டுவதற்கு அதைக் கொண்டு போகிறார்கள். அங்கே கோவில் எழுப்பி மரக்காலை அதற்குரிய மேடையில் நிலைநிறுத்துவார்கள்” என்றார். |