படிப்புகள்: 266
Print

கிறிஸ்துவின் ஊழியத்திற்கு அழைக்கப்பட்ட ஒரு ஊழியனின் ஊழியத்தில் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. அவர் மீட்கப்படாத மக்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதும், தேவனுடைய மக்களை ஞானத்தோடும் அறிவோடும் போஷித்து வளர்ப்பதும் (எரேமியா 3:15), ஜனத்தின் வழியிலிருந்து இடறல்களை எடுத்துப்போடுவதும் (ஏசாயா 57:14) மட்டுமல்லாமல்; “சத்தமிட்டுக் கூப்பிடு, அடக்கிக்கொள்ளாதே, எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி” (ஏசாயா 58:1, 1 தீமோத்தேயு 4:2) என்ற கட்டளைக்கும் கீழ்ப்படிய வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, மற்றொரு முக்கியமான கடமையாக, “என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்” (ஏசாயா 40:1) என்ற தேவனுடைய வார்த்தைக்கும் அவர் கீழ்ப்படிய வேண்டியிருக்கிறது.

“என் மக்கள்!” என்பது எவ்வளவு சிறந்ததொரு அழைப்பு! “உன் தேவன்!” என்பது எத்தகைய உறுதியளிக்கும் இணைப்பு! “என் மக்களுக்கு ஆறுதல்!” என்பது எப்பேர்ப்பட்ட பாக்கியமான பொறுப்பு! “ஆற்றுங்கள், தேற்றுங்கள்” என்ற கட்டளையை இரண்டு முறை வலியுறுத்துவதற்கு மூன்று காரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். முதலாவது, சில சமயங்களில் விசுவாசிகளின் ஆத்துமாக்கள் ஆறுதலடைய மறுக்கின்றன (சங்கீதம் 77:2). எனவே, இதுபோன்ற நேரங்களில்தான் ஆத்துமாவுக்கு அதிக ஆறுதல் கொடுப்பது அவசியமாகிறது. இரண்டாவதாக, விசுவாசிகளை ஊக்குவிக்கும் காரியத்தை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதைப் போதகரின் மனதில் ஆழமாகப் பதியவைப்பதற்காகவே இந்தப் பொறுப்பு வலியுறுத்தப்படுகிறது. மூன்றாவதாக, தேவன் தாமே தம்முடைய மக்களின் மகிழ்ச்சியைக் குறித்து எவ்வளவாய் வாஞ்சிக்கிறார் என்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான் (பிலிப்பியர் 4:4).

தேவனுக்கென்று அவருடைய விசேஷித்த தயவுக்கு உரிய ஒரு மக்கள் இருக்கிறார்கள். தம்முடன் நெருங்கிய உறவில் இருக்கும்படி இந்தக் கூட்டத்தாரை அழைத்திருப்பதன் மூலம் அவர்களை “என்னுடைய ஜனங்கள்” என்று அநேக நேரங்களில் அழைக்கிறார். அவர்கள் பலமுறை ஆறுதலடையாமல் உள்ளனர். அவர்களின் பாவ சுபாவம், சாத்தானால் உண்டாகும் சோதனைகள், உலகத்தார் மூலம் உண்டாகும் துன்பங்கள், மேலும் கிறிஸ்துவின் காரியங்களில் உலகத்தின் மோசமான அணுகுமுறை எனத் தொடர்ச்சியான காரணங்களினால் அவர்கள் ஆறுதலடையாமல் இருக்கிறார்கள். “சகலவிதமான ஆறுதல்களின்” தேவன் அவர்கள்மேல் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் (2 கொரிந்தியர் 1:3). மேலும், அவருடைய ஊழியக்காரர்கள் இருதயம் உடைந்தவர்களுடைய காயங்களைக் கட்டி, அதில் கீலேயாத்தின் பிசின் தைலம் இடவேண்டும் என்பது அவருடைய வெளிப்படையான சித்தமாய் இருக்கிறது. தேவனுடைய கட்டளைகளுக்கும் அவரது அதிகாரத்திற்கும் எதிராகக் கலகம் செய்தவர்களுக்கும் ஆறுதல் கொடுக்கும் அவரைப்போல வேறொரு தேவன் உள்ளாரா என்கிற கேள்வியை எழுப்புவதன் வழியாகவே, “தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்?” என்று நாம் சொல்வதற்கு முகாந்திரம் இருக்கிறது (மீகா 7:18).

இந்தச் சிறிய புத்தகத்தின் உள்ளடக்கங்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக அவ்வப்போது நமது மாதாந்திரப் பத்திரிகைகளில் தோன்றியவை. அவை அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் வெகுகாலத்திற்கு முன்பே போதிக்கப்பட்டவை. இப்போது வழக்கத்தில் இல்லாத சில கருத்துக்களை நாம் தவிர்த்திருக்கிறோம் (குறிப்பாகத் தீர்க்கதரிசனம் பற்றிய காரியங்களை). எனினும், தேவனுடைய அநேக துன்புற்ற மக்களுக்கு இந்தப் புத்தகத்தின் செய்திகள் மிகுந்த ஆறுதலைத் தந்திருப்பதால், அவற்றை அதிகம் திருத்தியமைக்கவில்லை. இந்தப் புத்தகத்தில் உள்ள வேத வசன விளக்கங்கள் வழியாகத் தேவன் துன்பப்பட்டவர்களுக்குச் சமாதானம் தருவாராக. சகல மகிமையும் தேவனுக்கே உரியது.

— ஆர்தர் W. பிங்க், 1952