படிப்புகள்: 311
Print

“ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்." (பிலிப்பியர் 4:11).

நிறைவற்ற தன்மை! உலகில் எப்போதாவது இவ்வளவு அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதா? இருக்காது என்பதில் சந்தேகமே வேண்டாம். நாம் பெருமைப்படும் அளவிற்கு வளர்ச்சியும், ஐசுவரியத்தின் மிகப்பெரிய விருத்தியும் இருந்தும், அனுதின சந்தோஷங்களுக்காக நேரத்தையும் பணத்தையும் செலவழித்தாலும், திருப்தியின்மை எங்கும் வியாபித்திருக்கிறது. எந்தத் தரப்பு மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. எல்லாரும் உறுதியற்றும், திருப்தியற்றும் இருக்கிறார்கள். தேவனுடைய மக்களில் அநேகர்கூட இந்தச் சந்ததியின் அசுத்த ஆவியாகிய திருப்தியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனநிறைவு! அத்தகைய அனுபவத்தைப் பெறுவது சாத்தியமா? அல்லது இது ஒரு வெறும் கற்பனை மட்டுமா? அல்லது கிட்டத்தட்ட கனவில் வரும் கதையைப் போன்றதா? அதைப் பூமியில் பெறுவது சாத்தியமா? அல்லது பரலோகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்தான் அது பொருந்துமா? ஒருவேளை பூமியில் அதைப் பெற முடிந்தால், அது நிலைத்திருக்குமா? அல்லது சில காலத்திற்கு மட்டும் நீடிக்குமா? இதுபோன்ற எல்லாக் கேள்விகளுக்கும் அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளில் பதில் இருக்கிறது. “என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்" (பிலிப்பியர் 4:11).

பவுலின் இந்த வார்த்தைகளை அவர் எந்தச் சூழலில் எழுதினார் என்பதைக் கவனித்தால் நாம் அதன் வீரியத்தை நன்றாகப் புரிந்துகொள்வோம். இந்த நிருபத்தை அவர் எழுதும்போது (அல்லது வேறொருவரிடம் சொல்ல அந்த உதவியாளர் எழுதியிருக்கலாம்), அவர் பேரரசர் அரண்மனை மெத்தையில் இருந்து எழுதவில்லை; அல்லது நல்ல வசதியான மற்றும் தங்கள் தேவபக்தியில் சிறந்து விளங்கிய கிறிஸ்தவருடைய மாளிகையில் இருந்தும் எழுதவில்லை. மாறாக அவர் சிறையில் கட்டப்பட்டவராக (பிலிப்பியர் 1:13-14) இதை எழுதுகிறார். வேறொரு நிருபத்தில் தன்னை 'கட்டுண்டவன்' என்று அடையாளப்படுத்துகிறார் (எபேசியர் 4:1). இந்த நிலையில் இருந்தாலும் அவர் மனரம்மியமாக இருப்பதை வெளிப்படுத்துகிறார்.

கொள்கைக்கும் நடைமுறைக்கும், இலட்சியத்திற்கும் அனுபவத்திற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. ஆனால் அப். பவுலின் விஷயத்தில், மனநிறைவு என்பது இடைவிடாத உண்மையான அனுபவமாக இருக்கிறது. “நான் எந்த நிலைமையிலிருந்தாலும்” என்ற அவரது வார்த்தைகளை நாம் கவனிக்கிறோம். ஆனால் பவுல் எப்படி அத்தகைய அனுபவத்திற்குள் பிரவேசித்தார்? இத்தகைய அனுபவம் எதைக் கொண்டுள்ளது? முதல் கேள்விக்கான பதிலை "மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்" என்பதில் நாம் காணலாம். 'ஆவியின் ஞானஸ்நானத்தை நான் பெற்றதால் மனநிறைவைப் பெற்றேன்,” என்று அவர் கூறவில்லை. இந்த ஆசீர்வாதத்தை தேவனுக்கு முழுமையாக அர்ப்பணித்ததினால் பெற்றுக்கொண்டேன் என்றும் அவர் கூறவில்லை. அது நம்முடைய உள்ளார்ந்த குணத்தால் உண்டானதல்ல என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அவர் அதைக் கிறிஸ்தவ அனுபவம் என்ற பள்ளியில் கற்றுக்கொண்டார். இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், அவர் தனது ஊழியத்தின் கடைசி நாட்களில் எழுதிய நிருபங்களில் ஒன்றில்தான் இந்த வாக்கியத்தை எழுதினார்!

அப். பவுல் அனுபவித்த “மனநிறைவு" நேர்மறையான மற்றும் இனிமையான சந்தர்ப்பங்களில் இருந்து வரவில்லை என்பது மேலே சுட்டிக்காட்டப்பட்ட உண்மையிலிருந்து தெளிவாகிறது. அதிலிருந்து மாறுபட்ட சில பொதுவான கருத்துக்களையும் அது நீக்குகிறது. ஒருவரின் இதயத்தின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றாமல் திருப்தி அடைய முடியாது என்று அநேகர் நினைக்கிறார்கள். ஆனால், சிறைச்சாலையில் மனநிறைவுடன் இருக்கும் ஒருவரை யாரும் பார்ப்பதில்லை. எனவே ஒன்று தெளிவாகிறது: இங்கு குறிப்பிடப்படும் மனநிறைவு என்பது வெளித்தோற்றத்தில் அல்ல, உள்ளிருந்து வருவது. இதை தேவனிடமிருந்தே பெறும்படி நாட வேண்டும், மற்ற படைப்புகளின் மகிழ்விலிருந்து அல்ல.

இன்னும் கொஞ்சம் ஆழமாகச் செல்ல முயற்சிப்போம். மனநிறைவு என்றால் என்ன? இது தேவனின் சர்வவல்லமையுள்ள திட்டத்தில் வரும் அவருடைய பராமரிப்பில் திருப்தியாய் இருப்பதுதான். இது முறுமுறுப்புக்கு எதிரானது. முறுமுறுப்பு என்பது தேவனுக்கு எதிராகக் கலகக் குரல் எழுப்பி, ஒரு களிமண் தன்னை வனைந்தவனைப் பார்த்து, “என்னை ஏன் இப்படி உருவாக்கினீர்” என்று கேள்வி கேட்பதற்குச் சமம் (ரோமர் 9:20). தன் நிலையைக் குறித்து முறுமுறுப்பதைவிட, மனரம்மியம் உள்ள மனிதன் தனது சூழ்நிலையும் காரியங்களும் இன்னமும் மோசமாக இல்லை என்பதை எண்ணி தேவனுக்கு நன்றி சொல்கிறான். தனக்கு இருக்கும் நிகழ்காலத் தேவைக்கும் அதிகமாக இச்சிப்பதைக் காட்டிலும், தன்னைக் குறித்து தேவன் இன்னும் கரிசனையாக இருக்கிறார் என்று ஆண்டவருக்குள் அகமகிழ்கிறான். அப்படிப்பட்டவன்தான் தன்னிடம் உள்ளதைப் போதும் என்கிற மனநிலையுடன் திருப்தி அடைகிறவன் (எபிரெயர் 13:5).

பேராசைதான் மனநிறைவுக்கு எதிரான கொடிய தடையாக இருக்கிறது. அது ஒரு புற்றுநோயைப் போல நிகழ்கால மனநிறைவை அரித்து விடுகிறது. “பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” (லூக்கா 12:15) என்று கர்த்தர் தம்முடைய சீஷர்களுக்குக் கனமான எச்சரிக்கையைக் கொடுத்ததற்குக் காரணமில்லாமல் இல்லை. சில காரியங்கள் நம்மை இன்னும் ஏமாற்றும். அவை சேமிப்பு, வருங்கால பாதுகாப்பு, அதாவது வேலை செய்ய முடியாத காலங்களுக்காக இருப்பு வைத்தல் போன்ற நல்ல பெயர்களில் தோன்றுகின்றன. வேதம் பண ஆசையை “விக்கிரக வழிபாடு" என்று அழைக்கிறது. “விக்கிரகாராதனையான பொருளாசை” (கொலோசெயர் 3:5) என்பது தேவன் மீது இருதயத்தை வைக்காமல் பொருள்களின் மீது இருதயத்தைச் சாயப்பண்ணுவதாகும். “தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள்” (நீதிமொழிகள் 30:15) உடைய அட்டையைப் போன்றதே பொருளாசையுடைய இருதயத்தின் மொழி. பேராசை கொண்ட ஒரு மனிதன் தன்னிடம் சிறிதளவு இருந்தாலும் அல்லது நிறைவாக இருந்தாலும் இன்னும் வேண்டுமென்றே விரும்புகிறான். இது பவுலின் வார்த்தைகளிலிருந்து எவ்வளவு மாறாக இருக்கிறது பாருங்கள்: “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்” (1 தீமோத்தேயு 6:8). லூக்கா நற்செய்தியில் உள்ள இந்த வார்த்தைகள் கட்டாயம் நமக்குத் தேவையானவை: “உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள்" (லூக்கா 3:14).

“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்" (1 தீமோத்தேயு 6:6). இந்த வேத வார்த்தை நம்மைக் கவலை, அடிமைத்தனம், பேராசை மற்றும் சுயநலம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கிறது. இந்த மனநிலை தேவன் கொடுப்பவைகளில் ஆனந்தப்படுவதற்கு நமக்கு விடுதலையைக் கொடுக்கிறது. இதற்கும் பின்வரும் வார்த்தைகளுக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்." (1 தீமோத்தேயு 6:9-10). இந்த உலகக் கவலையிலிருந்து நம்மை விடுதலை செய்து, நம்மிடம் இருப்பதில் மனநிறைவு அடைய தேவன் அருள்புரிவாராக.

மனநிறைவு என்பது தேவனைச் சார்ந்து இளைப்பாறும் இதயத்திலிருந்து வருகிறது. இது தேவன் தருகிற எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை அனுபவிக்கும் ஆத்துமாவின் நிலை. தேவனுடைய சித்தத்திற்கு என் விருப்பத்தை ஒப்புக்கொடுத்ததால் வரும் மனநிலை அது. தேவன் எல்லாவற்றையும் திறம்பட செய்கிறார் என்பதை உறுதிபட நம்பும் ஆனந்த பாக்கியம். இப்போதும் அவர் சகலத்தையும் நன்மைக்கேதுவாக நடப்பிக்கிறார் என்கிற உறுதிப்பாடு. இந்த அனுபவத்தை “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிவதால்” (ரோமர் 12:2) பெறமுடிகிறது. நம் வாழ்வில் அனுமதிக்கப்படும் அனைத்தும் தவறு செய்ய முடியாத சர்வவல்லமையுள்ள தேவனின் கையிலிருந்தே வருகிறது. அவர் தம் பிள்ளைகள் தேவையில்லாமல் ஒரு கண்ணீரைக் கூட சிந்துவதை விரும்பாத அளவு அன்பானவர் என்பதை நாம் புரிந்து ஏற்றுக்கொண்டால் மட்டுமே, நமக்கு உண்மையான மனநிறைவு கிடைக்கும்.

நமது கடைசி வார்த்தைகள் கீழ்க்கண்டவாறு இருக்கட்டும்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சந்நிதியில் அதிகம் காத்திருப்பதால் மட்டுமே உண்மையான மனநிறைவு சாத்தியம். அதைத்தான் நமது தியானப்பகுதி வலியுறுத்தியுள்ளது: “தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர் 4:12,13). ஒருபோதும் திருப்தியற்றவராகவே இல்லாத பிதாவுடன் நாம் நெருங்கிய உறவில் பழகி இருக்கும்போதுதான், முறுமுறுக்கும் பாவத்திலிருந்து நாம் விடுபட முடியும். இதைப் படிக்கிறவர்களும், எழுதுகிறவரும், தேவனுடைய வார்த்தையாகிய கண்ணாடியால் கர்த்தருடைய மகிமையைத் தரிசித்து, அதன் விளைவாக, “ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து” மறுரூபப்படுவோமாக (2 கொரிந்தியர் 3:18).