“ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரியவதியாயிருந்தாள்.” (2 சாமுவேல் 11:2)
தாவீதின் பாவத்தைக் குறித்து நாம் அடிக்கடியும் அதிகமாகவும் பேசுகிறோம். ஆனால், பத்சேபாளின் பாவத்தைப் பற்றி நாம் பேசுவதோ அல்லது அதைக் குறித்துக் கேள்விப்படுவதோ மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது. தாவீதின் பாவம் மிகப்பெரியது, பத்சேபாளின் பாவமோ மிகச்சிறியது என்பது நிதர்சனமான உண்மை. தாவீதின் பாவம் வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்று; தன்னைக் கேள்வி கேட்க எவருமில்லை என்ற அகந்தையில் செய்யப்பட்டது. ஆனால், பத்சேபாளின் பாவமோ கவனக்குறைவால் மட்டுமே நடைபெற்றது. தாவீது வேண்டுமென்றே பத்சேபாளுடன் விபசாரம் செய்தான்; மேலும், அவளுடைய கணவனைத் திட்டமிட்டுக் கொலை செய்தான். ஆனால், பத்சேபாளின் வாழ்விலோ இது எதிர்பாராமல் நடந்த ஒன்று; தாவீதின் கண்களுக்கு முன்பாகத் தன்னைத் தற்செயலாக வெளிப்படுத்திக் கொண்டாள். எனவே, தாவீதின் பாவம் பெரியது என்பதிலும், பத்சேபாளின் பாவம் சிறியது என்பதிலும் நமக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை.
ஆயினும், பத்சேபாளின் சிறிய பாவமே தாவீதின் பெரிய பாவத்திற்குக் காரணமாக அமைந்துவிட்டது என்பதும் உண்மையே. பத்சேபாளுடைய அறியாமையின் சிறிய பாவமானது—அதாவது, எவ்விதச் சிந்தனையுமின்றி கவனக்குறைவாகத் தாவீதுக்கு முன்பாகத் தன்னை வெளிப்படுத்திய அவளுடைய சிறிய செயலானது—“சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!” (யாக்கோபு 3:5) என்னும் வேதவசனத்திற்கு ஏற்ப, ஒரு பெரிய தீப்பிழம்பை உண்டாக்கி, காட்டையே எரித்த தீப்பொறியைப் போல மாறிவிட்டது.
ஒருபுறம் பார்த்தால், பத்சேபாளைப் பொறுத்தவரை அது தாவீதின் கண்களுக்கு முன்பாகச் சற்று கவனக்குறைவாக நடந்துகொண்ட செயலாகவும், சற்றுச் சிந்தனையற்ற மற்றும் தற்செயலாக நடைபெற்ற ஒரு நிகழ்வாகவுமே இருக்கிறது. ஆனால் மறுபுறம் பார்த்தால், தாவீதைப் பொறுத்தவரை அது விபசாரமாகவும், மனசாட்சியைக் குற்றப்படுத்தும் செயலாகவும் மாறிவிட்டது. மேலும், இது கொலைக்கும், அவளுடைய கணவனின் இழப்பிற்கும், ஏதும் அறியாத போர்வீரர்களின் மரணத்திற்கும் வழிவகுத்துவிட்டது.
இவை மட்டுமின்றி, தேவனுடைய சத்துருக்கள் அவரைத் தூஷிப்பதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது; முறையற்ற கர்ப்பம் தரித்த அவமானத்திற்கும், ஒன்றும் அறியாத குழந்தையின் மரணத்திற்கும் ஏதுவானது. பின்னாட்களில் அப்சலோம் தன் தந்தையை எதிர்த்துக் கலகம் செய்வதற்கும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட போரில் அவன் மரணமடைவதற்கும் இதுவே காரணமாக அமைந்தது. மேலும், இஸ்ரவேல் மக்கள் அனைவருடைய கண்களுக்கு முன்பாகவும் தாவீதின் மனைவிகள் தீட்டுப்படுத்தப்பட்ட தவறான செயலுக்கும், தாவீதின் குடும்பத்தார் ஒருவரையொருவர் வெட்டிக் கொலை செய்யும் சூழல் உண்டானதற்கும் பத்சேபாளின் ஒரு சிறிய பாவமே காரணமாக அமைந்துவிட்டது (2 சாமுவேல் 12:11-18).