அன்பே உருவான தேவன் பாவ இருளுக்குள் மறைந்து போன மனித உறவைத் தேடி வந்தார். “உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9) என்று வேதம் கூறுகிறது.
நம்மை படைத்த தேவனிடமிருந்து; மனிதனைப் பிரிப்பதே பாவம். மனிதன் தன் ஆத்துமாவை இழந்தது மட்டுமின்றி படைத்த தேவனையும் கூட அறியாதபடி மறைத்தும், நிலையற்றதை நிலையானதென்றும், நல்லதைச் செய்ய முடியாமல் மனிதனைக் கட்டிப் போட்டும், தீமையை தீமையென அவன் அறிந்துக்கொள்ள முடியாதபடி அது அவனை விட்டுவிடாதபடி பற்றிக் கொண்டும் இருக்கும் மாயையே பாவ இருளாகும்.
இதை வேதம் இப்படியாகக் சொல்லுகிறது: நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல் விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால் நான் அல்ல எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? (ரோமர் 7:18-24)
பாவ இருளினால் தன்னைத் தானே மறைத்து உணர்வற்ற நிலையில் இருக்கும் மனித ஆத்துமாவை தேவன் உணர்த்தி உயிர்ப்பித்தால் உணர்வடைந்து இயல்பான நிலைக்குத் திரும்பும் வல்லமை கொண்டது.
அன்பான தேவன் மனிதனது பாவநிலையை நீக்கி அவனோடு ஐக்கியம் கொள்ளும்படியாய் அவரது பரலோக வாழ்வை விட்டு பூமியிலே இரத்தமும் சதையும் கொண்ட மனிதனாய் பாவமின்றி கன்னி மரியாளின் கற்பத்தில் பிறந்தார். பாவ இருளை நீக்குவதற்காக ஒளிப்பிரவாகமான தேவன் சத்தியத்தைக் கொண்டு பூமியில் உதித்தார். அவரே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.” (மத்தேயு 1:23) என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது.
இயேசு என்ற கிரேக்க வார்த்தைக்கு தமிழிலே மீட்பர் எனப் பொருள்படும். அதாவது பாவத்திலிருந்து நம்மை காப்பாற்றுபவர் என்பதே அதன் அர்த்தம். உணர்வற்ற நிலையில் இருக்கும் ஆத்துமாவை தேவனுடைய வல்லமையினாலும், தேவ பலத்தினாலும் உயிர்ப்பிக்க தேவன் சித்தம்கொண்டார். தேவனுடைய வார்த்தையை மீறியதால் ஏற்பட்ட மனிதனுடைய பாவ இருளை தனது மரண பரியந்தமான கீழ்ப்படிவினால் நீக்கும்படியாக அவர் (இயேசு கிறிஸ்து) மனிதனாக பிறந்தார். பூமியிலே இயேசு 100 சதவீதம் மனிதனாகவும், 100 சதவீதம் தேவனாகவும் அவர் மனிதனாக இருந்தப்போது பசித்திருந்தார்; களைத்திருந்தார்; கண்ணீர் விட்டார். பாடுகள் அனுபவித்தார். மரித்தார். (இயேசு கிறிஸ்து) தேவனாக இருந்தபோது மரித்தோரை உயிரோடெழுப்பினார். கடல் மேல் நடந்தார். புயலை அடக்கினார். பிசாசுகள் அவரை அறிக்கையிட்டு அடங்கிப் போயின. மனிதனின் பாவங்களை இரட்சித்து மீட்பளிக்கிறார். மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். பரத்திற்கு ஏறி சென்றார்.
இவையாவும் தொலைந்து போனதைத் தேடும் தேவனின் செயல்பாடுகளே! மனிதன் தனது ஆத்துமாவை மறந்த நிலையில் அழிவுக்கு வைக்கப்பட்டிருக்கும் தனது பொருள், நிலம், வீடு, மற்றும் உறவினர் சுற்றத்தார் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளான். ஆனால் ஆத்துமாவிலோ அக்கறையின்றி இருக்கிறான். இது ஒரு பெரிய வஞ்சகமாகும். அதுதான் ஆதிபீதாக்களான ஆதாம் ஏவாள் மீறுதலின் பாவமாகும். “தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத் தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஸ்திரீயானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும் பார்வைக்கு இன்பமும் புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு அதின் கனியைப் பறித்து புசித்து தன் புருஷனுக்கும் கொடுத்தாள் அவனும் புசித்தான்.” (ஆதியாகமம் 2:12, 3:8) அதனால் மனித ஆத்துமா மரித்தது. அதற்கு ஜீவனை கொடுக்கவே இயேசு பூமிக்கு வந்தார். அவர் உலகத்தில் இருந்தார் உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார் அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள் இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல் தேவனாலே பிறந்தவர்கள். (யோவான் 1:10-13)
அன்பானவர்களே! துன்பங்கள், துயரங்கள், வேதனைகள் மத்தியிலும் இருக்கும் நமக்கு கிருபையில் ஐஸ்வரியம் கொண்டுள்ள தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உன்னதமான அவரிடமிருந்து வழி தப்பிச் சென்ற அவருடைய சொந்த ஜனங்களாயிருக்கிறீர்கள். அவருடைய பரிசுத்தமான அன்புதான் உங்களை அழைத்துச் செல்லவே இப்பூமியிலே பிறந்தார்.
“கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்;” (எசேக்கியேல் 33:11). "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” (ரோமர் 5:8). "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (ரோமர் 6:23). "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்." (1 தீமோத்தேயு 1:15). நம்முடைய பாவங்களினால் நாம் பரிசுத்த தேவனுக்கு முன்பாக நிற்க முடியாது என்பதை அறிந்து தேவனிடம் பாவ மன்னிப்பை கேட்பவன் இரட்சிக்கப்படுகிறான். உன்னை நீ பாவி என்று உணர்ந்து பரிசுத்த தேவனிடம் வருவதற்கு இந்த வாய்ப்பை இன்றே பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது, உங்கள் பாவங்களை இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிடம் கொண்டு வாருங்கள். அவர் ஒருவர் மட்டுமே உன் பாவங்களை மன்னித்து உனக்கு நித்திய சமாதானத்தையும், நித்திய ஜீவனையும்த் தருபவர்.
"கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்." (ரோமர் 10:9). "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் ஆதாவது (பெற்றுக்கொண்டவர்கள்) எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.” (யோவான் 1:12). "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொன்னார்," (அப்போஸ்தலர் 16:31).