12
அதைச்சுற்றி பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன.
13
கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன.
14
நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக் குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
15
என்னோடு பேசியவர் நகரையும் அதன் மதிலையும் வாயில்களையும் அளக்கும்பொருட்டுப் பொன்னாலான ஓர் அளவுகோலை வைத்திருந்தார்.
16
அந்நகரம் சதுரமாய் இருந்தது: அதன் நீளமும் அகலமும் ஒரே அளவுதான். அவர் அந்த அளவுகோலைக் கொண்டு நகரை அளந்தார். அதன் அளவு இரண்டாயிரத்து நானூறு கிலோ மீட்டர். அதன் நீளம், அகலம், உயரம் எல்லாமே ஒரே அளவுதான்.
17
பின் அவர் மதிலை அளந்தார். அதன் உயரம் இருநூற்றுப் பதினாறு அடி. மனிதரிடையே வழக்கில் இருந்த அளவைகளையே அவரும் பயன்படுத்தினார்.
18
அதன் மதில் படிகக் கற்களால் கட்டப்பட்டிருந்தது. அந்நகரோ தூய்மையான, கண்ணாடி போன்ற பசும்பொன்னால் ஆனது.
19
நகர மதிலின் அடிக்கற்கள் விலையுயர்ந்த எல்லாவித கற்களாலும் அணிசெய்யப்பட்டிருந்தன: முதலாவது படிகக் கல், இரண்டாவது நீலமணி, மூன்றாவது பலவண்ணப்படிகம், நான்காவது மரகதம்:
20
ஐந்தாவது கோமேதகம், ஆறாவது மாணிக்கம், ஏழாவது பொற்கல், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புட்பராகம், பத்தாவது வைடூரியம், பதினொன்றாவது பதுமராகம், பன்னிரண்டாவது சுகந்தி.
21
பன்னிரண்டு வாயில்களும் பன்னிரண்டு முத்துகளால் ஆனவை. ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு வகையான முத்தால் ஆனது. நகரின் தெரு தௌளத் தெளிவான கண்ணாடிபோன்ற பசும்பொன்னால் ஆனது.
22
நகருக்குள் கோவில் காணப்படவில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே அதன் கோவில்.
23
அந்நகருக்கு ஒளி கொடுக்கக் கதிரவனோ நிலாலோ தேவைப்படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி: ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.
24
மக்களினத்தார் அதன் ஒளியில் நடப்பர்: மண்ணுலக அரசர்கள் தங்களுக்குப் பெருமை சேர்ப்பவற்றையெல்லாம் அங்குக் கொண்டு செல்வார்கள்.
25
அதன் வாயில்கள் நாள் முழுவதும் திறந்திருக்கும். அங்கு இரவே இராது.
26
உலகின் பெருமையும் மாண்பும் எல்லாம் அங்குக் கொண்டு செல்லப்படும்.