வெளிப்படுத்தல் 18:9-19 - WCV
9
அந்நகரோடு பரத்தைமையில் ஈடுபட்டு இன்பம் துய்த்து வாழ்ந்த மண்ணுலக அரசர்கள் அவள் எரியும் போது எழும் புகையைப் பார்த்து அழுது மாரடித்துப் புலம்புவார்கள்.
10
அவள் படும் வேதனையைக் கண்டு அஞ்சித் தொலையில் நின்று கொண்டு, “ஐயோ! மாநகரே நீ கேடுற்றாயே! அந்தோ! வலிமை வாய்ந்த பாபிலோனே உனக்குக் கேடு வந்ததே! ஒரே மணி நேரத்தில் உனக்குத் தீர்ப்பு வந்துவிட்டதே.” என்பார்கள்.
11
மண்ணக வணிகர்களும் அவளை நினைத்து அழுது புலம்புவார்கள். ஏனெனில் அவர்களுடைய சரக்குகளை இனி வாங்குவார் எவரும் இலர்.
12
பொன், வெள்ளி, விலையுயர்ந்த கல், முத்துகள், விலையுயர்ந்த மெல்லிய ஆடை, கருஞ்சிவப்பு ஆடை, பட்டாடை, செந்நிற ஆடை, பலவகை மணம் வீசும் மரக்கட்டைகள், தந்தத்தினாலான பலவகைப் பொருள்கள், விலையுயர்ந்த மரம், வெண்கலம், இரும்பு, சலவைக்கல் ஆகியவற்றாலான பொருள்கள்,
13
இலவங்கம், நறுமணப் பொருள்கள், தூப வகைகள், நறுமணத் தைலம், சாம்பிராணி, திராட்சை மது, எண்ணெய், உயர்ரக மாவு, கோதுமை, ஆடுமாடுகள், குதிரைகள், தேர்கள், அடிமைகள் ஆகிய மனித உயிர்கள் ஆகியவற்றையெல்லாம் வாங்க எவரும் இலர்.
14
“நீ விரும்பிய கனிகள் உன்னைவிட்டு அகன்றுபோயின: உன் மினுக்கு, பகட்டு எல்லாம் ஒழிந்துபோயின: இனி யாரும் அவற்றைக் காணப் போவதில்லை” என்பார்கள்.
15
இச்சரக்குகளைக் கொண்டு அவளோடு வாணிகம் செய்து செல்வம் திரட்டியவர்கள் அவளது வேதனையைக் கண்டு அஞ்சி, தொலையிலேயே நின்ற வண்ணம் அழுது புலம்புவார்கள்.
16
“ஐயோ, மாநகரே, நீ கேடுற்றாயே! விலையுயர்ந்த மெல்லிய ஆடையும் செந்நிற கருஞ்சிவப்பு உடையும் அணிந்து, பொன், விலையுயர்ந்த கல், முத்துகளால் அணிசெய்து கொண்டவளே! அந்தோ! உனக்குக் கேடு வந்ததே!
17
இவ்வளவு செல்வமும் ஒரே மணி நேரத்தில் பாழாய்ப் போய்விட்டதே” என்பார்கள். கப்பல் தலைவர்கள், கடல் பயணிகள், கப்பலோட்டிகள், கடல் வணிகர்கள் ஆகிய அனைவரும் தொலையிலேயே நின்றார்கள்.
18
அவள் எரிந்தபோது எழுந்த புகையைப் பார்த்து “இம்மாநகருக்கு இணையான நகர் உண்டோ!” என்று கதறினார்கள்.
19
அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டு அழுது புலம்பினார்கள்: “ஐயோ, மாநகரே, நீ கேடுற்றாயே! கடலில கப்பலோட்டிய அனைவரையும் தன் செல்வச் செழிப்பால் செல்வராக்கிய நீ ஒரே மணிநேரத்தில் பாழடைந்து விட்டாயே!” என்று கதறினார்கள்.